கறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” 

கறுப்பு யூலை 1983 – 37ஆவது  ஆண்டு இணையவழி நினைவேந்தல் 2020 குழுநிலைக் கலந்துரையாடல் – “அவர்கள் எதிர் நாங்கள்”

1983ஆம் ஆண்டு நடந்தேறிய கறுப்பு யூலை தமிழர் படுகொலை மீதான குழுநிலை கலந்துரையாடல் பிரித்தானிய தமிழர் பேரவையினால் (BTF) வருடாவருடம் பிரித்தானியப் பாராளுமன்றில் நடாத்தி வருவது தெரிந்ததே. இவ் வருடம், மகுடை-19 தீவிர நோய்ப் பரவலால் பிரித்தானியப் பாராளுமன்றின் மீது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாகப் பாராளுமன்றில் அல்லாமல், அணுக்கி(Zoom) இணையவழியூடாகக் குழுநிலை கலந்துரையாடலாக எதிர்வரும் ஆடி 08, 2051 / யூலை 23ஆம் நாள்  பிற்பகல் 6:00 மணியிலிருந்து 7.30 மணிவரை நடைபெறவுள்ளது. 

“அவர்கள் எதிர் நாங்கள்”

இவ் வருடம் விவாதக் கருப்பொருளாக “அவர்கள் எதிர் நாங்கள்” (Them Vs Us) என்ற தலைப்பு அமையும். சிங்களப் பௌத்தரல்லாத சமூகங்களின் இருப்புக்கு உலை வைக்கும் விதத்தில் ஓரின, ஒரு மொழி, ஒரு மத இலங்கை என்று நன்கு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நிகழ்ச்சிநிரலை சிங்களத் தேசம் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. “அவர்கள்” வேறு “நாம்” வேறு என்று அடையாளப்படுத்தலில் தொடங்கும் நிகழ்ச்சித் திட்டம் படிப்படியாக மேலும் அடுத்த கட்டங்களில் தீவிரமான விழைவுகளை நோக்கி நகர்த்தப்பட்டு வருவதனை இனவழிப்பு இடம்பெற்ற ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுக் காட்ட முடியும்.

இலங்கை வாழ் தமிழர்கள் பட்டுவரும் துன்பியல் வரலாற்றில் யூலை 1983 தழிழர் படுகொலை என்பது தொடர் வன்முறைகளில் மிகுந்த முதன்மை பெறுவதோடு, படுகொலையைத் தூண்டி விட்ட அரசியல் உள்நோக்கத்தையும் (intent) தோலுரித்துக் காட்டுவதில் முதன்மைத்துவம் பெறுகிறது.

இந்த ஒரு முறைசார் செயல்திட்டத்தை எதிரொலிக்கும் வகையிலும், பல படுகொலைகளுக்கு முகம் கொடுத்து உயிர் தப்பி உலகில் பரந்து வாழும் தமிழர்களை இது குறித்த செய்திகள் சென்றடைவதற்கும், அவர்கள் தங்கள் பட்டறிவுகளைப் பன்னாட்டு மன்பதைக்குக் கொண்டு சேர்க்கும் வகையிலும், மேற்படி கலந்துரையாடல் “அவர்கள் எதிர் நாங்கள்” என்ற கருப்பொருளைத் தலைப்பாகத் தெரிவு செய்துள்ளோம். இலங்கையில் அரசியல் பௌத்த (political Buddhism) நிகழ்ச்சி நிரலினால் தூண்டப்பட்டே இன முரண்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுகின்றது என்பதனை வெளிபடுத்த இக் கருப்பொருள் துணை புரியும்.

கறுப்பு யூலை 1983 படுகொலையில் உயிர் தப்பியவர்களிடமிருந்து சான்றுகளைப் பதிவு செய்தல்

எதிர்காலத்தில் இடம்பெற வாய்ப்புள்ள நீதி விசாரணை நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு இனப்படுகொலையின் பல்வேறு படிநிலைகளையும் ஆவணப்படுத்த முயன்று வருகின்றோம். இனப்படுகொலையை நோக்காகக் கொண்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதை மெய்ப்பிப்பதற்கு நம்பகத் தன்மை கொண்ட சான்றுகளை ஆவணப்படுத்துதல் தலைமையாகிறது. இலங்கையில்  தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற படுகொலையில் உயிர் தப்பி உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடமிருந்து பெறப்பட்ட செய்திகள் அடங்கிய ஒளிப்பதிவுத் தொகுப்பொன்று இக் கலந்துரையாடலின் தொடக்கத்தில்ல் பி. ப. 6.00 – 6.30க்கு காண்பிக்கப்படும். அதனைத் தொடர்ந்து 6:30 மணியிலிருந்து 7.30 மணிவரை பல்வேறு முதன்மையாளர்கள் கலந்து கொள்ளும் குழுநிலை கலந்துரையாடல் இடம் பெறும்.

இதன் மூலம் கறுப்பு யூலை வன்முறையின் பின்னணியில் இழையோடியிருந்த உள்நோக்கத்தை (intent) எடுத்துக் காட்ட நாம் விழைகின்றோம். இச் செய்திகளை வெளிக் கொண்டு வரும் குறிப்பில் பாதிக்கப்பட்டோர் குமுகமே முதன்மையானவர்கள் ஆவர். அவர்களின் பட்டறிவுகளை ஆவணப்படுத்திப், பாதுகாத்து உலகின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முனைகின்றோம்.

எனவே, இலங்கையில் யூலை 1983 தமிழர் படுகொலை,  அது போன்ற ஏனைய படுகொலைகளிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களை நாம் அணுகி வருகின்றோம். தங்களிடமுள்ள நேரடி பட்டறிவினை அறிக்கைகளாகவோ  சான்றுகளாகவோ  வாக்குமூலமாகவோ எம்முடன் பதிவு செய்யுமாறு பணிவாகக் கேட்டுக் கொள்கின்றோம். இனவழிப்பினை ஆவணப்படுத்தும் ஒரு அங்கமாக இதனை மேற்கொள்ளும்போது உங்கள் விருப்பினை அறிந்து எவற்றினை பகிரங்க வெளியில் பகிரலாம் என்பதற்கான ஒப்புதல் ஆவணம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

இந்த நிகழ்வினைக் குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் அறியத் தரப்படும்.

பிரித்தானியத்தமிழர் பேரவை