thudisaikizhaar_vinaavidai_attai

இந்துக்கள் யார்?

10, 000 ஆண்டுகளின் முன்னர், காகேசியரில் ஒரு கூட்டத்தார் தாம் இருந்த நாட்டைவிட்டு மேற்கே ஐரோப்பியாவிற்கும், மற்றொரு கூட்டத்தார் இந்தியாவிற்கும் புறப்பட்டார்கள். மேற்கே சென்றவர்கள் செர்மனி முதலிய இடங்களில் தங்கினார்கள். கிழக்கே சென்றவர்கள் கைபர், காபூல், போலன் கணவாய்களின் வழியாகச் சிந்து ஆற்றங்கரையில் குடியேறினார்கள். பின்னவர்களாகிய ஆரியர்கள் சிந்து ஆற்றங்கரையில் குடியேறுவதற்கு முன்னரே, தமிழர்கள் அராபியர்களுடனும் பாரசீகர்களுடனும், அக்கேடியர், சுமேரியர், அசிரிய தேசத்து அசுரர், ஃபினீசியர் முதலியோர்களுடனும் – தரைவழியாகவும் தண்ணீர் வழியாகவும் வாணிபம் செய்து வந்தார்கள். அராபியர்களும் பாரசீகர்களும் தம் நாட்டில் விளையும் பேரீச்சை, பெருங்காயம் முதலிய பொருள்களை ஒட்டகத்தின்மேல் ஏற்றிக்கொண்டு வந்து, தமிழ்நாட்டில் மாறி, தமிழ்நாட்டில் விளையும் சந்தனம், மயில் இறகு, மிளகு, ஏலக்காய், இலவங்கம் முதலிய பொருள்களையும், பணத்தையும் கொண்டு செல்வர். அவர்கள் எல்லோரும் அக்கணவாய் வழியாகப் போகும்போது சிந்து ஆற்றங்கரையில் குடியேறிய ஆரியர்கள் அவர்களை மறித்து, அடித்து வழிப்பறி செய்துவந்தார்கள். பாரசீர்களும் அராபியர்களும் அடிப்பவர்களை “இந்து” “இந்து” என்ற சொல்லிக் கூச்சலிட்டுவந்தார்கள். “இந்து” என்னும் சொல் பாரசீக மொழியைச் சேர்ந்தது. “இந்து” என்றால் அம்மொழியில் திருடன், கொள்ளைக்காரன் என்பது பொருள். அதுமுதல் ஆரியர்களுக்கு “இந்துக்கள்” என்று பெயர் உண்டாயிற்று.

– துடிசைக் கிழார் அ.சிதம்பரனார்: கழகத்தமிழ் வினாவிடை: ப.17

பி.கு. : இந்து என்ற சொல் உருவான வரலாறுதான் சொல்லப்பட்டுள்ளது. அதனால், இப்பொழுது அப்பொருளில் வழங்குவதாகக் கருதக்கூடாது.