no-alcohol-madu vendaa01  மதுவைத் தொடாதே !- மனிதா!

kavignar muthusamy

மதுவைத் தொடாதே !- மனிதா
மதுவைத் தொடாதே !
மனதும்கெடும் உடலும்கெடும்
மறந்து விடாதே !

போதைதரும் மதுவினையே
குடிக்கத் தொடங்கினால் -உந்தன்
பாதைமாறிப் போய்விடுமே
பயணம் தடுமாறிடுமே !

மட்டையாக்கும் மதுவை – நீயும்
சட்டைசெய்யாதே !
கட்டையாகிப் போகுமுடல்
பட்டை யடிப்பதாலே !

(மதுவைத் தொடாதே)

பாடுபட்ட உழைப்பை -நீயும்
பார்க்கத் தவறினால்
கேடுகெட்ட மதுவுமுன்னைக்
கைதி ஆக்குமே !

குடும்பம் தெருவில் நிற்பதற்குக்
குடியும் காரணம் – உன்னை
மடியேந்த வைத்திடுமே !
மகிழ்ச்சியெலாம் தொலைத்திடுமே !

(மதுவைத் தொடாதே)

அசதிபோகக் குடிப்பதாக
அடம்பிடிக் காதே ! – உந்தன்
வசதிவாழ்க்கை அழிந்துவிடும்
வறுமை மிஞ்சிடும் .

குடித்துவிட்டால் மனிதனில்லை -நீ
விலங் காகிறாய் .
படிக்கும் பிள்ளை பள்ளியிலும்
மானம் போய்விடும்.

(மதுவைத் தொடாதே)

புட்டிமதுவைக் குடித்துவிட்டே – நீ
புலம்பித் திரிகிறாய் ;
கட்டிய மனைவி கண்கலங்க
கவிழ்ந்து கிடக்கிறாய்.

 – கவிஞர் முத்துச்சாமி