56eezha nilam

நீயே என்  தாயே..!!

ஈரைந்து
திங்களே..
தாயெம்மைச்
சுமந்தாள்…

மூவைந்து
ஆண்டுகள்
என்னைச் சுமந்த
அன்னை மண்ணே..

என்னைத் தொலைத்தாயோடி?

வெயிலோடும்
வரப்போடும்
விளையாட
மடி தந்த
அழகிய
தாயவளை
நெக்குருகும்
நினைவுகளில்
நானின்று
சுமக்கின்றேன்..
நானென்ன
உன் தாயா?

பொழுதெல்லாம்
பொங்கும்
உணர்வு ஊற்றுகளில்
உருக்குலைந்து
போகாமல்..
போற்றியிங்கு
பாடுகின்றேன்..

சுழன்று
வீசிய
காலச்
சுழலில்
அகதியென
உலக மூலைகளில்
திக்கொன்றாய்..
தூக்கி வீசப்பட்ட
தூசுகளாக
நாம்…

56eezha nilam04

காலச் சதியில்
சிதறிய
முத்துகளாய்..
உறவுகள்
நாம் பிரிந்தோம்..
எங்கெங்கோ
தொலைந்தோம்..
முகமிழந்து
போன
என் சந்ததிகள்..
உலகச் சந்திகளில்

திக்கொழிந்து
திசை மறந்து
உறவிழந்து
போனாலும்..
உணர்விழந்து
போனதில்லையடி…
உன் முகம்
மறந்து
போகவில்லை…

விரட்டிய
பகைக்கஞ்சி
தூர தேசம்
ஓடி வந்த
என்னைத் தொலைத்த
என் அன்னை மண்ணே..
..
தொலைந்து போகும்
எம் காலங்களில்
தொலையாத
நினைவுகளுள்
நீயே
நிமிர்ந்து
நிற்கின்றாய்…

தொலை தூரம்
சென்றாலும்..
தொலைந்து
போகா
சிந்தனைகளைச்
சேர்த்தெடுத்து
பொழுதெல்லாம்
நினைப்பு உருக்கி
விடுதலைக்காய்
மூச்செறிக்க
நீயே
என்னை
இயக்குகின்றாய்…

உணர்வள்ளி
வார்க்க வைக்கும்
வல்லமை
தருபவளாய்
நீயே என்
தாயே..!!

56eezha nilam03

நீயிருக்கும்
திசை முகமே
என்
நினைப்புகளும்
முகம் பார்க்கும்..

புழுதி மண்
புரண்டு
மண்வாசம்
காணும்
நாள்..
என்
இறுதித் துளி
வாழ்விலேனும்
வரமாகி வருமா?
வராமலே போகுமா?
அறியேன்..

ஏக்கங்களை
எமக்குத் தந்து
தூக்கங்களைப்
பறிக்கின்றாய்…
துக்கத்தைத் தந்து
ஊக்கத்தை
உந்துகின்றாய்..

பச்சை
வயல்
பரப்பி..
பசுமையில்
தாலாட்டிய
தாய் மண்ணே..

இச்சையோடு
அழைக்கின்றேன்..
கனவிலேனும்
மடி தாடி..

என்றுனை
மீண்டும்..
காண்பேன்.. ??
முத்தமிட்டு
முத்தமிட்டு
முப்பொழுதும்…
மகிழ்ந்து குலவி
மூச்சின் பசி
என்று
நான்
போக்கிடுவேன்.???

வலி சுமக்கும்
பொழுதுகளில்
வலிந்து மடி
தந்து
நினைவினில்
தாலாட்டும்
தாயிங்கு
நீயடி…

56eezha nilam02

இக்கரையில்
இருந்தாலும்..
என்
இருப்பு
இன்னும்
அக்கரையே..

பார் போற்றும்
பறாளாய் வீதியே…
நீண்ட வீதி
கழுவும்
நிறைந்து வழியும்
குளப்பெருக்கே..
பார் எங்கு
சென்றாலும்..
பாரம்மா
நான் உன் பிள்ளை..

கிடந்து உழலும்
கவலைகளைக்
கடக்கவைக்கும்
சுமை தாங்கிக்
கல்லே…
இறக்கி வைக்காத
என்
சுமை இறக்க
இறுக்கி
தளர்த்தும்
வலி குறைக்க
தாய் மண்
மடி தேடி
நான் வரும் நாள்
கூடிடுமோ…

சொல்லடி
என் தாயே..
என்னைப்
பிரிந்திருக்க
சம்மதமோ?

உன் மடி
தேடி
நான் வர
வேண்டுமடி
எம் தேசத்திற்கு
விடுதலை !!!
கூடுமோடி?

விடியும்
வானில்
கதிரவன்
வரும் நாளில்
உன்னைத் தேடி
நான் வருவேன்..

ஒருவேளை
அதற்கு முன்
என்
முடிவு
முதல்
வந்தால்..
நான் மடிந்த சேதி
உனைத் தேடி
வருமுன்னே…
என் ஆவி
உன்னை
நாடி வரும்!

அது வரை
என்
பிஞ்சுப்
பாதங்களின்
புழுதி
தோய்ந்த
தடங்களைக்
கால நதி
கழுவாமல்..
மண்ணுக்குள்
பொத்தி வைத்திரு
அம்மா!!!!

– செந்தமிழினி பிரபாகரன்senthamizhini_prpakaran01