1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 5 : இலக்குவனார் திருவள்ளுவன்

(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 : தொடர்ச்சி)
1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு
5
21.02.1940 அன்று கட்டாய இந்தி நீக்கப்பட்ட செய்தி குறித்து 17 ஆவது கட்டுரை தெரிவிக்கிறது.
21.02.1940 அன்று கட்டாய இந்தி நீக்கப்பட்டது. அப்போதைய மாகாண ஆளுநர் சான் எருசுகின் பிரபு இதனை அறிவித்தார். இரண்டாம் உலகப்போர்ச் சூழலில் உள்ளூர்ச் சிக்கலில் மாட்டிக்காெள்ள வேண்டா என்ற எண்ணத்தில் இவ்வாணை பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் ஆசிரியர்.
அன்றே இது குறுஞ்செய்தியாக விடுதலை இதழில் வெளிவந்ததை எடுத்துரைத்துள்ளார். அத்துடன் மறுநாள் விடுதலையில் இது குறித்து வந்த செய்திக்கட்டுரையையும் அளித்துள்ளார். ஆச்சாரியார் அழைத்து வந்த ‘கட்டாய இந்தி கட்டி விட்டது மூட்டை’ என்னும் தலைப்பில் வந்திருந்தது. அதில்,
வெற்றி! வெற்றி!! வெற்றி!!!
சத்தியாக்கிரக சூரர்கள் என்று சொல்லப்படும் காங்கிரசார் பலப்பல சத்தியாக்கிரகங்கள் செய்து தோல்விமேல் தோல்வியே கண்டனர்.
ஆனால், தமிழர் தொடுத்தபோராட்டம் வெற்றியைத் தந்தது.
ஏன்? தமிழரின் தனிச்சிறப்பு அதுதான்!தமிழர் எக்காரியத்திலும் துணிந்து இறங்கினால், கட்டுப்பாடாகக் கிளர்ச்சியை நடத்தினால், தலைவரின் ஆணையின்படி நடந்து தளராது உழைத்தால்,
வெற்றி கிடைப்பது நிச்சயம்! நிச்சயம்!
இவ்வாறு மேலும் வெற்றிப்பெருமிதமாக கட்டுரை அமைந்துள்ளது.
நாளிட்ட இதழில் வந்திருந்தது. அதனையும் வெளியிட்டுள்ளார். இவ்வறிக்கையில் தீவிரக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கும் பொருளுதவி தந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார். போராட்டங்களைக் குறைத்தும் திரித்தும் மறைத்தும் வஞ்சக(விசம)த்தனமாகவும் நடந்து கொண்ட கூலிகளையும் இதழ்களையும் வென்றெடுத்த தமிழ் உணர்வைப் பாராட்டியிருந்தார். ஆரம்பம் முதல் பெரியதொரு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படும்படி உதவி செய்து வந்ததாக மெயில் பத்திரிகையைப் பாராட்டியுமிருந்தார்.
மெயில் இதழ் பற்றிய குறிப்பையும் ஆசிரியர் தந்துள்ளார். அது வருமாறு:
மெயில்இதழ் சென்னையிலிருந்து வெளிவந்த மாலைப்பத்திரிகையாகும். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின்போது அதன் தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆல்பிரடு ஆர்தர் ஃகேயில்சு என்ற ஆங்கிலேயர். 1912 ஆம் ஆண்டு சென்னைக்குப் பிழைப்பு தேடி இங்கிலாந்திலிருந்து வந்த ஃகேயில்சு சென்னைவாசியாகி மாகாணத்தின் அரசியல் நன்கு தெரிந்தவராக இருந்துள்ளார். மெயிலில் வெளியான போராட்டப் புகைப்படங்கள் விடுதலையில் எடுத்தாளப்பட்டுள்ளன. நடந்து வந்த போராட்டங்களுக்கு உண்மைத் தன்மையையும் அதன் பயனாக மக்கள் நம்பிக்கையையும் இந்த புகைப்படங்கள் கட்டாயம் கொண்டு வந்தன எனலாம். 1978 ஆம் ஆண்டே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக முத்துசாமி ஐயர் நியமிக்கப்பட்டதை ஒரு திராவிடச் செய்தியாளர் என்ற பெயரில் விமரித்த மெயில் இதழ், “தன்னைக் கடவுளுக்கு ஒப்பாகக் கருதுபவனும் மற்றவர்களை மிலேச்சர்கள் எனவும் கருதும் பார்ப்பனன், மக்களைச் சரிசமமாக நடத்தி நீதியைப் பேணத் தகுதியற்றவன்” என எழுதியது.
1868ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை வெளிவந்த இச்செய்தித்தாள் குறித்து இன்றைய தலைமுறையினர் அறிய உதவும் செய்தியாகும் இது.
கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்ட வெற்றி குறித்த செய்தியையும் கட்டுரையையும் படிக்கும் பொழுது ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ், தமிழர் நலன்களுக்கு எதிரான செயல்களுக்கு எதிரான போராட்டங்களில் போலி வெற்றிக்கே நம் தமிழர்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர். போலி வெற்றி என்பதும் தோல்விக்கு ஒப்பானதே என்பதை நாம் உணர்வது எப்பொழுதோ?
இந்தியைத் தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில் இருந்து அகற்றினால் மகிழலாம். ஆனால், விருப்பப்பாடம் என்ற போர்வையில் இன்று வரை இந்தி கட்டாயமாகத்தான் உள்ளது. இந்தியை நுழைய விடமாட்டோம் என அறைகூவும் இன்றைய தி.மு.க.வின் தலைவரும் இதுவரை ஆட்சியில் இருந்தவருமான மு.க.தாலின் மகள் பள்ளியிலேயே இந்தி உள்ளது. மாநிலத் தன்னாட்சியை வலியுறுத்தும் கட்சியினர் நடத்தும் பள்ளிகளிலேயே ஒன்றிய அரசு சார் இந்திக்கல்விக்கு இடம் தருவானேன்? இந்தி எதிர்ப்பில் வெற்றி காண்பதாகக் கூறும் அவலத்தை நாம் புரிந்து கொண்டால்தான் விருப்பப்பாடம் என்று கட்டாயமாக இந்தியை நுழைத்துக் கொண்டிருக்கும் ஒன்றிய , மாநில அரசுகளுக்கு எதிராக உண்மையாகப் போராடி வெற்றி காண்போம்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
தை 25, 2057 / 07.02.2026 அன்று தமிழ்க்காப்புக் கழகத்தின் ஆளுமையர் உரையின் பொழுது ஆற்றிய நூலுரை







Leave a Reply