thaaymai

தாய்மை 

இறைவனைக் காண நினைத்தேன்

உன்திருமுகம் காணும் முன்பாக

உணரத் துடித்தேன் சொர்க்கமதை

உன்னிரு  பாதங்களில் பணியும் முன்பாக.

எழுத சொற்கள் இல்லையம்மா

வளர்த்த விதம் சொல்வதற்கு

பாடிடச் சொற்கள் கிடைக்கவில்லை

பாடுபட்டு படிக்க வைத்ததற்கு!

விறகடுப்பின் புகையில்நீ

வெந்துஎம் பசிபோக்கினாய்!

வியர்வை நீரூற்றி எங்களை

வளர்த்து ஆளாக்கினாய்!

பட்டங்கள் பெறவைத்துப்

பார்த்துப் பூரித்துப்போனாய்!

வெற்றிகள் பலகொடுத்து

வேதனைகளை விரட்டினாய்!

கவிதைகளால் தாலாட்டி

கண்ணுறங்கச் செய்தாய்!

வருணனைகள் பலதந்து என்னுள்

வாழ்ந்துகொண்டுதானிருக்கிறாய்!

பாரங்களை இறக்கிட

உன் பாதங்கள் வேண்டும்

இனிதே தூங்கியெழ

உன் மடிவேண்டும் ஒரு நொடி!

சோகங்கள் தீர்த்திட – உன்

தோள்கள் தான்வேண்டும்!

கண்ணீரைத் துடைத்திட – உன்

கைகள் மட்டுமே வேண்டும்!

ஆறுதல் கூறிட

அன்பால் அரவணைக்க

துணிவு தந்திட

தேற்றி நிமிர்த்தி

தாயே! என்னருகே

நீ வேண்டும்! நீ வேண்டும்!

தாயான பின்பும்

தாய்மைக்காகத்

தவித்திடும் சேய்..

காரைக்குடி பாத்திமா அமீது

சார்சா