இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 1.

முன்னுரை

 என் கண்மணிகளே! அன்புக் குழந்தைகளே! இப்போது உங்களுக்கு ஒரு வரலாறு சொல்லப் போகிறேன். இது நம் பெரியாருடைய வரலாறு. உங்கள் பாடப் புத்தகத்தில் பெரிய பெரிய தலைவர்களைப்பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். அவர்களுக்கும். நமது பெரியாருக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. தமிழ் மக்களின் தாழ்வுக்குக் காரணமாக இருந்தவை சாதிகளும், மதங்களுமே ஆகும். பல பெரியவர்கள் சாதி வேற்றுமை கூடாது என்றார்கள். மதவெறியைப் பல அறிஞர்கள் கண்டித்திருக்கிறார்கள். நமது பெரியார் இராமசாமியோ சாதிகளே கூடாது! என்றார். மதங்களை ஒழிக்க வேண்டும். இவற்றிற்குக் காரணமான கடவுளை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் கூறினார்.  இதுவரை இந்த மாதிரி துணிச்சலாகப் போராடியவர்கள் யாரும் இல்லை. நமது பெரியார் இராமசாமி தான் இவ்வாறு புதுமையாகப் போராடினார்.

 அவர் வாழ்ந்த காலம் முழுவதும் இந்த நோக்கங்களுக்காகவும், தமிழ் மக்களின் நல் வாழ்வுக்காகவும் அயராமல் போராடினார். அவருடைய வரலாறு ஒரு வீர வரலாறு. அவருடைய வரலாறு ஒர் அறிவு வரலாறு. அவருடைய வரலாறு ஒர் எழுச்சி வரலாறு. இந்த வரலாற்றை நீங்கள் படித்தால் நம் தமிழ் மக்கள் எவ்வாறு முன்னேறினார்கள், எவ்வாறு உயர் வடைந்தார்கள் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

 

பெரியாரின் பெற்றோர்

 பெரியார் இராமசாமி ஐப்பசி 03, தி.பி. 1910 / 1879 ஆம் ஆண்டு செட்டம்பர்  17 ஆம் நாள் பிறந்தார். அவருடைய ஊர் ஈரோடு. அவருடைய தந்தையார் பெயர் வெங்கட்டர். தாயார் பெயர் சின்னத் தாயம்மாள். சின்னத் தாயம்மாளை அவருடைய பெற்றோர்கள் அன்பாக முத்தம்மா என்று அழைப்பார்கள். வெங்கட்டர் ஏழைக் குடியில் பிறந்தார். அவர் இளம் வயதில் தந்தையை இழந்தார். தாயாரும் சிறிது காலம் சென்றதும் இறந்து போனார். அவருக்குப் பன்னிரண்டு வயது நடக்கும் போதே கூலி வேலை செய்து பிழைத்தார்.

  வெங்கட்டருக்கு 18 வயது ஆகும் போது திருமணம் நடந்தது. சின்னத்தாயம்மாள் ஒரளவு வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும் அவரும் குடும்பச் செலவுக்காகக் கூலி வேலைகள் செய்தார். இருவருக்கும் கிடைத்த மிகச் சிறிய வருவாயில் மிச்சம் பிடித்து வெங்கட்டர் வண்டியும் மாடுகளும் வாங்கினார். பிறகு ஒரு சிறிய மளிகைக் கடை வைத்தார். அவருடைய ஒயாத உழைப்பினாலும், சின்னத் தாயம்மாள் உதவியாலும் மளிகைக்கடை சில ஆண்டுகளில் மண்டிக்கடை ஆயிற்று. மிகப் பெரிய செல்வர் ஆகிவிட்டார்.

  ஒரு மரம் பழுத்து விட்டால் காக்கைகளும், குருவிகளும், அணிலும், வெளவாலும் வந்து சேரும். அதுபோல வெங்கட்டர் பணக்காரர் ஆனவுடன் பண்டிதர்களும், பாகவதர்களும், பக்தர்களும் அவரைத் தேடி வந்தார்கள். உழைப்பினால் வந்த பணத்தைக் கடவுள் அருளால் வந்ததென்று அவர்கள் கூறினார்கள். மேலும் கோயில் திருவிழா என்று தருமம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்றார்கள். வெங்கட்டருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்து போயின. தொடர்ந்து பத்து ஆண்டுகள் பிள்ளை பிறக்கவில்லை. இதனால் அவர்கள் பக்தியுடன் பிள்ளை வரம் கேட்டு விரதம் இருந்தனர். பத்து ஆண்டுகள் கழித்து முதல் பிள்ளையாகக் கிருட்டிணசாமி பிறந்தார் அதன்பின் இரண்டாண்டுகள் கழித்து இராமசாமி பிறந்தார்.

  இந்த இரண்டு பிள்ளைகளும். வெங்கடாசலபதி அருளால் கிடைத்த செல்வங்கள் என்று அவர்கள் நம்பினார்கள். வெங்கட்டர் பக்தராக இருந்ததோடு நேர்மையானவராகவும், உண்மையானவராகவும் விளங்கினார். இதனால் அவர் ஈரோடு, கோயம்புத்துார் பகுதிகளில் பெயரும், புகழும் உடையவராக விளங்கினார். அவருடைய பிள்ளைகளும் மக்களால் நாயக்கர் மக்கள்என்று பெருமையாக அழைக்கப்பட்டனர்.  ‘நாயக்கர்” என்பது சாதிப் பெயர். ஆனால் அந்தப் பகுதிகளில் நாயக்கர் என்ற சொன்னால் வெங்கட்டர் ஒருவரையே குறிக்கும். அவ்வளவு புகழுக்குரியவராக அவர் விளங்கினார்.

 

(தொடரும்)

  • நாரா.நாச்சியப்பன்