கொள்கையை நெஞ்சினில் விதைத்திடுவாய்!

நல்லவர் போலவே
நகைத் திருப்பார் – சிலர்
நாவினில் நஞ்சை
விதைத்திருப்பார் .
உள்ளவை யாவையும்
கறந்தெடுப்பார் – அவர்
உண்மையைச் சொல்வதாய்
நம்ப வைப்பார் ,

பசுத்தோல் போர்த்திய
புலியாவார். – சிலர்
பாதகம் செய்வதில்
நரியாவார்.
எரிகின்ற வீட்டுக்குக்
கொள்ளி வைப்பார் – அவர்
ஏதேனும் செய்தியை
அள்ளி வைப்பார்.

நல்லவர் கெட்டவர்
பகுத்தறிவாய் – நீயும்
நான்கு குணத்தையும்
பிரித்தறி வாய் .
கோடரிக் காம்பினை
முறித்திடுவாய்.- நல்ல
கொள்கையை நெஞ்சினில்
விதைத்திடுவாய்.

கவிஞர். ஏரூர் கே. நெளசாத்து

(எனது ‘மெளனத்தின் சத்தங்கள்’ நூலில் இருந்து)