தலைப்பு-பிறக்காததமிழ்க்குழந்தைக்கு-க.சச்சிதானந்தன் :thalaippu_pirakkatha_thamizhkuzhanthai_sachithananthan

பிறக்காத தமிழ்க் குழந்தைக்கு

 

அளவிலாத காலமென்னும்
அலையின் மீது அலைகளாய்
அழிவிலாது தோன்ற நிற்கும்
அமரனான பாலனே

உரிமை கேட்டு உடைமை கோரி
உலகமெங்கும் போற்றவே
தருமமென்ற நெறியின் போரில்
தமது மண்டை யுடையவே

ஒழுகி வந்த இரத்த ஆற்றில்
உதய மாகிக் கன்னியர்
பழகு பாடற் கருவிலாகும்
பாலனே என் செல்வமே

கட்டு மீறி உரிமை நாதக்
கனல் பிறக்கும் குரலிலும்
சொட்டு கின்ற வியர்வை மீதும்
தோன்று கின்ற பாலனே

மனது தோறும் எழுதி வைத்த
மான மென்னும் முத்திரை
எனது சொந்தக் கடித சேவை
என்று மாறி நின்றதும்

முடிவிலாத வரிசை யாக
முழுதும் நின்று வீற்றதும்
மடிவிலாத உனது சொந்த
மானங் காக்க வல்லவோ

அவசரத்துச் சட்ட நாளில்
அடியும் மிதியும் பட்டதும்
தவமிருந்த தாயர் தந்தை
தலையுடைந்து போனதும்

மனவுரத்தில் உயிர்கொடுத்து
மண்ணின் மீது சாய்ந்ததும்
எனது பிள்ளை அடிமை நீங்கும்
என்ற நினைவில் அல்லவோ

(1961இல் தமிழர் நடத்திய அறப்போராட்டம் முறியடிக்கப்பட்டபோது).

மதுரைப் பண்டிதர் க.சச்சிதானந்தன்

ஈழம்

ஆனந்தத் தேன்