தமிழர் திருநாளே பொங்கல் திருநாள்!

பொங்கல் கொண்டாட்டம் குறித்த தொன்மையான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் பொங்கல் தொடர்பான குறிப்புகளைக் காணலாம். தைப் பொங்கலன்று ஆற்றில் குளித்து மகிழ்வதைத் தைந்நீராடல் என்பர். கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பெற்ற பரிபாடல் இலக்கியத்தில் நன்னாகனார் இசையில் ஆசிரியன் நல்லந்துவனார் எழுதிய பாடலில் தைந்நீராடல் குறிக்கப் பெறுகிறது.

தாய் அருகா நின்று தவ தைந்  நீராடுதல் – பரிபாடல் 11/91

நீ தக்காய் தைந் நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரிபாடல் 11/115

இன்ன பண்பின் நின் தைந் நீராடல் – பரிபாடல் 11/134

தைந்நீராடுவதை உவமை போல் கபிலர், கலித்தொகையில்(59)

தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?

எனக் கேட்கிறார்.

ஆண்டின் இறுதி நாளான மார்கழித் திங்கள் இறுதி நாளன்று – பொங்கலுக்கு முதல் நாள் – கொண்டாடுவது போகி. புதியனவற்றை வரவேற்பதற்காகப் பழையனவற்றைப் போக்கும் நாள் ‘போக்கி.  ‘போக்கி’ என்பதே சுருங்கிப் போகியாயிற்று. பழைய பொருள்களை மட்டுமல், பழைய கசப்பான எண்ணங்களையும் பகை உணர்வுகளையும் எறிவதற்கான நாள் இது.

தை முதல் நாள் கொண்டாடுவதே தைப்பொங்கல். இதனை மணப்பொங்கல் என்பர். மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபடுவதைக் காண்கிறோம். இவ்வாறான பல்வேறு நாள் பொங்கலுடன் வேறுபடுத்திச் சிறப்பிக்க இவ்வாறு கூறுகின்றனர். நாட்டின் சில பகுதிகளில் முப்போகமும் சில பகுதிகளில் இருபோகமும் இருக்கும். ஆனால், எல்லாப்பகுதிகளிலும் ஒரு போகம் இருக்கும். அதன் அறுவடைதான் தையில் நடைபெறுகிறது. எனவேதான் தைத்திங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இடையில் ஏற்பட்ட பொருள் பற்றாக்குறை தொடர்பான இன்னல்கள் நீங்கி மகிழ்வு தொடங்கும் காலம் என்பதால் மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றனர். எனவேதான் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்கின்றனர். இதற்குச் சமயப் பரப்புரையாளர்கள் – அறுவடைக்குப்பின்னர் வயலில் நடக்க வழி பிறக்கும் எனத் – தரும் விளக்கம் சரியில்லை.

 மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் காண்பொங்கல் அல்லது காணும் பொங்கல். ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் உசாவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வர். பணியாளர்கள் தங்கள் முதலாளிகளைச் சந்தித்துப் பரிசுகள் பெறுவர். சிலர் இதனைத் தவறாகக் கன்றுப்  பொங்கல் என்கின்றனர். மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவதால் தனியாகக் கன்றுப் பொங்கல் எனக் கொண்டாடும் தேவை இல்லை அல்லவா?

 மாட்டுப்பொங்கல் மறுநாளன்று – காணும் பொங்கல் நாளில் – கன்னிப்பொங்கல் / கன்னிமார்பொங்கல் / கனுப் பொங்கல் / பூப்பொங்கல் என என வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுவர். இதனைத் தை முதல் நாளன்று பொங்கலின் பொழுதும் சில பகுதிகளில் கொண்டாடுவர் அல்லது மறுநாளோ தைத்திங்களில் பிறிதொருநாள் விளையாடியோ கொண்டாடுவர். சிறுமியர் குப்பி எரு எனப்படும் எருவைக்கொண்டு பொங்கல் சமைத்து விளையாடுவதால் இதனைக் குப்பிப் பொங்கல் / கொப்பிப்பொங்கல் / குப்பிராட்டிப்பொங்கல் என்றும் கூறுவர். மணல் வீடுகட்டி அல்லது பொம்மை வீட்டில் சிறுமியர் பொங்கல் வைப்பதால் சிறுவீட்டுப்பொங்கல்  எனவும் சொல்வர்.

