(தமிழ்நாடும் மொழியும் 33: மக்களாட்சிக் காலம் – தொடர்ச்சி)

2.1. தமிழின் தொன்மையும் சிறப்பும்

தோற்றுவாய்

பண்டுதொட்டு நந்தமிழ் மக்கள் பேசிவரும் மொழி அமிழ்தினுமினிய தமிழ்மொழியாகும். இன்று இரண்டரைக் கோடி மக்களால் இப் பைந்தமிழ் தாய்மொழியாகப் பேசப்பட்டு வருகிறது. ஆழிசூழ் இப்பூழியில் மக்கள் முதல் முதலாகப் பேசி இருக்கமாட்டார்கள். பல நூற்றாண்டுகளோ, ஆயிரம் ஆண்டுகளோ சென்ற பின்புதான் மக்கள் பேசியிருக்க வேண்டும்; மொழியும் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் மொழி கடவுளால் உண்டாக்கப்பட்டதென்று நம் முன்னோர் முதலில் எண்ணினர்.

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி
அதற்கு இணையாகத் தமிழ் மொழியைக்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாக
ர்”

என்று சிவஞான முனிவர் பாடியிருப்பதைக் கொண்டு கடவுளே மொழியை உண்டாக்கியிருப்பார் என்ற கருத்து நம் நாட்டில் பண்டு நிலவி வந்ததை நாம் அறிவோம். ஆனால் மக்கள் முயற்சியால் மொழி உண்டாக்கப்பட்டது என்று நாம் கொள்ளுதலே சாலப் பொருந்தும். அடுத்து தமிழின் தோற்றம் குறித்து ஒருசில வரைவாம்.

தமிழின் தோற்றம்

தமிழ் என்னும் சொல்லுக்குப் பல பொருள் கூறுவதுண்டு. சகந்நாத பிள்ளை என்பவர் தமிழ் என்னும் சொல்லுக்கு ஒளிவுடையது (தமம்-ஒளி) என்று பொருள் தருவர். இக்கருத்தையே கார்த்திகேய முதலியாரும் கூறியுள்ளார். ‘திராவிடப் பிரகாசிகை‘ என்னும் நூலாசிரியர் சபாபதி நாவலர் தமிழ் என்பதற்கு இனிமை என்னும் பொருளை வற்புறுத்தியுள்ளார். இப்பொருளே பொருத்தமுடையது என அறிஞர் பலர் முடிவு செய்துள்ளமை நாமறிந்ததொன்றே. நந்தாமணியாம் சிந்தாமணியில் இனிமை என்னும் பொருளில் தமிழ் என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. ‘தமிழ் தழீ இய சாயலவர்’ என்பதில் தமிழ் என்னும் சொல் இனிமை என்னும் பொருளில் வருதலைக் காண் கிறோம். கவிக்குயில் பாரதி ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்‘ என்று தமிழி னுடைய இனிமையை உணர்த்தியுள்ளார். ‘இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்’ என்று பிங்கலந்தை நிகண்டு உரைக்கின்றது.

தமிழ்மொழியைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் பலர் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். அவ்வறிஞருள் ஒருவராகிய ஆல்பருட்டு என்பவர் திராவிடன் என்னும் சொல்லே திரமிடம், தமிழகம், தமிழ் என்றாயிற்று எனக் கூறியுள்ளார். முனைவர் சுப்பிரமணிய சாத்திரியார் என்பவரும் தமிழ் முதலில் நாட்டைக் குறித்துப் பின்னர் மொழியைக் குறித்தது என்று கூறியுள்ளார். ஒருசிலர் தென்மொழி என்பது தமிழ் என்று மருவிற்றென்பர். வேறு சிலர் மள்ளர் என்ற இனத்தவர் பேசிவந்த மொழி மள்ளம் என்றும், அச்சொல்லோடு ‘திரு’ என்ற அடையைச் சேர்த்துத் திருமள்ளம் என்று மக்கள் வழங்கினர் என்றும், அச்சொல் நாளடைவில் திரிந்து தமிழ் ஆயிற்றென்றும் கூறுவர். ஆனால் இவையனைத்தும் பொருந்தாக் கூற்றுகளாகும். சுருங்கக் கூறின் தமிழ் என்னும் பெயர் தங்கள் தாய்மொழிக்குத் தமிழர்களாலே இடப்பட்டது என்று கொள்ளவேண்டும். இதனையே சி. வை. தாமோதரன் பிள்ளையும் வலியுறுத்துகின்றார். இத்தகு சிறப்பு மிக்க தமிழ் குடமுனியால் உண்டாக்கப்பட்டது என்று ஒருசிலர் கூறிவந்தனர். இது ஆதாரமற்றதும் பொருத்தமற்றதும் ஆகும்.

வடமொழியும் தமிழ் மொழியும்

பல வட சொற்கள் தமிழில் வழங்கிவரும் காரணத்தால் வடமொழியினின்றும் தமிழ் வந்ததாக ஒருசிலர் தவறாக நினைத்துக் கூறத் தொடங்கினர். தமிழ் வடமொழியினின்றும் வந்ததன்று. தமிழ்மொழி வடமொழியினும் தொன்மை வாய்ந்ததென அறிஞர் பலர் கூறுகின்றனர். எனவே தமிழ் வடமொழியிலிருந்து வந்தது என்பது ‘தந்தைக்கு முன் மகன் பிறந்தானென்று’ சொல்வது போன்றதாகும்.

