(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 31 : முத்தக் கூத்தன் கல்லறை-தொடர்ச்சி)

பூங்கொடி

பிறமொழி புகுதல்

நம்நாட் டகத்தே ஈயமிலாப் புன்மொழி
திணிப்பதற் கொருசிலர் செய்தனர் சூழ்ச்சி;
துணுக்குற் றெழுந்தனர் தூயநல் மனமுளோர்;
தாய்மொழி வளர்ச்சி தளர்ந்த இந் நாட்டில்
நோய்என மடமை நுழைந்து பரந்தது; 85
எழுத்தும் அறியார் படிப்பும் உணரார்
கழுத்திற் பிறமொழி கட்டுதல் நன்றாே?
என்றநல் லுரையை இகழ்ந்தனர் ஆள்வோர்;
நெஞ்சங் கனன்றது
கன்றிய நெஞ்சங் கனன்றது; தமிழர்
பொறுக்கும் அளவே பொறுப்பர், மீறின் 90
ஒறுத்ததன் பிறகே ஓய்வும் உணவும்
நினைவர் இதுதான் நெடுநாள் இயல்பு;
கனலும் புனலும் கரைமிகின் தடுக்க
உலகில் ஒருபொருள் உளதென அறியோம்;

          மான வுணர்ச்சி

மூக்கினை வருடின் மூங்கையும் சினப்பான்; 95
காக்கும் உயிரினும் மேம்படு கனிமொழி
தாய்மொழி யதனைத் தகவிலார் குழுமி
ஆய்வஞ் சனையால் அழிக்க முனையின் _
ஊமையிற் கீழாய் உறங்கிக் கிடப்பரோ?

          அறப்போர்

போர்ப்படை திரண்டது போர்ப்பறை ஆர்த்தது; 100
கோற்படை வீரரைக் குவித்தனர் அரசினர்;
அஞ்சிலர் நெஞ்சில் ஆண்மை ஏறினார்
வஞ்சினம் சாற்றினர் வாகை சூடவே,
மானம்மீக் கூர்ந்தவர் மறியல் செய்தனர்;
கூனல் நெஞ்சினர் கொடுங்கோல் செலுத்தினர்; 105
அடித்தனர் துரத்தினர், அடவி நாப்பண்
துடித்திடக் கொண்டுபோய் விடுத்தனர், புலிவாய்
தப்பிப் பிழைத்துத் தாய்மார் பல்லோர்
அப்பணி மீண்டும் ஆற்றினர்; அவர்தமைக்

110 கொடுஞ்சிறைக் கூட்டுள் கொடுங்கோல் அடைத்தது; 110

(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி