திருக்குறள் அறுசொல் உரை – 078. படைச் செருக்கு : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 077. படை மாட்சி தொடர்ச்சி)
02. பொருள் பால்
10. படை இயல்
அதிகாரம் 078. படைச் செருக்கு
படைவீரரின் வீரப்பண்பு, மான
உணர்வு, வெற்றிப் பெருமிதம்.
- என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர், பலர்,என்ஐ
முன்நின்று, கல்நின்ற வர்.
பகைவரே! என்தலைவன்முன் நில்லாதீர்,
நின்றார் நடுகல்லாய் நிற்கிறார்.
- கான முயல்எய்த அம்பினில், யானை
பிழைத்தவேல், ஏந்தல் இனிது.
முயல்குறி தப்பாத அம்பைவிட,
யானை தப்பியவேல் சிறப்பு.
- பேர்ஆண்மை என்ப தறுகண்;ஒன்(று) உற்றக்கால்,
ஊர்ஆண்மை மற்(று)அதன் செருக்கு.
பெருவீரத்தினும், பகைவரின் வீழ்ச்சியில்
உதவி, உச்ச வீரம்.
- கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்,
மெய்வேல் பறியா நகும்.
யானைமேல் வீசி, வேல்இழந்தான்,
மார்புபாய்ந்த வேல்பறித்துச் சிரிப்பான்.
- விழித்தகண், வேல்கொண்(டு) எறிய அழித்(து)இமைப்பின்,
ஒட்(டு)அன்றோ வன்க ணவர்க்கு?
பாய்ந்துவரும் கூர்வேல்முன் கண்களை
இமைத்தாலும், வீரனுக்குப் பழிதான்.
- விழுப்புண் படாதநாள் எல்லாம், வழுக்கினுள்
வைகும், தன் நாளை எடுத்து.
வீரப்புண்கள் படாத நாள்கள்
போர்வீரனுக்கு வீணான நாள்கள்.
- சுழலும் இசைவேண்டி, வேண்டா உயிரார்
கழல்யாப்புக், காரிகை நீர்த்து.
வீரப்புகழ் வேண்டி, உயிரையும்
வேண்டார்தம் வீரக்கழல் பேரழகு.
- உறின்உயிர் அஞ்சா மறவர், இறைவன்
செறினும்,சீர் குன்றல் இலர்.
போர்வரின் உயிர்அஞ்சா வீரர்,
தலைவன் சீறினும், வீரம்குறையார்.
- இழைத்த(து) இகவாமைச் சாவாரை, யாரே
பிழைத்த(து) ஒறுக்கிற் பவர்?
சூளுரை நிறைவேறும்முன், வீரமரணம்
அடைந்தாரைப் பழிப்பார் யார்?
- புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின், சாக்கா(டு),
இரந்துகோள் தக்க(து) உடைத்து.
காத்தவர் கண்ணீர்விட, வரும்வீரச்
சாவையும், விரும்பி ஏற்றுக்கொள்.
பேராசிரியர் வெ. அரங்கராசன்
Leave a Reply