வெருளி நோய்கள் 1491-1495: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1486-1490-தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1491-1495
- நீரிழிவு வெருளி-Diabetophobia
நீரிழிவு தொடர்பான தேவையற்றஅளவு கடந்த பேரச்சம் நீரிழிவு வெருளி.
போதிய கணைய நீர் சுரக்காமையால் இந்நோய் ஏற்படுகிறது.
நீரிழிவின் பக்க விளைவுகளான அளவுகடந்த பசி, உடல் சோர்வு, உடல் இளைத்தல், தலை சுற்றுதல்,மயக்கம், கை, கால்களில் விரைப்புத் தன்மை, உடலில் பருக்களும், கட்டிகளும் தோன்றல், இனப்பெருக்க உறுப்புகளில் அழற்சி, பார்வைக் குறைவு, புண்கள் ஏற்படின் அவை மெதுவாக ஆறுதல், எளிதில் சினம் அடைதல், மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறுகள், பக்கவாதம், கால்களை இழத்தல், உயர் இரத்த அழுத்தம், இறப்பு போன்றவை குறித்து அளவு கடந்து அச்சம் கொள்ளுதல்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். (திருக்குறள் 942)
அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு. (திருக்குறள் 943)
முதலிய திருவள்ளுவரின் நெறிகளைப்பொதுவாக அனைவரும் குறிப்பாக நீரிழிவு நோயினரும் கடைப்பிடித்தால் இந்நோய்ச் சிக்கலில் இருந்து மீளலாம்.
“யா காவராயினும் நா காக்க” என்பது சொல்லுக்கு மட்டுமல்ல, இங்கே நோய்க்கும் பொருந்துகிறது.
சில நேரங்களில் நீரிழிவு நோய்க்கு ஆளானவர்களை விட அவர்களின் குடும்பத்தினருக்கு நீாிழிவு வெருளி ஏற்படும்.
இந்நோயர்களுக்கு, மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகத்தினர் உடுத்தும் வெள்ளாடைகளால் வெள்ளாடை வெருளியும் அன்றாடம் அல்லது அடிக்கடி ஊசி போட்டுக்கொள்வ்தால் மருந்தூசி வெருளி(Trypanophobia)யும் ஏற்படுவதுண்டு.
00
- நீரூற்று வெருளி – Syntrivaniphobia
நீரூற்று தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நீரூற்று வெருளி.
நீரூற்று காண மகிழ்ச்சியும் அடைவார்கள். அதே நேரம் நீர்த்திவலைகள் உடைகளில் தெறிக்கும் என்றும் மேலே தெறிப்பதால் நலக்குறைவு ஏற்படும் என்றும் பெருங்கவலையும் பேரச்சமும் கொள்வர்.
நீர்வெருளி(aquaphobia), நீர் மூழ்கிப் பொருள் வெருளி(submechanophobia), நீர் மூழ்கி வெருளி(Qonshungphobia) உள்ளவர்களுக்கு நீரூற்று வெருளி வர வாய்ப்புள்ளது.
Syntrivani அல்லது Sintrivani என்பது நீரூற்று என்னும் பொருள் கொண்ட şadırvan என்னும் துருக்கியச் சொல்லில் இருந்து உருவானது.
00
- நீரோடை வெருளி – Potamophobia/Potomophobia
நீரோடை(running water) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நீரோடை வெருளி
நீரில் அடித்துச் செல்லப்படுவோம், நீர்நிலைகளில் உள்ள உயிரிகளால் உயிருக்குப் பேரிடர் ஏற்படும், ஆற்றில் இறங்காமலேயே நீர்ச்சுழியால் இழுக்கப்பட்டு மூழ்கடிக்கப்படுவோம், உயிர் இழக்க நேரும் என்றெல்லாம் தேவையின்றி அச்சம் கொள்வோர் உள்ளனர். இவ்வாறான ஆறு, கால்வாய் முதலான ஓடும் நீர் உள்ள நீர்நிலைகள் குறித்த காரணமற்ற அச்சமே நீரோடை வெருளி.
potamo என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் ஆறு.
00
- நீர்ச்சறுக்கு வெருளி – Nerolabiturphobia
நீர்ச்சறுக்குமீதான அளவுகடந்த பேரச்சம் நீர்ச்சறுக்கு வெருளி.
சறுக்கி விழுவதால் மயக்கம் வரும், தலைச்சுற்றல் வரும், வாந்தி வரும் என்பனபோன்ற பேரச்சங்களுக்கு ஆளாவர்.
‘Nerolabitur’ என்பது இலத்தீன் மொழிச் சொல்லாகும். இலத்தீன் வினைச்சொல்லான சரிந்து விழுதல் / நழுவுதல் பொருள்கள் கொண்ட labor என்னும் சொல்லில் இருந்து உருவானது. Labitur என்னும் சொல் சரிந்து விழுகிறார் / நழுவுகிறார் ஆகிய பொருள்களில் பயன்படுகிறது. இங்கே உச்சியிலிருந்து நழுவி சரிந்து விழுவதைக் குறிக்கிறது.
உயர வெருளி(hypsiphobia), உயர்பு வெருளி(acrophobia/altophobia) உள்ளவர்களுக்கு நீர்ச்சறுக்கு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
- நீர்நாய் வெருளி – Lutraphobia
நீர்நாய்(Otter) குறித்து வரும் காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் நீர்நாய் வெருளி.
தொல்லைதரும் விலங்கினங்கள் மீது பொதுவாக வரும் அச்சத்தின் தொடர்ச்சியாக நீர்நாய் மீது, நீர்நாய் பற்றிய சிந்தனையில், அதனால் உயிருக்கு அல்லது உடலுக்கு ஊறுநேரும் எனக் காரணமின்றிப் பேரச்சம் கொள்வர்.
latra என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நீர்நாய்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply