(அதிகாரம் 013. அடக்கம் உடைமை தொடர்ச்சி)

arangarasan_thirukkural_arusolurai_attai

01.அறத்துப் பால்.                

02.இல்லற இயல்                 

அதிகாரம்   014. ஒழுக்கம் உடைமை

 

நல்லவற்றையே சிந்தித்தும், சொல்லியும்,

செய்யும் வாழ்வியல் உயிர்நெறி

 

  1. ஒழுக்கம், விழுப்பம் தரலான், ஒழுக்கம்,

   உயிரினும், ஓம்பப் படும்

 

  சிறப்புத் தருகின்ற ஒழுக்கத்தை,

  உயிரைவிடவும் உயர்வாய்க் காக்க.

 

  1. பரிந்(து),ஓம்பிக், காக்க ஒழுக்கம்; தெரிந்(து),ஓம்பித்

    தேரினும், அஃதே துணை.

 

எவ்வளவு வருத்தினும், ஒழுக்கமே,

காக்க வேண்டிய ஆக்கத்துணை.

 

  1. ஒழுக்கம் உடைமை, குடிமை; இழுக்கம்,

   இழிந்த பிறப்பாய் விடும்.

 

       ஒழுக்கம் உண்மை, உயர்குடிப்பிறப்பு;

       ஒழுக்கம் இன்மை, இழிபிறப்பு.

 

  1. மறப்பினும், ஓத்துக் கொளல்ஆகும்; பார்ப்பான்,

     பிறப்(பு)ஒழுக்கம் குன்றக் கெடும்.

 

  மறந்ததை நினவுகொள்ளலாம்; ஒழுக்கம்

 மறந்தால், பார்ப்பானும் கெடுவான்.

 

  1. அழுக்கா(று) உடையான்கண், ஆக்கம்போன்(று) இல்லை,

     ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

 

  பொறாமையர்க்கு வளர்ச்சியும் இல்லை;

ஒழுக்க[ம்இ]லார்க்[கு] உயர்வும், இல்லை.

 

 

  1. ஒழுக்கத்தின் ஒல்கார், உரவோர், இழுக்கத்தின்,

     ஏதம் படுபாக்(கு) அறிந்து.

 

       “ஒழுக்கம் தவறின், துயரமே”என,

       அறிந்தார், ஒழுக்கம் தவறார்.            

 

  1. ஒழுக்கத்தின் எய்துவர், மேன்மை; இழுக்கத்தின்

     எய்துவர், எய்தாப் பழி.

 

  ஒழுக்கத்தால் மேம்பாடும், ஒழுக்கக்கேட்டால்

வாராப் பழியும் வரும்.

 

  1. நன்றிக்கு வித்(து)ஆகும், நல்ஒழுக்கம்; தீஒழுக்கம்,

     என்றும் இடும்பை தரும்.

 

  நல்ஒழுக்கம் இன்பத்திற்கு விதைஆம்;

தீஒழுக்கம் துன்பத்திற்கு, விதைஆம்.    

 

  1. ஒழுக்கம் உடையார்க்(கு) ஒல்லாவே, தீய,

     வழுக்கியும் வாயால் சொலல்.

 

       வாய்தவறியும், தீய சொற்களைக்,

       கூறல் ஒழுக்கத்தார்க்குப் பொருந்தாது.    

 

  1. உலகத்தோ(டு) ஒட்ட ஒழுகல், பலகற்றும்

     கல்லார், அறி(வு)இலா தார்.

 

உயர்ந்தாரோடு பொருந்த நடவாதார்,

பலநூல்கள் கற்றும், கல்லாதார்.

 – பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 015. பிறன் இல் விழையாமை)