 சலவையாளர்கள் துணி துவைக்கும் துறைகளில் நடத்தும் பொங்கலைத் துறைப்பொங்கல் என்கின்றனர். திருமணமான நான்காம் நாள் தாய்மாமன் செலவில் மணமகளுக்கு மட்டும் ஊர்வலம் நடத்திப் பொங்கல் இடுவதைத் தோழிப் பொங்கல் என்கின்றனர்.

மாட்டுச்சந்தையில் இடும் பொங்கலைப் பட்டிப்பொங்கல் என்கின்றனர். பொங்கலன்று மிகுதியாகப் பொங்கினால் மங்கல அறிகுறியாக எண்ணி நிறைப்பொங்கல் என்பர். சிற்றூர்த் தேவதைக்கு ஊரார் இடும் பொங்கல் பெரும்பொங்கல் எனப்படும்.

பொங்கலன்று பெற்றோர் பெண்ணுக்குத் தரும் பரிசும் பெரியோர்க்குச் செலுத்தும் காணிக்கையும் பொங்கல் வரிசை எனப்படுகிறது.

 சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கல் ஏதும் மதச் சார்புடையதா?

 இசுலாம் மதம் தோன்றும் முன்னரே, அதற்கு முன்பிருந்த கிறித்துவ மதம் தோன்றும் முன்னரே கொண்டாடப்படுவது பொங்கல் விழா. எனவே, இந்த மதங்களைச் சார்ந்தது அல்ல அது.

அப்படியானால் இந்து மதவிழா என்று சொல்லலாமா?

இறை நெறியும் மத நெறியும் ஒன்றல்ல. எனவேதான், இறையன்பர் அருட்திரு இராமலிங்க வள்ளலார்,

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்

என்றார்.

தமிழர்களின் இறைநெறி என்பது இயற்கை சார்ந்தது.

 இந்து மதம் என்ற ஒன்று உருவாகும் முன்னர் இருந்தே சிறந்திருக்கும் இயற்கை சார்ந்த பொங்கல் விழாவை எங்ஙனம் இந்துமதப்பண்டிகை எனக் கூற இயலும்?

பரந்து இருக்கும் கடலோரம் வாழும் மக்கள் பரதவர் எனப்பட்டனர். பெரும்பகுதி கடலால் சூழ்ந்த நம் நாடு பரதக் கண்டம் எனப்பட்டது.  ஆங்கிலேயர் வந்த பின் வந்த பெயரே இந்தியா என்பது. அதுபோல் நம் நாட்டில் இருந்த சமயங்களைச் சேர்த்து இந்து மதம் என்றனர். அவ்வாறு சொல்லும் பொழுது பெரும்பகுதி ஆரியக் கருத்துகளும் ஆரியக் கதைகளும் திணிக்கப்பட்டன. அவ்வாறு திணிக்கப்பட்ட ஆரியம் மக்களை நான்கு வகையாகப் பிரித்தது. அதில் உழுபவன் சூத்திரன் எனப்பட்டுக் கடை நிலையில் வைக்கப்பட்டான். அவன் உயர்வுகளும் சிறப்புகளும் மறுக்கப்பட்டன. இவற்றுக்குக் காரணமான ஆரிய வேதங்கள் பயிர்த்தொழிலையும் பயிர்த்தொழிலாளர்களையும் இழிவு படுத்துவன. ஆனால், தமிழர்களின் பொங்கல் விழா என்பது உழுதொழிலையும் உழவர்களையும் போற்றும் பெருநெறி விழா. அவ்வாறிருக்க இதனை இந்து மத விழா என்பது எப்படிச் சரியாகும்?

 “பிராமணர், சத்திரியர் உழவுத் தொழில் செய்யலாகாது… … பூமியையும் பூமியில் வாழும் சிற்றுயிர்களையும் கலப்பை, மண்வெட்டியால் கொல்ல நேர்கிறது” என்கிறது மநு (11.52) இதையேதான் வேளாண்மை முதலிய கடமைகளில் இம்சை முதலான குறைகள் காணப்படுகின்றன எனக் கீதையும் கூறுகிறது. வேள்வியில் உயிர்களைக் கொல்பவர்கள்தாம் இங்ஙனம் கூறுகிறார்கள்.

இவ்வாறு உழுதொழிலை இழிவாகவும் அத்  தொழிலைச் செய்பவனைச் சூத்திரன் எனக் கூறி இழிவானவனாகவும் ஆரிய நூல்கள் கூறுகின்றன. அத்தகைய இழிவானவன் பெயரில் அவர்கள் விழா எடுப்பார்களா? ஆனால், தமிழர்கள் உழவையும் உழவர்களையும் உயர்வாக மதித்தார்கள். எனவேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர், “உழந்தும் உழவே தலை”, “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என உழவே தலைமையான தொழில் என்றார். உழவர்களைத் தொழுதே மற்றவர்கள் செல்கின்றனர் என்றார்.

