கடவுள் எப்போது கவலைப் பட்டார் ?

உண்டு என்றால் ஒற்றை மகிழ்ச்சி !
இல்லை என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி!
ஆன்மீ கத்தில் அகப்படும் கடவுள்
நாத்திகத்தில் விடுதலையாகிறார் !
தோண்டிப்பார்த்தும் கிடைக்காதோர்க்குத்
தொண்டின் வழியாய்த் தொடர்புகொள்கிறார்!
உண்டெனச்சொல்லிஉடைகிற மண்டையில்
ஔிந்துகிடந்து உருக்குலைவதனால்

தன்னம்பிக்கை என்னும் பெயரில்
தளர்வறியாமல் தாவிக்குதித்து
நாத்திகக் கடவுள் நலமாய் இருக்கிறார்!
நாத்திகக் கடவுள் நலமாகவே இருக்கிறார் !

நாத்திகம் அவரைப் பூட்டுவதில்லை!
நடைகளைச் சாத்தும் தனிமையுமில்லை!
காத்திருந்துவரம் கேட்பதுமில்லை!
காதுகள் வலிக்கும் கோரிக்கையில்லை!
ஆத்திரம்தீர அழுவதுமில்லை!
அடிக்கடி அழைத்து அலைக்கழிப்பதில்லை!
கூத்துகள் ஆயிரம் ! ……கூப்பிடுவதில்லை!
கூக்குரல் போட்டு உடைவதுமில்லை !

தன்னம்பிக்கை என்னும்பெயரில்
தளர்வறியாமல் தாவிக்குதித்து
நாத்திகக் கடவுள் நலமாயிருக்கிறார் !
நாத்திகக் கடவுள் நலமாகவே இருக்கிறார் !

அவரைப்பிரித்து ஆள்வதுமில்லை!
அவர்பெயரால் இகழ் செய்வதுமில்லை !
சுவர்கள் இல்லா எல்லைகள் போட்டுச்
சுருண்டு கிடக்கப் பணித்ததுமில்லை !
அவர்தலை தவறுகள்சுமக்கவும்வைத்து
அவசரவிதிகளை அனுமதிப்பதில்லை !
அவரவர் கடவுள் அவரவர்க்கு
ஆழம்பார்க்க அவசியமில்லை !

தன்னம்பிக்கை என்னும் பெயரில்
தளர்வறியாமல் தாவிக்குதித்து
நாத்திகக் கடவுள் நலமாக இருக்கிறார் !
நாத்திகக் கடவுள் நலமாகவே இருக்கிறார் !

 

– கவிக்கோ துரை வசந்தராசன்