(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1010 -1020- தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1021-1029

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. செயராமன் – வெற்றி வில்லாளன் (1955)
    கவிஞர் வெற்றி வில்லாளன்,
    தாத்தையங்கார் பேட்டை, திருச்சி மாவட்டம்.
  2. Dearness Allowance – அருமைப்பாட்டுப் படி
    போர்க் காலத்தில் தோன்றிய புதுச் சொற்களில் ’பறக்குங்குண்டு’ என்பது ஒன்று. இதனையே ஆளில்லா விமானம் என்பாரும் உண்டு. ’பஞ்சப்படி’ என்பது பெருவழக்காக வழங்குகிறது. (Dearness Allowance) என்பதை எப்படியோ இப்படி மொழி பெயர்த்துவிட்டனர். ஆயினும் அதனை இனி அருமைப்பாட்டுப் படி என மாற்றப் போவதில்லை.
    நூல் : தமிழோசை (1955), பக்கம் , 89
    நூலாசிரியர் : செந்தமிழ்க் காவலர்
    முனைவர் அ. சிதம்பரநாதன், எம்.ஏ., பிஎச்.டி., (தமிழ்த்துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்)
  3. Light Signal – ஒளி அஞ்சல்
    தந்தி என்பது ஒலிமுறையில் உள்ள பேச்சு மொழியல்ல. மொழியிலுள்ள எழுத்துகளுக்குத் தனி ஒலிக்குறிப்பு வைத்து அவ்வொலிக் குறிப்புகளினால் மொழியை அனுப்பவும் வாங்கவும் உள்ள சாதனமே தந்தி. இதே முறை ஒளி அஞ்சலிலும் (Light Signal) பயன்படுத்தப்படுகிறது.
    நூல் : தமிழில் தந்தி (1955), பக்கம் : 21
    நூலாசிரியர் : அ. சிவலிங்கம்
  4. காபியாசுபிரின் – தலைவலி மாத்திரை
    தலை வலிக்கொரு மாத்திரை, தடுமனுக்கு ஒரு மாத்திரை, தவறுதலா தின்னுப்பூட்டா தருமலோக யாத்திரை என்று மிஃச் மாலினி படத்தில் பாடியுள்ள சுந்தரி பாய், முதன் முதலில் தோன்றியது. காபியாசுபிரின் (தலைவலி மாத்திரை) விளம்பரப் படத்தில்தான்.
    நூல் : சினிமா நட்சத்திரங்களின் இரகசியங்கள் (1955) பக்கம்
    நூலாசிரியர் : சுந்தர்
  5. மகாமகோபாத்தியாயர் – பெரும்பேராசான்
    பண்டிதமணியின் தொண்டுகளை அரசியலார் அறிந்தனர். பட்டம் அளித்துச் சிறப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். 1941 ஆம் ஆண்டு, மன்னர் பிறந்த நாட்கொண்டாட்டம் நிகழ்ந்த போது ‘மகாமகோபாத்தியாயர்’ (பெரும்பேராசான்) என்னுஞ் சிறப்புப் பெயரை வழங்கிப் போற்றினர்.
    நூல் : தமிழ்ப் புலவர் வரிசை (1955), (எட்டாம் புத்தகம்)
    ⁠பக்கம் : 82
    நூலாசிரியர் : சு. அ. இராமசாமிப் புலவர்
  6. மா. மார்க்கபந்து – மா. வழித் துணைவன்
    மா. வழித்துணைவன்
    நாடக ஆசிரியர், கவிஞர், ஆய்வாளர்,
    எழுத்தாளர், திருவள்ளுவர் நாடகம்,
    தென் குமரி தெய்வம் நாவல்
    திருக்குறள் நெறித் தோன்றல்,
    குறள் படைப்புச் செம்மல்
    மார்க்கபந்து என்னும் பெயரை 1955 ஆம் ஆண்டில் மா. வழித்துணைவன் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார் இவர்.
  7. தொலைக்காட்சி
    நாட்டிய நடிகை செளதாமினி ‘சுவருக்கசீமா’வில் தொலைக்காட்சிகளில் பானுமதிக்குப் பதிலாக ஆடியிருக்கிறார்.
    நூல் : சினிமா நட்சத்திரங்களின் இரகசியங்கள் (1955), பக்கம் . 8
    நூலாசிரியர் : சுந்தர்
  8. நவநீத கிருட்டிணன் – பொன்னி வளவன் (1956)
    ஆசிரியர், சிறந்தகவிஞர்
    1029 Botany – பயிரியல்
    ஆங்கிலச் சொற்களையும் பிறமொழிகளிலுள்ள சொற்களையும் தேவையான போது எடுத்தாளலாம் என்பர் சிலர். இப்போது அங்ஙனம் எடுத்தாள்வதிலே பாரதூரான குறை வராவிட்டாலும் – இனி வருங்காலத்தில் ஆங்கிலத்துடன் இணைந்த பிறமொழிகளும் நது நாட்டிலே செல்வாக்குக் காட்டாத காலத்தில் – அப்படிப்பட்ட சொற்களின் வரலாறு இன்னதென்று கூடத் தெரியாமல், உயிரற்ற வெறுஞ் சடலங்களாகவே அவை உலவுவனவாம். எனவே, இவற்றையெல்லாம் நாங்கள் சிறிது கவனிக்க வேண்டும். Botany எனப்படும் ‘பயிரியல்’ நூலில் எத்தனையெத்தனை பிறமொழிச் சொற்களை மனனஞ் செய்து அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
    நூல் : பயிற்சித் தமிழ் (1956), இரண்டாம் பாகம்) பக்கம் : 97
    நூலாசிரியர் தென்புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்