thudisaikizhaar_vinaavidai_attai

  ஒரு காலத்தில் தமிழ்ப் பெயர்களை வடமொழிப் பெயராக ஆக்கும் இயக்கம் மும்முரமாக நடைபெற்றிருக்கிறது என்பது தெரியவருகிறது.

  சைவ வைணவ ஆசிரியர்கள் காலத்தில் நமது திருக்கோயில்கள் தமிழ்ப் பெயராலேயே அழைக்கப்பட்டன. அவை வடமொழிப் பெயர்களாக மாற்றப்பட்டன. திருமரைக்காடு – வேதாரண்யம் என்றும் திருவெண்காடு, ‘சுவேதாரண்யம்’ எனவும் திருவையாறு ‘பஞ்சநதித் தலமாகவும்’ மாறியது.

  சில மொழி பெயர்ப்புகள் மூலம் வடமொழியினரின் அறியாமையையும் நாம் தெரிந்து கொள்ளலாம். ‘அஞ்சல் நாயகி’ என்னும் அம்பாளுக்கு ‘அபயாம்பிகை’ என்ற பெயர் வடமொழியில் ஏற்பட்டுள்ளது. அஞ்சல் நாயகி என்பது அம்+சொல்+நாயகி என்று அழகிய சொற்களை உடையவள் என்று குறிக்கின்றது. மாற்று மொழியினர் ‘அஞ்சல்’ என்பதை ‘அபயம்’ என்று கருதி ‘அபயாம்பிகை’ என்று பெயரிட்டார்கள்.

  பலப் பல சொற்கள் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றிருக்கின்றன என்பதை நாம் இக்காலத்தில் உணர்கிறோம். வடமொழிக்கு மட்டுமென்ன? உலக மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் ஏராளமாகக் கலந்திருக்கின்றன என்பதும் திராவிட நாகரிகம் மிகப் பழமையானது என்ற உண்மையும் இப்போது நன்கு வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.

– துடிசைக் கிழார் அ. சிதம்பரனார்

கழகத்தமிழ் வினாவிடை ப.17