refugees01

பன்னாட்டு ஏதிலியர் நாள் 

  வீடு இல்லை… நாடு இல்லை…விதிவிட்ட வழியா? இன்றைய நாட்களில் உலகில் 7.6 பேராயிரம்(மில்லியன்) மக்கள் ஏதிலிகளாகப் பதிவாகியிருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டிருப்பதுதான் இந்த உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாகும். இருப்பிடமற்று உலகமெங்கும் ஏதிலிகளாக ஈழத்துமக்களும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அண்மையில் ஐ.நா வெளியிட்ட சில தகவல்கள் உலகின் கையறு அரசியல் நிலையைக் காட்டுகின்றது.

  7.6 பேராயிரம் மக்கள் ஏதிலிகளாகப் பதிவாகி இருப்பதாகக் குறிப்பிடுவதுடன், 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகுதியானஅளவு   ஏதிலிகள் எண்ணிக்கை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. ஐ.நாவின் ஏதிலியருக்கான உயர்செயல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையே இந்தவிவரத்தைக் கூறுகின்றது. உலகின் ஏதிலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குச் சிரியா சிக்கல் முக்கியகாரணி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மொத்த ஏதிலிகள் எண்ணிக்கையில் 55%இனர் வெறும் 5 நாடுகளையே சார்புப்படுத்துகின்றனர். அது ஆப்கானித்தான், சோமாலியா, ஈராக்கு, சூடான், சிரியா ஆகியனவாகும். அடுத்தநிலையில் ஈழத்தைசேர்ந்த ஏதிலியர் இடம்பெறுகின்றனர்.

  அதேபோல் உலகின் 81%ஏதிலிகள் வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளிலேயே அடைக்கலம் பெற்றுள்ளனர். இது முந்தைய பத்தாண்டினை விடவும் 11% அதிகரிப்பாகும். ‘இது உண்மையில் பெருங்கண்டமான(அபாயகரமான) இலக்கத்தை எட்டியுள்ளது. இது ஒவ்வொரு தனிமனிதனும் முகம்கொடுக்கும் சிக்கலின் முதன்மை அளவுகோலைக் காட்டுகிறது. பன்னாட்டுச் சமூகம் மோதலைத் தவிர்த்து அவர்களுக்கு தீர்வை வழங்காததை வெளிக்காட்டுகிறது’ என ஐ.நா குறிப்பிடுகின்றது.   இதை ஏதிலியர் நிலையத்தின் தலைவர் அன்டோனியோகுட்டரசு குறிப்பிட்டுள்ளார். ஊலக ஏதிலிகள் எண்ணிக்கை 7.6 பேராயிரமாக உயர்ந்திருப்பதன் மூலம் ஒவ்வொரு 4.1 வினாடிக்கு ஒருவர் வீதம் ஏதிலியராக இடம்பெயர்கின்றனர். பன்னாட்டு அரசுகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தரும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே இந்தவிவரம் வெளியிடப்பட்டதாக ஐ.நா ஏதிலியர் நிலையம் கூறியது. கடந்த 32 ஆண்டுகளாக ஆப்கான் நாட்டவர்களே அதிகமாக ஏதிலிகளாக உள்ளனர். இவர்களில் 95%இனர் ஈரான் அல்லது பாகித்தானில் ஏதிலிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இதற்குஅடுத்து 2012 இல் சோமாலிய நாட்டவரே அதிகம் ஏதிலிகளாக உள்ளனர். தொடர்ந்து ஈராக்கு, சிரியா நாட்டவர்கள் உள்ளனர். எனினும் சிரியாவிலிருந்து கடந்த ஆறு மாதங்களில் அகதிகளாக இடம்பெயர்ந்த பேராயிரம் மக்கள் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  ஈழத்தைப் போலவே உலகின் பல நாடுகளில் போர்களின் காரணமாக மக்கள் ஏதிலிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். 1994- ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஏதிலியரானது இப்போதுதான் என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஆப்கானித்தான் ஏதிலிகள் அண்டை நாடுகளான பாகித்தான் மற்றும் ஈரானில் தஞ்சமடைந்துள்ளனர். இரண்டாவது இடத்தில் சோமாலியாவும், மூன்றாவதாக ஈராக்கும் உள்ளதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது. தமது இருப்பிடங்களைவிட்டுப் பலவந்தமாகத் தப்பிஓடச் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கியநாடுகள் ஏதிலியருக்கான அமைப்பு கூறியுள்ளது. (உ)ருவண்டா மற்றும் முன்னாள் யூகோசுலாவிய நெருக்கடி காலகட்டத்துக்குப் பிறகு இதுதான் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படும் காலமாகும்.

