(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 33 (2.03) – தொடர்ச்சி)

 

தலைப்பு-வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம், இல்வாழ்வியல் ;thalaippu_v-u-chithambaranaarin_meyyaram-ilvaazhviyal

மெய்யறம்
இல்வாழ்வியல்

34.உயிர்த்துணை யாளுதல்

331. இருவரு ளறிவிற் பெரியவ ராள்க.

கணவன், மனைவி இவர்களில் அறிவில் சிறந்தவர் குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தல் வேண்டும்.

  1. ஆண்பா லுயர்வெனல் வீண்பேச் சென்க.

ஆண்கள்தான் சிறந்தவர் என்று கூறுவது பயனற்ற பேச்சு ஆகும்.

  1. துணைநன் காள்பவர் தொல்லுல காள்வர்.

வாழ்க்கைத்துணையுடன் ஒற்றுமையாக வாழ்பவர் உலகம் முழுவதும் வெற்றி கொள்வர்.(எல்லா இன்பங்களும் அடைந்து வாழ்வர்.)

  1. தன்னுயி ருடல்பொரு டன்றுணைக் குரியன.

ஒருவருடைய உயிர், உடல், பொருள் எல்லாம் அவரது உயிர்த்துணைக்குச் சொந்தம் ஆகும்.

  1. தன்றுணை யுயிர்முத றனக்காங் குரியன.

அதுபோல் அவரது வாழ்க்கைத்துணையின் உயிர் முதலியவை அவருக்குச் சொந்தம் ஆகும்.

  1. இருவராத் தோன்றினு மொருவரே யுள்ளின்.

கணவன், மனைவி இவர்கள் தோற்றத்தில் இருவராக இருந்தாலும் உண்மையில் ஒருவரே ஆவர்.

  1. தானறிந் தவையெலாந் தன்றுணைக் குணர்த்துக.

ஒருவர் தான் அறிந்தவற்றை எல்லாம் தன் வாழ்க்கைத்துணைக்குக் கற்றுத் தர வேண்டும்.

  1. தனதுநன் னெறிதுணை சார்ந்திடச் செய்க.

அவரது நேர்மையான வழியில் வாழ்க்கைத்துணையையும் செல்லுமாறு செய்தல் வேண்டும்.

  1. இயற்றுவ துணையுட னெண்ணி யியற்றுக.

எந்தச் செயலைச் செய்தாலும் வாழ்க்கைத்துணையுடன் ஆலோசித்துப் பின் செய்தல் வேண்டும்.

  1. உண்பன துணையோ டுடனிருந் துண்ணுக.

உண்ணுவதை வாழ்க்கைத்துணையுடன் சேர்ந்தே உண்ணுதல் வேண்டும்

 

– வ.உ.சிதம்பரனார்

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum