(தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 3/4 – குலோத்துங்கன்-தொடர்ச்சி)

உதிரும் தமிழ் மலர்கள் 4/4

இந்திய நாட்டின் தட்பவெப்பநிலைகளைப் பொறுத்த வரையில் 300 ஆண்டுகளுக்கு மேல் இந்த ஓலைச் சுவடிகளால் வாழ முடியாது என்பதையும், 300 ஆண்டுகளுக்குள் இவை படி எடுக்கப்படவில்லையென்றால் அடியோடு அழிந்து விடும் என்பதையும், இவ்வாறே எங்கள் தமிழ்ச் சமுதாயம் அச்சு இயந்திரம் வருவதற்கு முன்னரே ஏராளமான தமிழ் ஓலைச் சுவடிகளை இழந்துவிட்டது என்பதையும் குறிப்பிட்டேன். அச்சு இயந்திரம் வந்த பின்பும் 53,000 ஓலைச் சுவடிகள் பாதுகாப்பார் இன்றி அழியும் நிலையில் உள்ளன. 300 ஆண்டுகளுக்கு மேல் வாழ முடியாத இச்சுவடிகளில் பெரும்பாலான சுவடிகள் 200 அல்லது 250 ஆண்டுகளை ஏற்கெனவே கடந்து விட்டன. இவற்றை விரைவில் காப்பாற்ற வேண்டும். இவற்றை அழியவிடுவது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே அவமானம் என்றும் நான் குறிப்பிட்டேன்.

இத்துறையில் ஆசியவில் ஆய்வு நிறுவனம் மேற்கொண்டு வரும் பணிகள் பற்றி நான் விரிவாக விளக்கியது பன்னாட்டு அறிஞர்களை மிகவும் கவர்ந்தது. எனது உரையினை அன்று நிகழ்த்தப்பட்ட உரைகளுள் மிகச் சிறப்பு வாய்ந்த உரையாக அனைவரும் பாராட்டினர். ஆபத்துக்கிடமான உலக ஆவணங்களின் வரிசையில் 53,000 தமிழ் ஓலைச் சுவடிளும், இணைக்கப்பட வேண்டுமென்று வல்லுநர் குழு பரிந்துரை செய்தது. இந்தக் குழுவின் கூட்டம் ஒருங்கே பிரெஞ்ச் மொழியிலும் ஆங்கிலத்திலும் நடந்தது.

கூட்டத்தின் இறுதிப் பகுதி பெரும்பாலும் பிரெஞ்சு மொழியில் நடத்தப்பட்டது. “இந்திய நாட்டின் ஒரு பகுதியான தமிழ்நாட்டில் 53,000-த்திற்கும் மேற்பட்ட தமிழ் ஓலைச் சுவடிகள் பாதுகாப்பார் இன்றி அழிந்து கொண்டிருக்கின்றன. இவை பற்றிய போதுமான தகவல்கள் பன்னாட்டு அறிஞர்களைக், குறிப்பாக ஐரோப்பிய சமுதாயத்தை வந்து எட்டவில்லை. இந்த ஓலைச் சுவடிகள் மனித குலத்தின் அறிவு வளர்ச்சியில் மிகக் குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பெறுகின்றன என்று இந்திய நாட்டின் சார்பாளர் மிகச் சிறப்பாக விளக்கினார். அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியை யுனெசுகோ நிறுவனம் மேற்கொள்ள வேண்டுமென்று பரிந்துரைக்கப்படுகிறது.” என்று பிரெஞ்சு மொழியில் பன்னாட்டு வல்லுநர் குழுவின் பரிந்துரை படிக்கப்பட்ட போது கரை காணாத மகிழ்ச்சியில் என் உள்ளம் துள்ளிக் குதித்தது. வார்சாவில் பன்னாட்டு அறிஞர்களின் பரிந்துரையைப் பெற்று, ஐக்கிய நாடுகளின் அமைப்பான யுனெசுகோ நிறுவனத்தின் வாயிலாகச் செயல்பட இருப்பதை எண்ண எண்ண நெஞ்சில் பெருமிதம் ஏற்பட்டது.

அன்றிரவு போலந்து நாட்டு மரபுப்படி ஒரு பெரிய விருந்துக்கு யுனெசுகோ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. குளிரால் நடுங்கும் போலந்து நாட்டின் இயற்கை எழில்மிக்க அரண்மைனையின் பக்கத்தில் அமைதியாகப் பனியைப் போர்த்துக் கொண்டு அசைந்தாடிச் செல்லும் ஆற்றின் கரையில் பன்னாட்டு அறிஞர்களுக்கு இரவில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைதியான சூழலில் எங்கள் ஆய்வுப் பயணத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்த விருந்து நடைபெற்றது. உலகின் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் முழு வெற்றி பெற்று விட்டது போன்ற மகிழ்ச்சியில் பன்னாட்டு அறிஞர்கள் ஒருவரோடு ஒருவர் கை குலுக்கிக் கொண்டனர்.

