(தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4  தொடர்ச்சி)

தமிழின் தனிப்பெருந் தன்மைகள்
5. செம்மை

 சொற்களும் சொற்றொடர்களும் வடிவிலும் பொருளிலும் இலக்கண முடிபிலும் வழாநிலை, வழுநிலை, வழுவமைதிநிலை என முந்நிலைப்படும். அவற்றுள், வழுநிலையில்லது செந்தமிழ் என்றும், அஃதுள்ளது கொடுந் தமிழ் என்றும், தமிழை இருவகையாக வகுத்தனர் இலக்கண நூலார். மக்கட்கு ஒழுக்க வரம்பு எத்துணை இன்றியமையாததோ, அத்துணை இன்றியமையாததே மொழிக்கு இலக்கண வரம்பும். சொற்களின் திருந்திய வடிவையும் ஓரிய லொழுங்கையும் தமிழிற்போல் வேறெம்மொழியிலுங் காண முடியாது.

எ-டு:
தமிழ்                                                                தெலுங்கு
தன்மைப் பெயர்     யான்,                         யாம்    ஏனு, மேமு
நான், நாம்                                                      நேனு, மனமு
முன்னிலைப் பெயர்     நீன்(நீ)              நீம்    நீவு, மீரு
படர்க்கைப் பெயர்     தான், தாம்          தானு, தாமு

அ,இ,உ என்னும் முச்சுட்டெழுத்துகளையும் எ,ஏ, யா என்னும் மூவினாவெழுத்துகளையும் அடியாகக் கொண்ட தமிழ் ஐம்பாற் பெயர்களின் ஓரியலொழுங்கு, மொழிநூலறிஞரின் உள்ளத்தை மிகக் கவரத் தக்கது. இது போன்ற அழகிய மெய்ப்பொருளிய லொழுங்கை வேறெம் மொழியிலேனும் மொழிக் குடும்பத்திலேனும் காண முடியாதென்று கால்டுவெலார் வியந்து கூறியிருத்தலைக் காண்க.

  புதுப்பெருக்கு நீரைக்குறிக்கும் வெள்ளம் என்னும் செந்தமிழ்ச் சொல் மலையாளத்தில் நீர்ப் பொதுவைக் குறிப்பதும், விடை சொல்லுதலைக் குறிக்கும் செப்புதல் என்னும் செந்தமிழ்ச் சொல் தெலுங்கிற் பொதுவாகச் சொல்லுதலைக் குறித்தலும், ஒன்றைச் செய்ய ஆற்றுதலை (திறமையோ டிருத்தலை)க்  குறிக்கும் மாட்டுதல் என்னும் செந்தமிழ்ச்சொல் கன்னடத்தில் (மாடுதல் என்னும் வடிவில்), பொதுவாகச் செய்தலைக் குறிக்கின்றமையும் கொடுந்தமிழ் நிலையாம். கூர்ந்து பார்த்தலைக் குறிக்கும் நோக்குதல் என்னும் சொல், மலையாளத்திற் பொதுவாகப் பார்த்தலைக் குறித்தலும் அஃதே.

செந்தமிழெழுத்துகள் கொடுந்தமிழிற் பலவாறு திரியுமேனும், வலி மெலித்தல் மலையாளத்திற்கும் ரகரம் தொகல் தெலுங்கிற்கும் பகரம் மூச்சொலியாதல் கன்னடத்திற்கும், சிறப்பாகும்.

எ-டு:
மலையாளம்     :     கஞ்சி-கஞ்ஞி, நீங்கள்- நிங்ஙள், வந்து- வந்நு.
தெலுங்கு :     சுருட்டு – த்சுட்ட, பருப்பு – பப்பு, மருந்து – மந்து.
கன்னடம் :     பள்ளி -ஃக(ஹ)ள்ளி, பாளை -ஃகா(ஹா)ளெ, பொன் -ஃஎகா(ஹொ)ன்னு.

வடசொற்கள் பின்வருமாறு பலவகையில் திரியும்: ஆயிரம் – சகஃச்ஸ்ர, கலுழன் – கருட (g), கோட்டம் – கோ ஃட்(ஷ்)ட, கோட்டை – கோட்ட, சாயை – சாயா (உ), தூணம் –  ஃச்(ஸ்)தூணா, நகரம் – நகர (g), பள்ளி – பல்லி, மயில் – மயூர, முகம் – முக (kh), வட்டம் – வ்ருத்த.

  இங்ஙனம் தமிழுக்கு எது வழுநிலையோ, அது பிற மொழிகட்கு வழாநிலையாம். தமிழுக்குச் செம்மை இன்றியமையாத பண்பாயிருத்தலி னாலேயே, அது செந்தமிழ் எனப்பட்டது. ஒருவன் பொதுமக்களோடு எத்துணைக் கொச்சையாய்ப் பேசினும், ஏடெடுத்தெழுதும் போதும் மேடையேறிப் பேசும் போதும் இலக்கண நடையைக் கையாளவேண்டு மென்பதே தமிழ் மரபு. அம் மரபே, மூவாயிரம் ஆண்டாகத் தமிழைக் கெடுக்கப் பகைவர் சூழ்ச்சி செய்துவரினும், அது கெடாவாறு அதனைக் காத்து வந்திருக்கின்றது. உலக வழக்கு வேறு; கொச்சை வழக்கு வேறு. உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே. ஆதலால், பிற மொழிகள்போல் தமிழையுங்கருதிக்கொண்டு, பொதுமக்கள் கொச்சை நடையே உலக வழக்கென்பது தமிழுக்கு எட்டுணையும் பொருந்தாதென்க. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=189&pno=13

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் :
செந்தமிழ்ச் சிறப்பு
(தொடரும்)