மத்தியப் பல்கலைக்கழகங்களையும்

மாநில அரசின் அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். 

ச.நே.ப. மாணவர் முத்துக்கிருட்டிணன் மரணத்திற்கு

உரிய நீதி உசாவல் வேண்டும். 

– சீமான் வலியுறுத்தல்

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  ‘தற்போதைய வரலாறு’ பாடத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த சேலம் மாணவர் முத்துக்கிருட்டிணன் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆழ்ந்த மனவேதனையினையும் தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து, அவர்களது குடும்பத் துயரத்தில் நாம் தமிழர் கட்சி முழுமையாகப் பங்கேற்கிறது.

  ஒடுக்கப்பட்ட சமூகத்தில், மிகவும் பின்தங்கிய குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்த முத்துக்கிருட்டிணன், தனது தன்னம்பிக்கையினாலும், மன உறுதியாலும் மொத்த இந்தியாவிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களினுடனான போட்டியில் தேர்வாகித் தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவராகச் சேருமளவுக்குக் கல்வியிலே தழைத்தோங்கியிருக்கிறார். அத்தகைய பேராண்மையோடு திகழ்ந்த மாணவர் முத்துக்கிருட்டிணன் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுவது நம்பும்படியாக இல்லை. மாணவரின் தந்தையும் தன் மகன் தற்கொலை செய்துகொள்கிற அளவுக்குக் கோழை இல்லை என்றும், அவரது மரணத்தில் மருமம் இருப்பதாகவும் தெரிவித்திருப்பது இதன் தொடர்பில் நமக்குள்ள ஐயப்பாட்டினைச் சரியென மெய்ப்பிக்கிறது.

  மேலும், மரணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பாக முத்துக்கிருட்டிணன் தனது முகநூல் பக்கத்தில், ‘குமுகத்தின் விளிம்புநிலையிலிருந்து வருபவர்களுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது. சமத்துவம் பேணப்படுவதில்லை.’ என்று தெரிவித்திருப்பதும்,  ஐதராபாத்தில் பட்டப்படிப்புப் பயின்றபோது உரோகித்து வெமுலாவை முத்துக்கிருட்டிணன் அறிந்திருந்தார் என்பதும், உரோகித்தின் மரணத்திற்கு நீதி உசாவல் வேண்டிப் போராடினார் என்பதும் இம்மரணத்தில் கவனிக்கத்தக்கதாகும். ஏற்கெனவே,  தில்லி   அ.இம.க.ப.(AIMS)  கல்லூரி மருத்துவ மாணவர் திருப்பூர் சரவணன் மரணமடைந்தபோதும் இதேபோல முதலில் தற்கொலை என்றுதான் தில்லிக் காவல்துறையினர் பதிவுசெய்தார்கள். பின்புதான்  பிண ஆய்வு மூலம் அது திட்டமிட்ட படுகொலையாக இருக்கலாம் என்ற  ஐயங்கள் எழுப்படுகின்றன. அந்தப் படுகொலைக்கான காரணக்கருத்தாக்களே இன்னும் கண்டறிந்து கைதுசெய்யப்படாத நிலையில், தற்போது நிகழ்ந்திருக்கும் முத்துக்கிருட்டிணனின் மரணமானது  தில்லியில் கல்வி கற்கும் தமிழக மாணவர்கள் குறித்து அச்சத்தை விளைவிக்கிறது. ஏற்கெனவே, இந்திய அளவில் கையெறிப் பந்து போட்டியில் பங்கேற்க  தில்லிக்குச் சென்ற தமிழக வீரர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலும் தமிழர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடே இந்தியப் பெருநாடு அணுகுவதை அறுதியிட்டுக் கூறுகிறது. இதுபோன்ற தொடர் இக்கட்டுகளுக்கு ஆளாகும் தமிழ் மாணவர்களுக்கு எவ்வித அடிப்படைப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தாத தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் நிலையோ பரிதாபம்.

