பொங்கல் புத்தாண்டு வாழ்த்து

பூத்தது புத்தாண்டு

பொங்கல் திருநாளில்

போயிற்று ஓராண்டு                                        

பொன்னான வாழ்நாளில்

சென்ற ஓராண்டில்

செய்தோமா நற்பணிகள்

என்றே சிந்திப்போம்

ஏற்போம் தவறுகளை

இன்றிந்த புத்தாண்டில்

ஏற்றமுடன் நற்பணிகள்

சாதிக்கச் சிந்திப்போம்

சாதனைகள் செய்திடுவோம்

பொங்கல் திருநாளில்

அகமெனும் பானையில்

அன்பெனும் நீரூற்றி

அறிவெனும் அரிசியிட்டு

பாசமெனும் பாலூற்றி

நேசக் கரங்களினால்

நேர்மை நெருப்பேற்றி

தீந்தமிழ்த் தேனூற்றி

தித்திக்கும் பொங்கலிட்டு

ஒற்றுமை உணர்வுபொங்க

உற்ற உறவினராய்

நற்றமிழ்ப் பற்றோடு

பொங்கலோ பொங்கலெனப்

பொங்கலிட்டு வாழியவே!

முனைவர் பொறி.மு.பொன்னவைக்கோ