tn-assembly02

  தமிழகச் சட்டப்பேரவை 30.01.14 அன்று நண்பகல் 12.00 மணிக்குக் கூடியது. சட்டமன்றத்தைத் தொடக்கி வைத்து  அரசின் குரலை  ஒலிக்கும் ஆளுநர்  உரை மூலம் மத்திய காங்.அரசின் புறக்கணிப்பு உணர்வுகள் அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளாகக் குவிக்கப்பட்டன.

  “இலங்கையில் இனவெறிப்  போருக்குப்பின்னர், இலங்கைத் தமிழர்கள் அவர்கள் பிறந்த மண்ணிலேயே மனிதநேயமற்ற முறையில் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்.  இதுவும், இலங்கை இனவெறிப்போரின் இனப்படுகொலைகளுக்கு இலங்கை அரசைப் பொறுப்பேற்கச் செய்யத் தவறியதும், இம் மாநிலத்தில் உணர்ச்சிகரமான சிக்கல்களாக உள்ளன. தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனிதநேயமற்ற கொடுமைகளுக்கு இலங்கை அரசைப் பொறுப்பேற்கச் செய்யவும் இலங்கைத் தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையையும்  அடிப்படை உரிமைகளைகளையும் பெற்றுத் தரவும் நான்குமுறை        இம்மாமன்றம் தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது.

   இச்சிக்கல் குறித்து வலியுறுத்தித் தலைமையாளருக்கு முதல்வர் பலமுறை மடல் அனுப்பிஉள்ளார். தமிழ் மக்களின் கொந்தளிப்பான உணர்வு நிலையை மத்திய அரசிற்குத் தெரியப்படுத்திய பின்னரும் மத்திய வெளியுறவுத்துறை யமைச்சர், இலங்கையில் நடைபெற்ற பொதுவள ஆய மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.”

எனக் குறிப்பிட்டுத் தமிழர் நலனுக்கு எதிரான மத்திய காங்.அரசிற்கு எதிராகக் கணை தொடுத்துள்ளது தமிழக அரசு. காவிரி நடுவர் மன்ற ஆணைகளைச் செயல்படுது்தவில்லை என்றும் தவறான பொருளியல் கொள்கையால் தமிழக வளர்ச்சி பாதிப்புறுவது குறித்தும் கண்டனக் கணைகள் தொடுக்கப்பட்டன.