(திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 1/4 தொடர்ச்சி)

முனைவர் கு.மோகனராசின் திருவள்ளுவர் அகப்பொருள் நெறி

நூலாய்வுக் கட்டுரை – 2/4

மூன்றாம் பக்கம் முதல் எட்டாவது பக்கம்வரை நூலாசிரியரின் விரிவான — விளக்கமான முன்னுரை  பக்கம் 3 முதல் 8 வரை 6 பக்கங்களில் விளங்குகின்றது. அதில் கீழ்க் காணும் கருத்தாக்கங்கள் கூறப்பட்டுள்ளன.

  • 1. அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப் பொருள்கள்   மாந்தர்க்கு  உயர்நெறி வழங்கத் திருவள்ளுவர்  எண்ணியமை
  • 2. தலைவன், தலைவி பெறத்தக்க இன்பத்தை  மூன்றாம் பாலாக ஆக்கியமை திருவள்ளுவரது புதிய அணுகு முறை.
  • 3. திருவள்ளுவர் அகப்பொருள் நெறி, உலகப் பொதுமறையா கிய திருக்குறளில் காமத்துப் பாலும் உலகப் பொது நெறியே என்னும் கருத்து.   
  • 4. காமத்துப்பாலில் திருவள்ளுவர் செய்துள்ள அகப்பொருள் மாற்றங்கள் 20 அளிக்கப்பட்டுள்ளன.
  • 5. நூல் உருவாக்கப் பின்புலம் பற்றிய நூலாசிரியரின் பதிவு
  • 6. நூற் பயன் பற்றி நூலாசிரியர் நுவன்றமை
  • 7. நூல் வெளியீட்டுக்கு உதவியவர்க்கு நன்றி  தெரிவிப்பு

     நூலின் மொத்தப் பக்கங்கள்  24.

5.2.0.0. நூலின் அகக்கட்டமைப்பியல் முறைமை:

            இந்நூலில்  திருவள்ளுவர் இயற்றிய காமத்துப்பாலிலிருந்து பிழிந்தெடுத்த விழுமிய நூற்பாக்கள் 133 விளங்குகின்றன. இந் நூற்பாக்கள் 37 தலைப்புகளின்கீழ்த் தரப்பட்டுள்ளன.

            37 தலைப்புகளும் ஒவ்வொன்றின் கீழும் எத்தனை எத்தனை நூற்பாக்கள் உள்ளன என்பதையும் காண்போம்.அவை:

1.அறிமுகம் — 1  

2.காமம்– 1

3.பாடல் வடிவம் — 1

4.திணைப் பகுப்பு — 1

5.நாடக வழக்கு — 1 

6.அகப்பொருள் தலைமக்கள் — 3

7.பெயர் வரும் முறைமை — 3

8.கூற்று முறைமை — 6

9.நிலம் — 1

10.பொழுது — 1

11.பிரிவு [பொது] — 5

12.களவு — 2

13.ஐயங்கள் — 5

14.தகையணங்குறுத்தல் — 2

15.குறிப்பறிதல் — 7

16.களவில் புணர்ச்சி — 2

17.மடல் — 4

18.அலர் — 6

19.புணர்ச்சி மகிழ்தல் — 5

20.நலம் புனைந்துரைத்தல் — 5

21.காதல் சிறைப்புரைத்தல் — 4

22.புணர்ச்சியில் பிரிவு — 5

23.படர் மெலிந்து இரங்கல் — 3

24.கண்விதிப்பு அழிதல் — 2

25.பசப்புறு பருவரல் — 5

26.தனிப்படர் மிகுதி — 4

27.நினைந்தவர் புலம்பல் — 3

28.கனவு நிலை உரைத்தல் — 4

29.பொழுது கண்டு இரங்கல் — 7

30.உறுப்பு நலன் அழிதல் — 2

31.நெஞ்சொடு கிளத்தல் – 4

32.நிறையழிதல் — 4

33.அவர்வயின் விதும்பல் — 2

34.புணர்ச்சி விதும்பல் — 2

35.நெஞ்சொடு புலத்தல் — 4

36.புலவி — 10

37. ஊடல் உவகை — 7

6.0.0.0. நூலாசிரியரின் பன்னூல் நுண்ணறிவு:

இந்நூல் மேலோட்டமாகப் படிப்பதற்கு உரிய நூல் அன்று. அணுகி, நுணுகி,உணர்ந்து படித்து உள்ளத்தால் படம்பிடிக்க வேண்டிய  உயரிய இலக்கண நூல்.

