சனவரி 25 கதை – முனைவர் ம.நடராசன்

  அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய தமிழ் அறிஞர், தன்மானத் தமிழ் மறவர் பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளும் அற்புதமான வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
  சான்றோர்களும், புலவர்களும், அறிஞர் பெருமக்களும் கலந்துகொண்ட அவ்விழாவில் நான் பகிர்ந்துகொண்ட என் உணர்வுகளை வாசகர்களுக்காக இங்கே தருகிறேன்.
  அமெரிக்காவில் இருக்கின்ற உலகத் தமிழர் அமைப்பு இலக்குவனார் அவர்களுக்கு நூற்றாண்டு விழாவை நடத்தினார்கள். அந்தச் செய்திகள் எனக்கு மின் அஞ்சலில் வந்து சேர, அதைப் படித்ததும் அவர்களுக்கு என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன். அதைப் பார்த்த என் நண்பர்கள் சிலர் ஏன் இங்கேயும் அவருக்கு ஒரு விழா எடுக்கக் கூடாது என்றார்கள்.
அப்படித்தான் இந்த விழா ஏற்பாடானது.
இப்பொழுது சென்னையிலே கருத்துகளைச் சொல்வதற்குக்கூட இடமில்லாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. எண்ணிப் பாருங்கள்.  விடுதலைக்காகப் பாடுபட்ட காந்தியடிகளிலிருந்து, சுபாசு சந்திரபோசிலிருந்து, இன்னும் எத்தனை எத்தனையோ மாமனிதர்கள் கடற்கரையிலே சொற்பொழிவாற்றித் தம் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
  உலகில் எல்லா ஊர்களிலும் இடம் கிடைக்கிறது. சென்னையில் மட்டும் கருத்துகளை வெளியிட இடங்கள் கிடைக்கவில்லை. ஏன்?
  முதலமைச்சராக இருப்பவர் கடற்கரையில் பேச முடியாத சூழ்நிலையில் இருப்பதால் இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா என்றும் யோசிக்க வேண்டும்.இலண்டன் மாநகரில் ஒரு பகுதி இருக்கிறது. அங்கே யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தனது கருத்துகளைப் பதிவுசெய்யலாம். பத்து பேர், இருபது பேர் நின்று கேட்டுக் கொண்டிருப்பார்கள். அங்குள்ள சின்ன நாற்காலியில் நின்று கொண்டு பேசுவார்கள். எதைப் பற்றியும் சொல்லலாம். வெள்ளை மாளிகை எதிரே நின்றுகொண்டு ஒபாமாவையோ அந்த நாட்டு உயர் அதிகாரிகளையோ  குறைகூறியோ, எதிர்த்தோ ஊர்வலம் செல்லலாம். ஆனால் இந்தியாவில், தமிழ்நாட்டில்  விடுதலைக்குப் பிறகும் நம்  உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது.
  இலக்குவனார் தமிழக வரலாற்றில், தமிழருடைய வரலாற்றில், இந்தி எதிர்ப்பு வரலாற்றில் நீக்கமற நிறைந்திருப்பவர். அசாத்திய தைரியமிக்கவர். அற்புதமான பேரறிஞர். ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ என்பதற்கிணங்க வாழ்ந்து காட்டியவர். இப்படிப்பட்ட முன்னோடிகளை நாம் ஏற்றுக் கொண்டதாலோ என்னவோ நாமும் பகைவர்களாகப் பார்க்கப்படுகிறோம். நல்ல கருத்துகளைச் சொன்னாலும் சண்டைக்காரர்களாகப் பார்க்கப்படுகிறோம். எதுவுமே வாய் திறக்காமல் அமைதியாய் இருப்பவர்கள் நல்லவர்களாகி விடுகிறார்கள்; வெற்றிபெற்று விடுகிறார்கள். கருத்துகளைச் சொல்வதனாலேயே பலர் சமூக விரோதிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.
எதற்காகச் சொல்லுகிறேன் என்றால் இலக்குவனார் அவர்கள் எப்பேர்ப்பட்ட சூழ்நிலைகளிலும், நெருக்கடியிலும் தம் கருத்துகளை ஓங்கி ஒலித்தவர் என்பதற்காகத்தான் சொல்லுகிறேன்.
நான் ஒன்று கேட்கிறேன்: தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் சனவரி 25ஆம் நாளை இந்தி எதிர்ப்பு நினைவுநாளாகக் கொண்டாடுகிறார்கள். அது ஏன் என்று யாராவது இன்றுவரை கேள்வி எழுப்பியிருக் கிறார்களா? விளக்கம் கொடுத்திருக்கிறார்களா?