“அன்றிரவு ஆசியவில் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுப் பணிகளைப் பற்றி நானும், டாக்டர் சீ ஃகிகோசகாவும், சப்பானியச்சார்பாளர் முனைவர் அகியோபாசுவும், சில ஐரோப்பிய நாட்டு அறிஞர்களும் இணைந்து விரிவாகக் கலந்துரையாடினோம். அடுத்த நாள் காலை வார்சாவில் உள்ள தலைமை ஆவணக் காப்பகத்தைப் பார்வையிட்டு விட்டு மறு நாள் இலண்டன் செல்வதாகத் திட்டமிட்டோம்” என்று திரு சி. சான் சாமுவேல் அவர்கள் முப்பது வருடங்களுக்கு முன்னர் போலந்து நாட்டின் தலைநகரம் வார்சா நகரத்தில் நடைபெற்ற யுனெசுகோ கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை (1994இல் வெளியான) அவரது நூல்களில் வெளிப்படுத்தினார்.

தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மை உலகம் தழுவிய நிலையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்ற இக்காலத்தில் பழந்தமிழ்ச் சுவடிகள் தாங்கி வந்துள்ள அறிவுக் கருவூலங்களையெல்லாம் உலகுக்குக் கொண்டு காட்டுவது தமிழரின் கடமையாகும்..

ஆங்காங்கே அழிந்து கொண்டிருக்கும் தமிழ் ஓலைச் சுவடிகளில் ஏறத்தாழ 40,000க்கும் மேற்பட்ட சுவடிகள் மருத்துவம், போன்ற தொன்மையான அறிவியல் துறைகளைச் சார்ந்தனவாக உள்ளன. ”தமிழ் ஓலைச் சுவடிகள் காட்டும் மரபு அறிவியல்” என்ற தலைப்பில் ஆசியவியல் ஆய்வு நிறுவனம் ஒரு பெரிய ஆய்வுத் திட்டத்தைத் தீட்டிச் செயல்படுத்தி வருகின்றது.

மேலைநாட்டு அறிவியல் சிந்தனைகள் இங்கு வந்து சேரும் முன் நமது அறிவியல் சார்ந்த முயற்சிகளின் நிலை என்ன என்பதையும், அவை மேலைநாட்டு ஆதிக்கத்தால் எவ்வாறு அழிந்தன என்பதையும் ஆய்ந்து காணும் இந்நிறுவனத்தின் முயற்சியால் தோன்றியதே மேற்கூறிய ஆய்வுத் திட்டம்.

மேற்கின் தொடர்பு நமக்கு ஏற்படுவதற்கு முன்னர் நமது நாடு மருத்துவம், கட்டடக் கலை போன்ற பல்வேறு அறிவியல் சார்ந்த துறைகளில் மிக உயர்ந்த நிலையைப் பெற்றிருந்ததை யாராவது மறுக்க முடியுமா?

மருத்துவக் கலையிலும், பிற கலைகளிலும் நாம் பெற்றிருந்த திறமைகள் உலகத்தையே வியக்க வைக்கின்றனவே. நமது தொன்மையான அறிவியல் சிந்தனைகளைத் தாங்கி நிற்கும் இந்தப் பழந்தமிழ் ஓலைச் சுவடிகளைப் படியெடுத்து அவற்றின் கருத்துகளை ஆய்வது கல்வி வளர்ச்சிக்கு மிகவும் தேவை. இந்தத் திட்டத்தைப் பன்னாட்டு நிலையில் பல்வேறு நாட்டு அறிஞர்களின் துணையோடு இந்நிறுவனம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

மரபு அறிவியல் சார்ந்த தமிழ் ஓலைச் சுவடிகள் பல்வேறு தலைப்புகளில் கிடைக்கின்றன.

  1. சித்தவைத்தியம், ஆயுர்வேதம், யுனானி முறையிலமைந்த மருத்துவச் சுவடிகள்.
  2. வருமம், போன்ற போர்க்கலையும், மருத்துவம் பற்றிய சிந்தனைகளும் இணைந்த சுவடிகள்.
  3. விலங்குகள் வைத்தியம் அல்லது வாகடம் தொடர்பான சுவடிகள்.
  4. பயிர்த்தொழில் சார்ந்த கூவநூல், சரநூல் போன்ற சுவடிகள்.
  5. கட்டடக் கலை, கப்பல் கட்டுதல், கோயில்கள் அமைத்தல், சிற்ப வேலைப்பாடு, உலோகத்தை மையமாகக் கொண்ட கலைகள், ஓவியம் போன்றன தொடர்பான சுவடிகள்.
  6. இசை நூல்கள், இசைக் கருவிகள் செய்யும் முறை ஆகியன பற்றிய சுவடிகள்..
  7. கணிதம், வானநூல் தொடர்பான சுவடிகள்.
  8. ஓகம் தொடர்பான சுவடிகள்.
  9. விலங்குகளைப் பழக்குதல் போன்றன தொடர்பான சுவடிகள்.
  10. போர்க்கலை சார்ந்த சுவடிகள்.
  11. உடற்கூறு அல்லது அங்கசாத்திரம் (சாமுத்திரிகா இலட்சணம்) தொடர்பான சுவடிகள் போன்றன.

