bharathidasan071.வெண்முகிலே! வேகங்குறைமின், நில்மின் நில்மின்

வேதனையால் கூறுகின்றேன் கேன்மின் கேன்மின்

ஒண்கவிதை தந்திட்ட எந்தண் மூத்தோன்

ஒளிர்கின்ற உன்னுலகில் உலவி வந்தான்

மண்ணுலகில் அதனினைவாய் அலைக்கப்பட்டு

மன்றாடும் என்செயலை அவர்க்குச் சொல்வி

விண்ணுலகை விட்டுவிட்டு இங்கே வந்து

விழிப்புள்ள என்னில்லில் வாழச் சொல்லேன்.

2. மொழியென்றால் வேம்பென்று வாழ்ந்து சாகும்

விழிகெட்ட வீணர்க்கு அறிவை யூட்ட

மொழிக்கென்று வாழ்ந்து இறந்த மூத்தோர் தம்மை

வழிகேட்க மாண்டாயோ? அன்றி யிந்த

மொழிக்காக செய்ததெல்லாம் வீணே என்று

மொழிப்பற்றை விட்டுவிட்டு விழியை மூடி

மொழியாது ஓய்வெடுக்க விரைந்த னையோ?

எனமுகிலே அன்னவரை கேள்மின் கேள்மின்

3. பரமன்தான் நம்மொழியைப் படைத்தான் என்று

பகன்றமொழி மெய்யோவென அறிந்துகொள்ள

பரலோகஞ் சென்றவரைப் பேட்டி காண

பறந்தாயோ? பாவேந்த! அன்றி யிந்த

பரமன்மொழி பொன்னான பரத நாட்டின்

படும்பாட்டை அவர்க்குரைக்க ஏகினாயோ?

பரவெளியில் பறக்கின்ற தென்ற சேயே

பார்த்தவுடன் அன்னவரைக் கேள்மின் செல்மின்.

 

குறள்நெறி: சித்திரை 19. தி.பி.1995 / மே 1, கி.பி.1964