இக்காலத்தர் எழுதிய நூல்போல் இந்நூல் தோன்றாது. பழங் காலப் புலவர் ஒருவர் படைத்த இலக்கண நூல்போல் தோன்றும். நூலாசிரியர் முன்பு கவிஞர் எழிலரசாகத் திகழ்ந்தவர்.  எனவே, அவரது கவிதை யாப்பாற்றலை இந்நூல் கவினுறக் காட்டுகிறது; கவித் திறனை நாட்டுகிறது.

தொல்காப்பிய, நன்னூல்  நூலறிவு, சங்க இலக்கியப் பேரறிவு, நம்பியகப் பொருள் போன்ற  அகப்பொருள் நூலறிவு போன்ற பன்னூலறிவு பெற்றவர் என்பதை இந்நூல் முற்றுற மொழிகிறது. .

  • 7.0.0.0. தரவுகள் திரட்டிய முறைமை:

            திருவள்ளுவர் வடித்த காமத்துப்பால் என்னும் மூன்றாம் பாலில் உள்ள அகப்பொருள் நெறிகள் உரையாசிரியர்கள் உ ரைப்பதுபோல், வடவர் நெறியும் அன்று; தமிழறிஞர்கள் தெரிவிப்பதுபோல் தமிழர் நெறியும் அன்று.

            அது உலகப் பொதுமையியல் சார்ந்த அகப்பொருள் நெறி என நிலைநாட்டல் வேண்டும் என்பது நூலாசிரியரின் மேலான வேட்கை நாட்டத்தைக் காட்டுகிறது. அதனால், காதல் ஊட்டம் மிக்க காமத்துப்பாலை நூலுக்குத் தரவாகக் தேர்ந்துள்ளார்.

            மேலும் காமத்துப்பாலில் உள்ள 25 அதிகாரத் தலைப்புகளில் 20 அதிகாரத் தலைப்புகளைத்  தரவுகளாகத் திரட்டியுள்ளார்

 மேற்குறிப்பிட்ட 20 அதிகாரத் தலைப்புகள் அகக்கட்டமைப் பியல் முறைமை என்னும் பகுதியில் அளிக்கப்பட்டுவிட்டன. எனவே, இங்கு அவை அளிக்கப்படவில்லை.

8.0.0.0. வகைதொகை செய்துள்ள முறைமை:

            ஓர் ஆய்வு நூல் செம்மையும் சீர்மையும் பெற்று வெற்றிச் சிறப்புடன் விளங்கல் வேண்டும் என்றால், நூலாய்ஞர் தரவுகளைத் திரட்டித் தொகுத்து, அவற்றை வகை செய்தல் வேண்டும். நூலாய்ஞரின் ஆய்வுத் திறனும் வகைதொகை செய்வதில்தான் விளங்கும்.    

            இந்நூலின் தரவுகள், காமத்துப்பாலின் 25 அதிகாரங்களில்  உள்ள 250 குறட் பாக்களின் தொகையாம். இவற்றை 37 தலைப்புகளில் வகைப்படுத்தியுள்ளார். 37 தலைப்புகளும் 2 வகைகளில் அமைத்துள்ளார்.          

அகப்பொருள் இலக்கிய நெறிகள்

நிலம் பொழுது ஆகியவற்றை  உள்ளடக்கிய முதம் பொ ருள், நிலத்தைக் கருவாகக் கொண்டிருக்கும் பொருள்களை உள் ளடக்கிய  கருப்பொருள், 5 வகை நிலங்களுக்கும் உரிய ஒழுக் கங்களை உள்ளடக்கிய உரிப்பொருள் என அமையும்.

(தொடரும்)

              பேராசிரியர் வெ.அரங்கராசன்

     முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்

    கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி                      

  கோவிற்பட்டி — 628 502, கைப்பேசி: 9840947998

   மின்னஞ்சல்: arangarasan48@admin