thamizh-type-writer01

(மாசி 10, 2046 / பிப்பிரவரி 22, 2045 தொடர்ச்சி)

[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்

2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல்

“தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்”

என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில்

வாசிக்கப் பெற்ற கட்டுரை.]

 தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 2

தட்டச்சுப் பொறி:-

            1961ஆம் ஆண்டு வெளியான அரசின் குறிப்பாணை ஒன்றின்படி “மாவட்ட ஆட்சியர்களும் துறைத் தலைவர்களும் இசைந்ததற்கு இணங்க ஒரே ஒர் ஆங்கிலத் தட்டச்சுப் பொறி உள்ள அலுவலகங்கள் அத்தட்டச்சுப் பொறியை 31.3.63 வரை வைத்துக் கொள்ளலாம். பெரிய அலுவலகங்கள் ஒர் ஆங்கிலத் தட்டச்சுப் பொறியை ஒப்படைத்துவிட்டு இரண்டு தமிழ்த் தட்டச்சுப் பொறிகளைப் பெற்றுக் கொள்ளலாம்” அடுத்துவந்த ஆணையின்படி எச்சார் நிலை அலுவலகத்திலும் ஆங்கிலத் தடச்சுப் பொறி இருக்கக் கூடாது. மாவட்ட நிலை அலுவலகங்களில் மட்டும் மொத்தப் பொறிகள் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கிற்கு மிகாத அளவு ஆங்கிலத் தட்டச்சுப் பொறி இருக்கலாம்: பிறவற்றை எழுதுபொருள் அச்சுத் துறையிடம் ஒப்படைத்து மாற்றுத் தமிழ்த் தட்டச்சுப் பொறிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர், விதிகளுக்கிணங்க ஆங்கிலத் தட்டச்சுப் பொறியை ஒப்படைக்க வேண்டியவர்கள் ஒப்படைக்காமல் இருந்தால் எழுதுபொருள் வழங்கப்படமாட்டது என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

            இருப்பினும் பல அலுவலகங்களில் ஆங்கிலத் தட்டச்சுப் பொறிகள் ஒப்படைக்கப்படாமல் உள்ளன என்பது மட்டுமல்ல; ஆங்கிலத் தட்டச்சுப் பொறிகள் ஒப்படைக்கப்பட்ட அலுவலகங்களில் கூடத் ‘தனிப்பட்ட முறையில்’, ‘நன்கொடை முறையில்’,   ‘வாடகை முறையில்’ என்ற ஏதேனும் ஒரு பெயரில் ஆங்கிலத் தட்டச்சுப் பொறிகள் இருக்கத்தான் செய்கின்றன. முழுமையும் தமிழ் பயன்படுத்தப்படும் சூழலை உருவாக்காமல் இவ்வாறு ஆங்கிலத் தட்டச்சுப் பொறியைப் பயன்படுத்துவோரைக் குறைகூறிப் பயன் இல்லை. அனைத்து ஆங்கிலத் தட்டச்சுப் பொறிகளையும் பறிமுதல் செய்தாலும் தமிழ் பயன்பாட்டிற்கான வழிவகைகளை முழுமையாக உருவாக்கும் வரை, இந்நிலையே தொடரும்.