தமிழின் தொன்மை

உலகிலே தோன்றிய மொழிகள் ஒன்றல்ல; இரண்டல்ல; பலப்பல. அவற்றுள்ளே செம்மொழிகள் எனக் கூறப்படுபவை ஐந்து. இந்த ஐந்திலே இன்றுவரையும் பொன்றாப் புகழுடன் நாட்டு வழக்கிலும் ஏட்டு வழக்கிலும் களிநடம் புரிந்துகொண்டும், கணக்கற்ற இலக்கிய இலக்கணங்களிலே புரண்டுகொண்டும் இருப்பது சாவா மூவாத் தமிழ்மொழியே ஆகும். ஏனைய மொழிகள் எல்லாம் ஏட்டு வழக்கில் மட்டும் நிலவுகின்றனவே தவிர நாட்டிலே தவழவில்லை. இனித் தமிழின் தொன்மையினை ஆராய்வோம்.

தென்னிந்தியாவில் வழங்கப்படும் மொழிகளைத் திராவிட மொழிகள் என்று வழங்குகிறோம். திராவிடமொழிகளில் தமிழே தொன்மையானது ஆகும். அறிஞர் கால்டுவெல் திராவிடமொழிகளைத் திருந்தியவை, திருந்தாதவை என்று இரண்டாகப் பாகுபாடு செய்துள்ளார். அவை கீழே தரப்பட்டுள்ளன.

திருந்திய மொழிகள் :- தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், கூர்க்கு.

திருந்தா மொழிகள் :- தோடா, தோண்டு, போடா, தாச்மகல், வராவோன்.

திருந்திய மொழிகளுள் ஒன்றான தமிழ். ‘தேனினும் இனியது; தெவிட்டாத் தெள்ளமுதைப் போன்றது; இலக்கியத்தில் உயர்ந்தது; இலக்கணத்திற் சிறந்தது; தனிப்புகழ் படைத்தது; தன்னேரில்லாதது’. இத்தகைய சிறப்பு மிக்க தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்ததே மலையாளக் குழந்தை என்று கூறினால் அது மிகையாகாது. இக்கருத்தையே அறிஞர் காலுடுவெலும் தமது நூலில் கூறிச் சென்றார். வடமொழிச் சொற்களும் புணர்ச்சிகளும் நிரம்பிய பழந்தமிழே மலையாளம் என்று திரு. எம். சீனிவாச அய்யங்கார் கூறியுள்ளார். குஞ்சத்து இராமானுச எழுத்தச்சன் என்பவர் மலையாளத்தைத் தமிழினின்றும் வேறுபடுத்த வடசொல் பலவும் மலையாளத்தில் புகுத்தினார். காலம் கி. பி. 11-வது நூற்றாண்டாகும். கி. பி. 1860-இல் தான் மலையாள இலக்கணம் தோன்றிற்று. எனவே மலையாளம் தமிழைப்போல் தொன்மையானதன்று. தமிழுக்கு அடுத்தபடி சிறப்புமிக்க திராவிடமொழி தெலுங்காகும். ஆனால் இம்மொழி வடமொழி உதவியின்றி தனித்து இயங்கும் ஆற்றல் உடையதன்று. மேலும் தமிழ் மொழியைக் காட்டிலும் மிகத் தொன்மையான இலக்கியங்கள் தெலுங்கில் இல்லை. தெலுங்கைப் போலவே கன்னடமும் வடமொழியின் துணையை மிகுதியாகப் பெற்று இயங்குகிறது. தமிழில் இருப்பதுபோல் தொன்மையான இலக்கியங்களும் இம்மொழியில் இல்லை. இம்மொழி தெலுங்கிற்குப் பிற்பட்டது. ஆனால் மலையாளத்திற்கு முற்பட்டது.

வளர்ச்சியுள்ள மொழியாகக் கூறப்படும் துளுவ மொழியில் இலக்கியம் என்று சொல்லத்தக்க அளவிற்கு எந்த நூலும் இல்லை. குடகு மொழிக்கு எழுத்தும் இலக்கியமும் கிடையா. எனவே இதுவரை கூறியவற்றால் திராவிடமொழிகளில் நந்தமிழே மிகத் தொன்மை வாய்ந்தது என்பது வெள்ளிடைமலையாகும். உலக மொழிகளிலே தமிழ் மிகவும் பழமையானதென்று கூறினும் தவறில்லை. அறிஞர் ஞானப் பிரகாசர் தமிழ் எல்லாத் திராவிடமொழிக்கும் அடிப்படையானது என்று எழுதி உள்ளார்.

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களும்,

‘கன்னடமும் களி தெலுங்கும், கவின் மலையாளமுந்
துளுவும் உன்னுதரத்து உதித் தெழுந்து ஒன்று பல
ஆயிடினும்
‘ என்று தமிழிலிருந்தே ஏனைய திராவிட மொழிகள் பிறந்ததாகக் கூறியுள்ளார்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்