 இவ்வாறு உழவர்களை மதிக்கும் தமிழ் மக்கள் உழவர் திருநாள் என்று கொண்டாடுகின்றனர். உழவை மதிக்கும் தமிழின விழாவை உழவை மதிக்காத இந்து மத விழாவாக எங்ஙனம்  கூற முடியும்? மதத்தோற்றங்களுக்கு முன்பிருந்தே கொண்டாடப்படும் இன விழாவே பொங்கல் விழா என்பதை உணர வேண்டும்.

கடந்த நூற்றாண்டில், தேசியக் கட்சிகளில் இருந்த தமிழ் உணர்வாளர்களாலும் திராவிட உணர்வாளர்கள், தமிழ் உணர்வாளர்களாலும்  பொங்கல் விழா கொண்டாடுவது ஓர் எழுச்சியாக மாறியது. சமய வேறுபாடின்றி அனைத்துத் தரப்பாரும் பொங்கல் விழாவைக் கொண்டாடினர். தனித்தனிக் குடும்ப விழாவாக இலலாமல், மன்பதை விழாவாகத் தமிழ் அமைப்பினரும் பிற அமைப்பினரும் கொண்டாடத் தொடங்கினர். அதற்கு முன்பு சிற்றூர்களில் சல்லிக்கட்டு, காணும் பொங்கல் போன்றவற்றால் ஊர் விழாவாக இருந்த பொங்கல் விழா நகர விழாவாகவும் மாறியது.   எல்லாச் சமயத்தவராலும் தமிழின விழாவாகக் கொண்டாடப்பட்டுச் சிறப்பெய்திய பொங்கல் விழா மெல்ல மெல்ல இந்துக்கள் தவிர  பிற சமயத்தவரால் கடவுள் நம்பிக்கை அடிப்படையில் புறக்கணிக்கப்படலாயிற்று. இந்துக் கடவுளுக்குப் படைத்த பொங்கலைத் தாங்கள் உண்பதா என்றும் ஒரே இறை வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட நாம் பிற சமயக் கடவுளுக்குப் படைத்த பொங்கலை ஏற்பதா என்றும் எண்ணத் தொடங்கி விட்டனர்.

இலக்கிய அமைப்புகள் மூலம் தமிழ்த்தொண்டாற்றிவரும் பிற சமயத்தவர், சிறப்பாகப் பொங்கல் விழாவை உணர்வுடன்தான் கொண்டாடுகின்றனர். கட்சி அமைப்பினர் கொண்டாடும் பொதுவிழாவாகிய தமிழர் திருநாளிலும் சமய வேறுபாடின்றிக் கலந்து கொள்கின்றனர். ஆனால், குடும்பம் என்று வரும் பொழுது வேறு நிலை எடுக்கின்றனர். இந்துக் கோயில்களில் பொங்கலை முன்னிட்டு வழிபாடுகளும் சிறப்புப் பூசைகளும் நடை பெற்று வருகின்றன. இதனால் இந்து விழாவாக இப்பொழுது கருதப்படும் நிலை வந்து விட்டது.

 மணிமேகலையில் 10 மதவாதிகள் பற்றிய குறிப்பு வருகிறது. அதில் இந்து மதம் இல்லை. இந்து மதம் என்பதே பிற்காலத்திய  கூட்டாக்கம்தான். இந்து மதம் இல்லாக் காலத்திலிருந்தே தமிழர் விழாவாக இருந்து வரும் பொங்கல் விழாவை மத விழாவாகக் கருதுவது தவறு என்பதை அனைவரும் உணர வேண்டும். தாங்கள் தமிழர்கள் என்பதை மறவாது தமிழ் நாட்டவரும் உலகத் தமிழர்களும் தமிழர் திருநாளைக் கொண்டாட வேண்டும்.

எனவே, இந்து என்ற பெயர் சூட்டலுக்கு உள்ளானவர்களும் பிற சமயம் சார்ந்த தமிழ் நாட்டினரும் பொங்கல்  விழாவை இனவிழாவாகவும் பொது விழாவாகவும் பண்பாட்டு ஒற்றுமைக்கும் சமய நல்லிணத்திற்கும் ஏற்ற விழாவாகவும் கருதிச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி 17.01.2020