(தமிழ்த்தாய் வணக்கம் 11-15 தொடர்ச்சி)

 

தமிழ்த்தாய் வணக்கம் 16-20

பூங்காவில் வாழ்வோன் பொந்தனைய இல்லத்தே

பாங்காய்ச் சுழல்விசிறி பாய்ச்சுவளிக்-கேங்குதல்போல்

உள்ள தமிழ்நூல் உயர்வறியார்; வேற்றுமொழி

யுள்ளித் திரிவார் உழன்று! (16)

 

எண்ணி முயறால் இயலாத வொன்றில்லை

வண்ணத் தமிழில் வடித்தெடுக்க – மண்ணில்

அறிவுத் துறைச்சொல் அகராதி யாக்கம்

உறல்கடிதோ அன்னய் உரை.  (17)

 

பெற்றதாய்க் காக.அறம் பேசும் வலிவற்றோர்

முற்றும் அறிவில்லா மூடரெனக்-குற்றம்

உரைப்பேனைச் சூழ்ந்தெதிர்க்க ஓரா யிரம்பேர்

திரண்டாலும் அஞ்சேன் சிறிது. (18)

 

எங்கும் தமிழாய் எதிலும் தமிழேயாய்

மங்கா திலங்கி மதிப்புயரச் – சிங்கத்

தமிழன் என வாழும் சீரான வாழ்வுக்

கமிழ்தென்  றொருபெயருண் டாம் ! (19)

 

பெற்றெடுத்த பிள்ளையுடன் பேசிக் களிப்பதற்கு

மற்ற மொழிதேடி மாய்வாரே ! – உற்ற

வளங்கொழிக்கும் அன்னை வழிமொழியை நாடா

திளங்குருத்திற் சூடேற்றி யாங்கு !  (20)

(தொடரும்)

பாவலர் நாரா. நாச்சியப்பன்