நல்லக்கண்ணு…நல் மேய்ப்பன் நீடுவாழி!

நூல்பிடித்தாற் போல்நடத்தும் வாழ்க்கை ! நெஞ்சில்

நெருப்புக்கும் சூடளிக்கும் நேர்மை !பேசும்

நூல்நிலையம் !பல்கலையின் கழகம்! என்றும்

நுரைத்தாலும் நிறுத்தாத உழைப்பு !அன்பால்

பால்மடிபோல் கனத்திருக்கும் தாய்மை ! கேட்டுப்

பாருங்கள் அவர்பெயர்தான் நல்லக்கண்ணு !

பால்மனத்தார் நேர்முகத்தார் நலமாய் நூறு

பனைபூக்கும் நாள்தாண்டி வாழ வேண்டும் !

எளிமைக்கும் எளிமைதரும் வலிமை யாளர் !

எதிர்ப்பஞ்சாப் போர்வீரர் !போராட் டத்தில்

துளிர்ப்பதுதான் வாழ்வென்ற கொள்கைக் குன்று !

துளியேனும் நெளியாத நெம்பு கோலர் !

வளிபரப்பை வியர்வையினால் நிரப்பி வைத்து

வழிமணக்க பயிர்விளைக்கும் தோட்டக் காரர் !

நெளியாத ஒன்றாமிவர் நல்லக் கண்ணு

நீர்நிலம்வான் காற்றுளவரை வாழ வேண்டும் !

விரிவானப் பரப்புதனை விஞ்சும் நெஞ்சம் !

விழுமழைக்கே தூய்மைதரும் வெள்ளைப் பேச்சு !

பெரியாரை வள்ளலாரைப் புத்தம் தம்மைப்

பேசல்போல் செயலாற்றும் தலைமைத் தொண்டர் !

நரிக்காட்டில் நமைக்காக்க வந்த மேய்ப்பன் !

நல்லகண்ணு நம்காலப் புனிதக் குன்று !

சரியாக மனிதத்தைப் புரிந்த தோழர்

சரித்திரத்தின் பக்கமெலாம் நிறைக்க வாழி !

கவிக்கோ துரைவசந்தராசன்
பண்ணைத்தமிழ்ச்சங்கம்