கையொப்பம்:-

            தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை இயல்பான உணர்வுடன் செயலாற்றுவோர், கையொப்பங்களைத் தமிழில் இட்டுப் பதவிப் பெயர்களைத் தமிழில் குறிப்பிடுவது கூடக் கருவூலக் கணக்குத் துறையினருக்குப் பொறுக்கவில்லை. அவர்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததும், தமிழ்ப் பயன்பாட்டிற்குச் சார்பாக புதிய அறிவுறுத்தம் பிறப்பிக்காமல், 1965 இல் கருவூலம் தொடர்பான மடல் போக்குவரவு, பட்டிகள் முதலிய அனைத்திலும் கையெழுத்து, பதவிப்பெயர் உட்பட அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டும் என்றுதான் ஆணை பிறப்பிக்கப்பட்டது. எனினும் 1970இல் பிறப்பிக்கப்பட்ட குறிப்பாணையில் ‘அரசாணைக்குச் சிறிது மாறுதலாகப் பட்டியல்களிலும், காசோலைகளிலும் தமிழில் கையெழுத்து இடலாமென்றும் ஆனால் அவ்வாறு தமிழில் கையொப்பம் இடும் போது அவற்றின் ஆங்கில எழுத்துப் பெயர்ப்பையும் குறிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டது, இதன்படியும் தமிழில் கையொப்பம் இட வேண்டுமென்பது கட்டாயமன்று. இவற்றின் தொடர்ச்சியாக 1978இல் 21.6.1978 முதல் அனைத்துப் பணியாளர்களும் தமிழில்தான் கையொப்பமிட வேண்டுமென்று ஒர் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாணையும் அண்மையில் மீண்டும் நினைவூட்டப் பெற்றுச் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. இந்த ஆணையின் அடிப்படையில் தமிழில் கையொப்பமிடுமாறு வற்புறுத்தப்பட்டு வந்தாலும் பலர் தமிழில் கையொப்பம் இடாமல் உள்ளனர் என்பது எந்த அளவு உண்மையோ, அதைவிடக் கொடுமையான உண்மை என்னவென்றால் இந்த ஆணையின் அடிப்படையில் அனைத்து இடங்களிலும் தமிழில் கையொப்பம் இடுமாறு யாரையும் வற்புறுத்த இயலாது என்பதே. ஏனெனில் வழக்கம்போல் ஆங்கிலத்தில் கையொப்பம் இடப்பட்டு ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள இவ்வாணையில் ‘அரசாணை பல்வகை எண். 2070 கல்வி (தமிழ் வளர்ச்சி) நாள் 2.12.1971 இல் பத்தி 4இல் குறிப்பிடப்பட்டுள்ளவை நீங்கலான’ அனைத்து தேர்வுகளைப் பற்றித்தான் குறிப்பிடுகின்றது. இவ்விலக்கின்படி சம்பளப் பட்டியல், பயணப் பட்டியல் சில்லறைச் செலவினப் பட்டியல், நீதிமன்றங்களுக்கும் மைய பிற மாநில அரசு அலுவலகங்களுக்கும் மேல்முறையீட்டிற்குட்பட்ட சட்டத் தொடர்புடைய ஆணைகள், அதிகத் தொழில் நுட்பம் வாய்ந்த பொருட்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், தூதரகங்கள், ஆங்கிலத்திலேயே தொடர்பு வைத்துக் கொண்டுள்ள நிறுவனங்கள் ஆகியற்றுடன் கொள்ளும் தொடர்பு ஆகியவற்றில் தமிழில் கையொப்பம் இட வேண்டா. இவையனைத்தும் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டுமா என்பது ஒரு புறமிருக்கத் தமிழில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவதை ஏற்கும் பொழுது ஆங்கிலத்தில் எழுதப்படுவனவற்றில் தமிழில் கையொப்பம் இட்டால் என்ன என்ற கேள்வி எழுகிறதா? ஒப்புக்காகப் பிறப்பிக்கப்படும் ஆணைகளைச் சிறிதேனும் பொருட்படுத்தினால் தானே இவ்வுண்மை புரியும்.

