தமிழ்த்தாய் வணக்கம் 1-5

 

நல்ல தமிழ்நூல் நடையெழுத நீயெனக்கு

வல்லமைதா வென்று வணங்கினேன்-தொல்லைப்

பலகாலந் தொட்டுப் பருவங் குலையா

திலகுதமிழ்த் தாயே இனிது

 

என்றும் உனது புகழ் யான்பேச வேண்டுமென

நின்று தொழுகின்றேன் நீயருள்வாய்-தொன்று

முதலாகத் தோன்றி முடிபுனேந்து பாவோர்

இதழ்வாழும் தாயே இனிது

 

உலக மொழியெல்லாம் உன்னடியில் தோன்றி

இலகும் எழில்கண்டேன் இன்ப-நலமிக்க

ஆதித் தமிழே அழியாத தத்துவமே

சோதிப் பொருளே துதி.

 

காலை மலரின் கவினழகும் கற்பகப்பூஞ்

சோலைக் கனியின் சுவைநயமும்-ஆலயத்துத்

தெய்வ அருளும் திருவும் இலங்குமணிப்

பைந்தமிழே வாழ்த்துமென் பாட்டு

 

பொங்கல் படைத்துப் புதுமகிழ்ச்சி வெள்ளத்தில்

எங்கும் தமிழர் இனிதிருக்கத்-தங்கத்தாய்ச்

செந்தமிழே கன்னித் திருவேஉன் சீர்பரப்பிச்

சிந்தை மகிழ்வோம் சிரித்து!

 

-பாவலர் நாரா. நாச்சியப்பன்