 கடந்தஆண்டில் 80 நூறாயிரம் பேர் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் போர் காரணமாகவே இடம்பெயர்ந்தனர். அனைத்து 4.5 கோடி ஏதிலிகளில் அரைவாசிப் பேர், ஆப்கானித்தான், சோமாலியா, இராக், சிரியாமற்றும் சுடான் ஆகியநாடுகளைச் சேர்ந்தவர்களாவர். நீண்டகால மோதல்களைத் தீர்க்க முடியாத அல்லது புதிய மோதல்கள் உருவாவதைத் தடுக்க முடியாத பன்னாட்டுச் சமூகத்தின் இயலாமையையே இந்த அதிகரிப்புக்கள் காண்பிப்பதாகவும் ஐநா கூறுகிறது. உலகில் பதிநூறாயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் ஈழத்தைச் சேர்ந்த ஏதிலிகள். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் 10 ஆயிரத்து 311 பேரும், கனடாவில் 12 ஆயிரத்து 959 பேரும், ஆத்திரேலியாவில் 597 பேரும் ஏதிலிகளாகத் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். கனடாவில் மாத்திரம் 4 நூறாயிரம் பேர் தங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டுடன் ஆத்திரேலியாவில் தஞ்சமடைந்த ஏதிலிகளின் எண்ணிக்கை நூறாயிரத்தைத் தாண்டுமென எதிர்பார்க்கப்படுகுpறது. இந்தியாவில் ஏதிலிகள் முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் 1இலட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்களைப்போல புலம் பெயர்ந்து

  வந்திருக்கும் பலரும் சொல்லொண்ணா வேதனையில் சிக்கித் தவிக்கிறார்கள். இலங்கைக்கு உள்ளேயே இடம் பெயர்ந்தவர்கள் 1,56,000 எனப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. யாழ்ப்பாணத்தில் மட்டும் 50 ஆயிரம் மக்கள் ஏதிலிகள் முகாமிலே முடக்கி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். சம்பூர் முகாமில் 6000 தமிழ் குடும்பங்கள் இருப்பதாக அரசாங்கமே சொல்கிறது. வடக்கு மற்றும் கிழக்கில் 2 இலட்சம் காணி நிலத்தை இராணுவம் பறித்து இருக்கிறது. வன்னிப் பகுதியில் மட்டும் 6,381 காணி நிலைத்தை இராணுவம் பறித்துவைத்து இருக்கிறது. ஈழத் தமிழர்களின் வாழ்க்கை நடுக்கடலில் தத்தளிக்கும் தோணியாகி விட்டது. உலகமெங்கும் வாழ நிலம் மறுக்கப்படும் மக்கள் இப்படித்தான் கள்ளத் தோணிகளில் தஞ்சம் தேடிச் செல்லுகின்றனர். வாழ்ந்த மண்ணை விட்டு மிகவும் கண்டம்(ஆபத்து) நிறைந்த கடலில் படகுகளை நம்பி மக்கள் புறப்பட்டு தஞ்சம் தேடுவது மனித வாழ்க்கையில் மிகவும் கொடியதொரு தருணம்.

  1983 இல் இலங்கையில் யுத்தம் வெடித்த பொழுது இலங்காராணி என்ற கப்பல் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டார்கள் கொழும்பில் வசித்த தமிழர்கள். ஈழப்போர் ஆரம்பித்த அன்று முதல் ஈழத்துமக்கள் கள்ளத் தோணிகளில் உலகக் கடல் எங்கும் அலைகின்றனர். ஈழத்து மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து சென்று உலகமெங்கும் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் உலகக்கடல் வழியே கள்ளத் தோணிகளில் சென்றிருக்கிறார்கள். தாங்கள் பிறந்து வளர்ந்த பூர்வீக மண்ணை விட்டு உயிரைப் பாதுகாக்கும் ஏக்கத்துடன் தொகை தொகையாக ஈழ மக்கள் ஏதிலிகளாகச் சென்றுள்ளனர். ஈழத்து ஏதிலிகளின் படகுகள் ஒதுங்காத நாடுகளில்லை. உலகக் கடலில் பலமுறை கவிழ்ந்து விட்டன ஈழத்து ஏதிலிகளின் கள்ளத் தோணிகள். போர்க்களத்திலிருந்து உயிரைப் பாதுகாக்க கடலில் ஓடிய குழந்தைகளும் சிறுவர்களும் பெண்களும் என்று பலர் கடலில் மாண்டு போயிருக்கிறார்கள்.

  ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து ஈழத்து மக்கள் ஏதிலிகளாக உலகக்கடல் எங்கும் இந்தத் துயரப் பயணத்தை மேற்கொள்ளுகிறார்கள்.

ஏதிலியர் தத்தம் தாய்நாட்டுக்  குடிமக்களாக உரிமையுடன் வாழும் நாள் விரைவில் வருவதாக!

[படங்களைச் சொடுக்கிப் பெரிதாகப்பார்க்கவும்.]

– ஈழம் இரஞ்சன்

eezhamranjan01