thalaippu_kavignan_thamizholi

கவிஞன்

மோனக் கருக்கலிலே – விண்
முத்தொளி தோன்றுகையில்
வானக் கடல்கடந்தே – அதை
வாங்கிவர விரைவேன்!

முத்துப் பனித்துளியில் – கதிர்
முத்த மளிக்கையிலே
பித்துக் கவிபுனைந்தே – மணம்
பேசி மகிழ்ந்திடுவேன்!

சாயும் கதிர்களிலே – இருட்
சாலம் புரிகையிலே
காயும் நிலவெனவே – வழி
காட்ட எழுந்திடுவேன்!

நீலக் கடல்அலையில் – கதிர்
நெய்த வலையிடையே
கோலக் குளிர்மணிபோல் – கவி
கொட்டிச் சிரித்திடுவேன்!

ஊரை எழுப்பிடவே – துயர்
ஒன்றை நொறுக்கிடவே
தாரை முழக்கிடுவேன் – தமிழ்ச்
சாதி விழித்திடவே!

கத்தி முனைதனிலே – பயங்
காட்டும் உலகினிலே
சத்தியப் பேரிகையை – நான்
தட்டி முழக்கிடுவேன்!

thamizholi01

கவிஞர் தமிழ்ஒளி

கலாவல்லி – 1955