  அய்யா பெரியார் அவர்கள் தலைமையிலும் அண்ணா அவர்களின் முன்னிலையிலும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அதன்பிறகு தமிழ்ப் புலவர்கள், சான்றோர்கள், அறிஞர்கள் எல்லாம் நடத்தியிருக்கிறார்கள். கி.ஆ.பெ. விசுவநாதம், இலக்குவனார், பெருஞ்சித்திரனார் போன்றோர் நடத்தியிருக்கிறார்கள். மாணவர்களாக  இருந்த நாங்கள் இந்தப் போராட்டங்களையெல்லாம் பார்த்தும் கேட்டும் மனம் உந்தப்பட்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டோம்.
  அரசியலுக்காக இந்தி எதிர்ப்பைக் கையில் எடுத்ததாகவும் சிலர் சொன்னார்கள். ஆனால் அது உண்மையல்ல. நாங்கள் போராடினோம். அண்ணா அவர்கள் அதை அரசியல் களத்திற்குக் கொண்டு சென்று வெற்றிக்கனியாக மாற்றினார். பிற்காலத்தில் நாங்கள் இந்தி எதிர்ப்பைக் கையில் எடுத்தபோது அண்ணா அவர்கள் எங்களையெல்லாம் அழைத்து எங்களுடைய அனைத்துக் கோரிக்கைகளையும் விடிய விடியக் கேட்டார். பிரிவினை வரை பேசினோம். அதையும் கேட்டுக் கொண்டார். விவாதிக்க அனுமதித்தார். இப்படி ஒரு போராட்டத்தின் முழுக் கோரிக்கையையும் விவாதிக்க அனுமதித்த ஒரே தலைவர் அவர் தான். சட்டமன்றத்தைக் கூட்டினார். “இந்தி இல்லை தமிழ்தான்’’ என்கிற தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.
இதில் எங்கே அரசியல் இருக்கிறது? இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு ‘என்னால் ஆனதைச் செய்து விட்டேன். டெல்லி தன்னால் ஆனதைச் செய்யட்டும்’’ என்று சொன்னாரே, அவர்தான் அண்ணா. அந்த வெற்றியை மாணவராக இருக்கும்போதே நாங்கள் பெற்று விட்டோம்.
இலக்குவனாரைப் பற்றிப் பேசவேண்டுமென்றால் இந்தி எதிர்ப்பைப்பற்றிப் பேசித்தான் ஆகவேண்டும். அவர் கால்டுவெல் அவர்களின் வழியில் நின்று,  சி..யு. போப் வழியிலே நின்று தன்னுடைய தொல்காப்பியத்தைப் பற்றிய ஆராய்ச்சியை நடத்தினார்.
  இலக்குவனார் அவர்கள் ஆராய்ந்து தொகுத்த தொல்காப்பியத்தின் சிறப்பு அளவிட முடியாதது. அறிஞர் அண்ணா அவர்கள் ரோம் நகருக்குச் சென்றபோது போப் அவர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அண்ணா இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி நூலைத்தான் வழங்கினார். இது ஒன்றே அந்நூலின் சிறப்புக்குப் போதுமானது.
  அப்படிப்பட்ட தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் மறந்தால் அது தமிழருடைய வரலாற்றில் பெரும் பிழையாகும். நான் தஞ்சை சரபோசி கல்லூரியில் மாணவராக இருந்த போது தமிழ் மன்றத் தலைவராக இருந்தேன் அப்போது ஒரு விழாவிற்குக் கி.ஆ.பெ. விசுவநாதம், இலக்குவனார் ஆகியோரை அழைத்தேன். ஆனால் எனக்குத் தெரியாமலேயே, என் பெயரிலேயே கல்லூரி முதல்வரால் அந்த கூட்டம் நீக்கப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்பாகத்தான் அந்தக் கூட்டத்தை ஒருங்கிணைத்தேன். ஆனால் ரத்து செய்யப் பட்டது. அதை எதிர்த்தும் போராடினோம். பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் சுதந்திரமாகப் பங்கெடுத்துக் கொண்டோம்.
  இப்படி நாங்கள் மாணவராக இருந்து கலந்துகொண்ட போராட்டங்களில்கூட அண்ணா அவர்கள் தூண்டியதில்லை. “நீங்கள் எல்லாம் படிக்கவேண்டிய மாணவர்கள். நன்றாகப் படிக்க வேண்டும். முன்னேற வேண்டும்.  சிக்கல்களை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னிடம் விட்டு விடுங்கள். நீங்கள் உங்கள் கல்வியிலே கவனம் செலுத்துங்கள்’’ என்று சொன்னார். அதோடு மட்டுமல்லாமல் “ஒவ்வொருவரும் மிகமிக அமைதியான முறையில் அவரவர் இல்லத்தில் இந்தி எதிர்ப்புக்கு அடையாளமாகக் கருப்புக் கொடியைப் பறக்க விடுங்கள்’’ என்றுதான் சொன்னாரே தவிர எங்களைப் போராடத் தூண்டவில்லை.
