தலைப்பு-இனித் தொடங்கப் போகிறது :thalaippu_ini_thodangapoakirathu

இன்பவுலா இனித்தொடங்கப் போகிறது!

   கருங்கூந்தல் நிறைந்திருக்க
கன்னமதில் குழிகள்விழ
விளியிரண்டும் மீனெனவே
வெண்மைநிற முகத்தினிலே

   மருண்டோடி பார்த்திருக்க

   வட்டநிலா வருவதுபோல்
இடைஇருந்தும் தெரியாமல்
அவள்வருவாள் நடைபயின்று

   அதைக்காண ஆவலுடன்

  அன்றாடம் காத்திருப்பேன் !

   பலபேர்கள் வந்தாலும்

   பார்த்துவிடா என்பார்வை

   இவள்மட்டும் வந்தவுடன்

   எனைமீறிச் சென்றுவிடும்

   நினைவெல்லாம் அவளாக

   நிறைந்திருக்கும் காரணத்தால்

   அவள்வருகை மட்டுமெந்தன்

   அகத்தினுள்ளே புகுந்துவிடும் !

   சிலவேளை அவள்பார்ப்பாள்

   பலவேளை நான்பார்ப்பேன்

   மின்சாரம் பாய்வதுபோல்

   வேகமுள்ளே பரவிநிற்கும்

   என்பார்வை அவள்பார்வை

   இரண்டுமொன்றாய் இணைந்திடவே

   கண்களிலே பேசியவர்கள்

   கைபிடிக்க எண்ணிவிட்டோம் !

  இல்லறத்தில் நாமிணைந்தோம்

  இன்பவுலா சென்றுவந்தோம்

  அன்புநிறை காதலொடு

  அகமகிழ நாமிருந்தோம்

  ஈருடலாய் இருந்தாலும்

  ஓருயிரே என்றிருந்தோம்

  எங்களது காதலது

  இணையின்றி வளர்ந்ததுவே !

  பிள்ளைகள் பிறந்தார்கள்

  பேரின்பம் தந்தார்கள்

  உள்ளூர நாம்மகிழ்ந்தோம்

  உவகையுடன் கொஞ்சிநின்றோம்

  கைநிறைய பொருள்வந்து

  கண்ணியமாய் நாம்வாழ்ந்தோம்

  கடவுளது அருளினால்

  காதல்மேலும் வளர்ந்ததுவே !

  வளர்ந்துவிட்ட பிள்ளைகளும்

 இணைந்துவிட்டார் இல்லறத்தில்

  முதுமை வந்துவிட்டதனால்

  முடங்கிவிட்டோம் இருவருமே

  தனிமையெனும் நிலையெம்மை

   தவிக்கவைத்து நிற்கிறது

  இனிமைதனை நினைத்தேங்கி

   இருக்கின்றோம் இருவருமே !

  கட்டழகுக் கருங்கூந்தல்

  காந்தநிறை கண்மணிகள்

  மொட்டவிழ்த்த புன்சிரிப்பு

  முழுநிலவு பொலிவுமுகம்

  அத்தனையும் அவளிழந்து

  அயர்ந்திப்போ திருக்கின்றாள்

  அவள்கோலம் தனைநினத்து

   அலமந்து நானிருக்கிறேன் !

  நான்ழுதால் தானழுவாள்

  நான்சிரித்தால் தான்சிரிப்பாள்

  தேனாகப் பேசியவள்

  திக்திக்கிப் பேசுகிறாள்

  மான்விழிகள் கொண்டஅவள்

  மயக்கமுடன் விழிக்கின்றாள்

  மயக்கம்தந்த மங்கையிப்போது

  தயக்கமுடன் தவிக்கின்றாள் !

  என்றாலும் அவளிடத்தில்

  என்னின்பம் தெரிகிறது

  தன்தோளில் எனையணைத்துத்

  தான்வருடி நிற்கின்றாள்

  நான்வீழ்ந்து போகாமல்

  தான்வேராய் தாங்குகிறாள்

  என்னுயிரைத் தன்னுயிராய்

  எண்ணுகின்ற என்தலைவி !

  கூன்விழுந்து விட்டாலும்

  நான்விழுந்து போகாமல்

  தானெழுந்து எனைத்தாங்கி

   தாயெனவே நிற்கின்றாள்

   என்காதல் வாழ்வினிலே

   இப்போதே இனிக்கிறது

   என்வாழ்வில் இன்பவுலா

   இனித்தொடங்கப் போகிறது !

– மெல்பேண் செயராமர்