நீதிமன்றங்கள்:-

            ஆணைஅறிவிக்கப்படும் நாள் முதல் அறிவிக்கப்படும் பொருள் வரம்பில் தமிழ் பயன்படுத்த கட்டளையிடப்படலாம் என்ற அடிப்படையில் நீதிமன்றங்களில் தமிழைப்பயன்படுத்துவது குறித்தும் பல்வேறு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தமிழ் வாக்குமூலங்களைத் தமிழில் பதிய வேண்டியது போன்ற நடவடிக்கைகள் இவற்றில் அடங்கும். இவற்ரின் தொடர்ச்சியாக 1.2.82 முதல் உயர் நீதி மன்றத்திற்குச் சார்நிலையில் உள்ள உரிமை வழக்கு மன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும் வாடகை நீதிமன்றங்கள், வருவாய் நீதிமன்றங்கள் ஆகியவற்றிலும் தீர்ப்புரைகள் ஆணைகள் முதலியவற்றில் தமிழ் பயன்படுத்த ஆணை பிறபிக்கப்பட்டது. நீதிமன்ற அலுவலக நடைமுறை பொதுவான ஆணைகளின்படித் தமிழில் இருக்க வேண்டும்: சட்ட நுட்பச் சொற்களைக் கையாளும் தீர்ப்புரைகள் பொன்றவற்றிற்குத்தான் காலவரம்பிற்கேற்ப பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் தேவை. ஆனால் நல்ல முறையில் தமிழில் தீர்ப்பு மிகுதியாக வழங்கக்கூடிய நடுவர் மன்றங்களிலும் அலுவலக நடைமுறை 1% கூடத் தமிழில் இல்லை. தனியாக இதற்கென ஆணை உயர்நீதிமன்றத்தில் இருந்து வந்தால்தான் தமிழில் சுருக்கொப்பம், கையொப்பம் இடுதல், பணியாளர் விண்ணப்பங்களைத் தமிழில் எழுதுதல் தமிழில் செயல்முறை ஆணைகளைப் பிறப்பித்தல், பதிவேடுகளில் தமிழில் எழுதுதல் முதலிய பணிகளைப் பார்க்க முடியும் என்று மறுக்கிறார்கள். சரி அதற்கென்ன இந்த ஆணைகளை உயர்நீதிமன்றத்தில் கேட்டுப் பெறக்கூடாதா என்கிறீர்களா? தேவையில்லாத இந்நடைமுறை குறித்து அவர்களுக்குக் கூற நாம் யார்? மேலும் பல நடுவர்கள் ஆங்கிலத்தில் தீர்ப்புரை எழுத விதிவிலக்கு வேண்டி, அவ்வாறே பெற்று வந்தனர். ஒவ்வொருவருக்காக விதிவிலக்கு தரவேண்டாம் எனக் கருதிய உயர்நீதிமன்றம், ஒட்டு மொத்தமாக இவ்வாணைக்கு மாறாகத் தீர்ப்புரைகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் வழங்கலாம் என விதிவிலக்கு அளித்து விட்டது. இதனால் வாலாயமாகத் தமிழில் தீர்ப்புரை வழங்கியவர்கள் கூட இப்பொழுது ஆங்கிலத்திற்குத் தாவிவிட்டனர். மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தீர்ப்பாயத்தில் ஒர் ஆணை அல்லது தீர்ப்புரையாவது தமிழில் வந்ததாகத் தெரியவில்லை. வணிகவரி முதலான துறைகளில் வழங்கப்படும் தீர்ப்பாணைகளை ‘அனைத்து வழக்குகளுமே மேல்முறையீட்டுக்கு உட்பட்டவை’ என எடுத்துக் கொண்டு தமிழில் வழங்குவதில்லை அரசாணை (நிலை எண். 968/1982 )இன் படி 1.4.82 முதல் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் ஆட்சிமொழி மூவாண்டு முனைப்புத் திட்டம் விரிவுபடுத்தி ஆணையிடப்படுள்ளது. ஆனால் உயர்நீதிமன்றத்திலும், அனைத்துப் பிற நீதிமன்றங்களிலும் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் இல்லை என்பது நீதிமன்றமே நீதி பிறழ்வதாகாஆகாதா? நீதிமன்றங்களிலேயே தமிழுக்கு நீதி வழங்காநிலை தொடருகையில் கனவு கண்டு காலத்தைக் கழிப்பானேன்?

(இனியும் காண்போம்)

இலக்குவனார் திருவள்ளுவன்

 kanavukal-aatchimozhi