மேற்குறிப்பிட்ட மரபு அறிவியல் சார்ந்த தமிழ் ஓலைச் சுவடிகள் ஆய்வும், நூல்களாக வெளியிடுவதும் இன்றைய மனித அறிவு வளத்திற்கு மிகவும் தேவை. இந்த ஓலைச் சுவடிகளை அழிய விடுவது மனித குலத்திற்கே பேரிழப்பாக அமைந்து விடும்…
என்று ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் முனைவர் திரு சி.சான் சாமுவேல் தனது நூல்களில் தனது கவலையை வெளிப்படுத்துகிறார்.

ஆசியவியல் ஆய்வு நிறுவனம் தற்பொழுது சென்னையில் செம்மஞ்சேரியில் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் மூலமாக நாட்டுப்புற இலக்கியங்களைத் தாங்கிய ஓலைச் சுவடிகளில் வெளிப்பட்ட வாய்வழி இலக்கியங்கள் நூல்களாகப் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன.


நாட்டுப்புற இலக்கியங்கள் , வாய்மொழி இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இந்த வாய்மொழி இலக்கியங்களும், ஓலைச் சுவடிகளில் பதிவு செய்யப்பட்டு ஆவணப் பதிவுகளாக கிடைக்கின்றன. இத்தகைய ஆவணப் பதிவுகளே ”ஒடுக்கப்பட்டவர்கள், சமுதாயத் தகுதியைப் பெறாதவர்கள், தோல்வி கண்டவர்கள், சூழ்ச்சியால் முறியடிக்கப்பட்டவர்கள், அதிகார வருகத்தை எதிர்த்துக் குரலெழுப்பியவர்கள், ஆளும் வருக்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டிச் சிறைகளில் செத்தவர்கள் பற்றிய வரலாறுகளை வெளிப்படுத்துகின்றன. இத்தகைய நாட்டுப்புற இலக்கியங்களைத் தாங்கிய ஓலைச் சுவடிகளை திரு.சான் சாமுவேல் அவர்களது தலைமையிலான ஆசியவியல் ஆய்வு நிறுவனமே சேகரித்துப் பாதுகாத்து நூல்களாகத் தமிழ், ஆங்கிலத்தில் வெளியிட்டார்கள்..

இந்த வரிசையில் “சின்னத் தம்பி” கதை, ”குருக்களாஞ்சி” கதை, ”உச்சினி மாகாளியம்மன்” கதை என்ற மூன்று கதைப் பாடல்களை ஓலைச் சுவடிகளிலிருந்து பதிப்பித்து விளக்க உரையுடனும், ஆங்கில மொழிபெயர்ப்புடனும் நூல்களாக வெளியிட்டார்கள்.. இது தவிர ஆசியவியல் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ”பலவேசஞ் சேர்வைக்காரன்” கதை, ”வெங்கலராசன்” கதை, ”பூலித் தேவன் கதைப் பாடல்”, “சந்தனத் தேவன் கதைப் பாடல்”, ”அண்ணன்மார் கதைப்பாடல், ”பெருமாள் சுவாமி கதைப் பாடல்” போன்ற நூல்கள் முக்கியமானவை..

ஆசியவியல் ஆய்வு நிறுவனர் திரு சி. சான் சாமுவேல் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் ஓலைச் சுவடிகளைப் பாதுகாப்பதற்காக யுனெசுகோவில் பேசிய தலைசிறந்த வரலாற்றுச் சாதனை நிகழ்வை அவர் எழுதிய இரண்டு நூல்கள் மூலமாக அறிந்து கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்பட்டது.

திரு. சி. சான் சாமுவேல் அவர்கள் எழுதிய அந்த இரண்டு நூல்கள்:

1) குமரி முதல் வார்சா வரை.

2) உதிரும் தமிழ் மலர்கள்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::;

கட்டுரை ஆக்கம் –

மா. குலோத்துங்கன் (தொன்மை தரிசனம் டி.வி – யூடியுப் சேனல்)

குறிப்பு- கட்டுரை எழுதப் பயன்பட்ட நூல்கள் –

  1. குமரி முதல் வார்சா வரை
  2. உதிரும் தமிழ் மலர்கள்.
  3. தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்,
    ஆசிரியர்: திரு குடவாயில் பாலசுப்பிரமணியன்
  4. மதுரையில் சமணம்.
    ஆசிரியர்: முனைவர் திரு சாந்தலிங்கம்..

(தொடரும்)
குலோத்துங்கன்
தோழர் தியாகு
தாழி மடல் 304