(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 40(2.10)  தொடர்ச்சி)

 மெய்யறம்

இல்வாழ்வியல்

 41(2.11) பேதைமை யொழித்தல்

401.பேதைமை யேதங்கொண் டூதியம் விடுதல்;

பேதைமை என்பது ஒருவன் தனக்குக் கேடு தரும் பண்புகளைப் பின்பற்றி நன்மை தரும் பண்புகளை விட்டுவிடுதல்;

  1. கடிந்தவை தம்பால் காதன்மை செய்தல்;

மேலும் பெரியோரால் விலக்கப்பட்ட செயல்களை விரும்பி செய்தல்;

  1. நாணன் பருள்புகழ் பேணுத லின்மை;

மேலும் பழிச் சொல்லுக்கு வெட்கப்படாமை, அன்பு இல்லாமை, அருள் இல்லாமை, புகழ் தரக்கூடிய நல்ல செயல்களைச் செய்யாமை;

  1. அறிந்துணர்ந் துரைத்து மடங்கா தொழுகல்;

அரிய நூல்களைக் கற்று உணர்ந்து உரைத்தும் அடங்காது வாழ்தல்;

  1. அறத்தை விடுத்து மறத்தைப் புரிதல்.

மேலும் நல்ல செயல்களைச் செய்யாமல் தீய செயல்களைச் செய்தல் ஆகியவை ஆகும்.

  1. வினைசெயின் பொய்படும் புணைகொளும் பேதை.

பேதை ஒரு செயலைச் செய்ய முற்பட்டால் அச்செயல் முடிவுபெறாமல் போய்விடும்; அவனும் குற்றவாளியாகிக் கைவிலங்கு பூணுவான்.

  1. தமர்பசித் துழலப் பிறர்க்கிடும் பேதை.

பேதையின் உறவினர் பசியால் துன்புறும் போது பேதையால் மற்றவர் நன்மை அடைவர்.

  1. பேதையோர் காசுறிற் பித்தன் களித்தற்று.

பேதை செல்வம் அடைந்தால் பித்துப் பிடித்த ஒருவன் கள் குடித்துத் தடுமாறுவதுபோல தன்னிலை மறந்து நடப்பான்.

  1. அவைபுகிற் பேதை யதனலங் குன்றும்.

சான்றோர்கள் நிறைந்த சபையில் பேதை நுழைவதால் சபையின் பெருமை குறையும்.

  1. பெரியார் நூல்கொடு பேதைமை களைக.

அறிவிற் சிறந்த பெரியவர்களின் நூல்களைக் கற்று பேதைமையை நீக்க வேண்டும்.

–வ.உ.சிதம்பரனார்