bharathidasan06

 

தனிச்சொல் தமிழ்ச் சொல்லைச் சேர்த்தொன்றாய்ப் பாடி

கனிச்சுவை ஈந்த தலைவா – கனி சுவைத்த

நற்றமிழர் நெஞ்சினில் நீங்காது நீவாழ்ந்து

இற்றரையில் வாழ்க இனிது.

 

தட்டி எழுப்பி தமிழுர்வு ஊட்டி வந்(து)

எட்டி நீ சென்றாய் கவித்தலைவா! –  விட்டின்று

சென்றாலும் உன் கவிதைப் பார்க்கும் தமிழ் நெஞ்சில்

என்றென்றும் வாழ்க இனிது.

 

மொழி வாழ்ந்தால் வாழ்வுண்டு நற்றமிழர்க்கும்; பாரில்

மொழியழிந்தால் வாழ்வில்லை காண்பீர் –  விழிபோன்று

காப்பீர் எனவுரைத்த பாவேந்தர்! நின்வழியை

காப்பவர் நெஞ்சில் புகு.

 

வண்டமிழர் கொண்ட மடமையை நீ போக்க

கொண்டிட்ட இன்னல் பலவுண்டு; – வண்டமிழர்

ஏற்கும் முறையறிந்து ஈந்திட்ட பாவேந்தர்

போற்றுகின்ற நெஞ்சில் புகு.

குறள்நெறி: சித்திரை 19. தி.பி.1995 / மே 1, கி.பி.1964