  அடிமை இந்தியாவில் தீண்டாமைக் கொடுமைகளுக்கிடையேயும், சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கிடையேயும் படித்துப் பட்டம் பெற்று மாமேதையாக அண்ணல் அம்பேத்கரால் திகழ முடிந்தது. ஆனால், இன்றைக்கு விடுதலை இந்தியாவில் உரோகித்து வெமுலாவும், முத்துக்கிருட்டிணனும் பட்டப்படிப்புக்குச் சென்றால் உயிரையே இழக்கிறார்கள் எனும்  தீப்பேறு நிலையானது ஒட்டுமொத்த இந்திய மக்களும் வெட்கித் தலைகுனியக்கூடியதாகும். வேற்றுமையில் ஒற்றுமை, இந்திய இறையாண்மை என வாய்கிழியப் பாடமெடுக்கும் இந்தியாவில், நாட்டின் கடைக்கோடியில் இருந்து தலைநகருக்குக் கல்விகற்கச் செல்லும் மாணவன் உயிரை இழப்பது இந்தியர்களின் தேசிய அவமானமாகும். அதை மறந்து புதிய இந்தியாவை உயிர்ப்பிக்க(பிரசவிக்க)ப் போவதாக மார்தட்டும்  தலைமையர் நரேந்திரர்(மோடி) வெட்கி தலைகுனிய வேண்டும்.  அவருடைய அந்த இந்தியாவையாவது சாதிய, தீண்டாமைக் கொடுமைகளற்ற, ஏற்றத்தாழ்வுகளற்ற நாடாகப் படைப்பாரா? என்பதுதான் இன்றைய கேள்வி. இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற பேரரறிஞராக இருக்கிற அண்ணல் அம்பேத்கர் அவர்கள், ‘பல்லாயிரம் சாதிகளாகப் பிளவுபட்டு நிற்கிற இந்தியக் குடிமக்களுக்குத் தாங்கள் ஒரே நாட்டைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் வருவதே கடினமானது’ என்று உரைப்பதன்மூலத்தை நாம் உணர முடியும்.

  மாணவர் முத்துக்கிருட்டிணன் மருமமான முறையில் உயிரிழந்திருப்பது  தில்லிக்குக் கல்வி பயிலச்செல்லும் மாணவர்கள் மத்தியிலும், அவர்களது பெற்றோர்கள் மத்தியிலும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன என்றால் மிகையாகாது. இனி  ஓர் உயிர் இழப்பும் நேரிடாது, தென் மாநிலங்களில் இருந்து வடமாநிலத்திலுள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்கவரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டியது, மத்திய மாநில அரசுகளின் தலையாய கடமை என்று உணரவேண்டும். எனவே, கொலை வழக்கு என  உறுதி செய்யப்பட்டிருக்கிற திருப்பூர் சரவணனின் மரணம் குறித்தும், சேலம் முத்துக்கிருட்டிணனின் மரும மரணம் குறித்தும் உரிய நீதி உசாவலுக்கு மத்திய, மாநில அரசுகள் அடிகோல வேண்டும். இத்தோடு, மத்திய பல்கலைக்கழகங்கள் எனத் தான்தோன்றித்தனமாகச் செயல்படும் இந்நாட்டிலுள்ள அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களையும் மாநில அரசின் அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். மேலும், 27  விழுக்காட்டு இட ஒதுக்கீட்டைக் கடைபிடிக்காத மத்தியப் பல்கலைக் கழகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோன்ற மாணவர்களின் தொடர் மரணங்கள் இல்லா நிலையை உருவாக்குவது அங்குள்ள பேராசிரியர்களின் கடமை. அவர்களின் முனைப்பாலும் முயற்சியாலும் மட்டுமே இந்த இக்கட்டான அவநிலையை மாற்றமுடியும் என்று முழுமையாக நம்புகிறேன். மத்தியப் பல்கலைக்கழகங்களில்  குமுகநீதியின் அடிப்படையிலே பிற்படுத்தப்பட்ட மிகவும்பிற்படுத்தப்பட்ட,  தாழ்த்தப்பட்ட பேராசிரியர்களின் காலியிடங்களை உடனடியாக நிரப்பித் தகுந்த திறமையுடையவர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.