(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.) –‌ தொடர்ச்சி)

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (4.)

 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி)

உலகமனிதன் முதலில்

உதித்ததுவும் உன்குடியா?

நிலம் உன்னைப் புரிந்துகொள்ள

 நிமிர்ந்துநிற்க மாட்டாயோ?

 

 தமிழ் மொழியின் சிதைவுக்கும் தமிழ் இனத்தின் சீர்கேட்டுக்குமான காரணங்களைச் சிந்தித்த பெருங் கவிக்கோ அவைபற்றிப் பல இடங்களிலும் தனது எண்ணங்களைக் கவிதையாக்கியிருக்கிறார்.

இடைப்பட்ட தமிழர்நிலை எண்ணிப் பார்த்தால்

இடிபட்டார் பலசமயம் பற்றிக்கொண்டே

உடைபட்ட கலத்தைப் போல் சிதறலானார்

உதவாத கொள்கைக்குச் சண்டை செய்வார்!

 கிடையாத நம் சொத்துத் தமிழ் ஒன்றென்ற

கிழமையினை மறந்திட்டார்! தமிழர் எல்லாம்

 தடையின்றி ஒன்றுபட்டு வாழ எண்ணும்

 தகைமைக்கு வெடிவைத்தார் அன்றோ? துன்பம்!

 இன்றென்ன செய்கின்றோம்? எண்ணிப் பார்த்தால்

 எல்லாமே முன்போல்தான் இருக்கக்கண்டோம்!

நன்றாற்றும் வழியின்றி அந்நாளைப் போல்

நமக்குள்ளே பலபேதம் வைத்துக்கொண்டு

குன்றாநம் சக்தியினைக் குன்ற வைக்கக்

 கொள்கையெனும் பெயராலே கட்சி சேர்த்துக்

கொன்றன்ன இன்னாத செயல்கள் நம்முள்

 குடியேற்றி நம் வீட்டுள் வெடிவைக்கின்றோம்!

மேலும் சூடாகவே பாக்கள் புனைந்திருக்கிறார்.

இந்நிலைமை மாற என்ன என்ன செய்யவேண்டும் என்று யோசனைகள் கூறுகிறார். இளைஞர்களே. விழிப்புற்று; வீறு கொண்டு செயல் புரியுங்கள் என்று ஊக்கம் அளிக்கிறார். ‘தமிழ் முழக்கம்” என்ற அவருடைய கவிதைத் தொகுப்பு இத்தகைய பாடல்களைக் கொண்டிருக்கிறது.

 

(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்