தலைப்பு-மீண்டும் பதவியில் அமரும் தன்மை, சி.இலக்குவனார் ;thalaippu_marumai_ilakku

மறுமை – மீண்டும் பதவியில் அமரும் தன்மை

 மனநலத்தி னாகு மறுமைமற் றஃது      
    மினநலத்தி னேமாப் புடைத்து (குறள் 459) 

  மறுமை -மீண்டும் அப்பதவியில் அமரும் தன்மை, மன நலத்தின் ஆகும்-உள்ளத்தின் சிறப்பால் உண்டாகும், மற்று அஃதும்-மீண்டும் அங்ஙனம் ஆவதும், இனநலத்தின்-சூழ்ந்திருக்கும் இனத்தின் சிறப்பால், ஏமாப்பு உடைத்து-வலிமை உடையது ஆகும்.

      அரசியல் பதவிகளில் மீண்டும் மீண்டும் அமர்ந்து தொண்டாற்றும் நிலைமை எல்லோர்க்கும் கிட்டுவது அன்று. ஒரு முறை ஆண்ட பின்னர் மறுமுறை மக்களால் அமர்த்தப்பட வேண்டுமாயின், சிறந்த நற்பண்பு உடையராய் இருத்தல் வேண்டும். அங்ஙனம் அமர்ந்தாலும், நல்லறிஞர் புடைசூழ இருந்தால் எவரானும் அகற்ற முடியாத வலிமை பெற்றோராய் இருக்கலாம். இல்லையேல் சுற்றியிருப்போரே பொறாமை காரணமாகப் பதவியினின்றும் அகற்றுவதற்குரிய வழிகள் தேடுவர்.

      ‘மறுமை’ என்பதற்கு  “மறுமையின்பம்இறந்தபின் அடையும் வீட்டின்பம்” என்று பொருள் கூறியுள்ளனர் பழைய உரையாசிரியர்கள். அரசியலில் உள்ள இக்குறட்பாவிற்கு அங்ஙனம் பொருள் கூறுவது ஏற்புடைத்தாகத் தெரியவில்லை.

பேராசிரியர் சி.இலக்குவனார்:

இலக்குவம் : வள்ளுவர் வகுத்த அரசியல்: பக்கம் 746

அட்டை,இலக்குவம், காவியா பதிப்பகம் - wrapper, kavyapathippagam, ilakkuvam