  இப்படி அறிஞர் அண்ணாவால் இந்தி எதிர்ப்புப் போராட்ட நாளாகக் குறிக்கப் பட்டதுதான் ஜனவரி 26. ஆனால் நாங்களும் எங்கள் குழுவைச் சார்ந்தவர்களும், நாளைக்குத் தானே அண்ணா அவர்கள் போராட்ட நாளாக அறிவித்திருக்கிறார். நாம் ஒரு நாள் முன்பாகப் போராட்டத்தை  தொடங்குவோம் என்று தீர்மானித்தோம். அப்படித் தீர்மானித்தபோது நாங்கள் குறித்த நாள்தான் சனவரி 25. அதுதான் இந்தி எதிர்ப்பு அடையாள  நாளாகக் கொண்டாடப்படுகிறது.
தி.மு.க.வோ மற்ற எந்தக் கட்சிகளுமோ இதை ஒருபோதும் சொன்னதில்லை. சொல்லவும் மாட்டார்கள். ஏனென்றால் அதைச் சொல்ல வேண்டியவர்கள் நாங்களாக இருக்கிறோம். ஆனால் ஒருபோதும் இதை முதன்மைப்படுத்தி நாங்கள் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. இப்போது சொல்ல வேண்டிய தேவை இருப்பதால் சொல்கிறேன். 1965இல்  மூன்று மாதங்கள் தஞ்சையிலே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினோம். அண்ணா அவர்கள் வேண்டுகோள் விடுத்தும் கூட போராட்டத்தைத்  தொடர்ந்தோம். பிறகு சில காரணங்களுக்காக நிறுத்தி வைத்தோம். பிறகு 1966இல் தஞ்சையில் இந்தி எதிர்ப்பு மாணவர் மாநாடு. வங்காள, கருநாடக, மாணவர்களையெல்லாம் அழைத்து அண்ணா அவர்கள், காயிதே மில்லத், இராசாசி, இலக்குவனார், கி.ஆ.பெ. விசுவநாதம்,  சி.டி.நாயுடு எல்லோரையும் அழைத்திருந்தோம். அந்தக் கூட்டத்தில் அண்ணா பேச ஆரம்பிக் கிறார். அப்பொழுது ஒரு செய்தி வருகிறது. மதுரையில் இருந்து கலைஞரும், பேராசிரியர் இலக்குவனாரும் வந்து காத்துக் கொண்டிருக் கிறார்கள். வாருங்கள் அழைத்து வரலாம் என்று சொல்ல “இந்த மாநாட்டை நடத்துகிறவன் நான் என்பதனால் அண்ணா பேசுகிறபோது  என்னால் வரமுடியாது’’ என்றேன். பிறகு சென்றேன். இங்கே ஒரு பின்னணியைச் சொல்லவேண்டும்.
  அப்போது கலைஞர் அவர்கள் தஞ்சையில் சட்டமன்ற உறுப்பினர். நாங்கள் தஞ்சையில் மாநாடு நடத்துகிறோம். அதில் அவர் இல்லை. இதற்குச் சில நாட்கள் முன்பு அன்பில் அவர்கள் திருச்சியில் நடத்திய தி.மு.க. மாநாட்டிலேயும் கலைஞர் இல்லை. நான் யாரையும் குறை சொல்வதற்காகச் சொல்லவில்லை. வரலாற்றைத்தான் சொல்கிறேன். கலைஞர் இல்லாமல் அந்த மாநாடு நடந்தது. அப்போது கட்சியிலிருந்து வெளியேறுவதா இருப்பதா என்கிற சூழல் இவர்களுக்கு. இப்படிப்பட்ட சூழலில்தான் அதற்குப் பிறகு நடந்த எங்கள் கூட்டத்திற்குக் கலைஞரை அழைத்து வருகிறோம். அண்ணா பேசி முடிக்கும் தறுவாயில் அழைத்து வந்தவர்களை மேடை ஏற்றுகிறபோது  அண்ணா அவர்கள் கலைஞரை செல்லமாக மேலே அழைத்து அடுத்ததாகப் பேசச் சொல்கிறார். ‘அண்ணா பேசினால் தமிழே பேசியது போலத்தான் அர்த்தம்’ என்று முடித்துவிடுகிறார் அவர். அப்படிப்பட்ட வரலாற்றோடு கூட வந்தவர்தான் பேராசிரியர் இலக்குவனார் என்பதற்காகத் தான் இதைச் சொல்கிறேனே தவிர என்னுடைய பெருமைக்காக அல்ல.
  அப்படிப்பட்ட இலக்குவனார் பற்றிய நினைவுகள் எனக்குள் இருப்பது என் பாக்கியம் என்பதை இங்கே பெருமிதத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.