(தோழர் தியாகு எழுதுகிறார் 196 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) ! 3/4 + தொடர்ச்சி)

இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) ! 4/4

இதில் போராடும் சமூகப் பிரிவினர் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் அறிவாளிப் பிரிவினர், கல்வியாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் வழக்கறிஞர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், கலை பண்பாட்டுச் செயற்பாட்டாளர்கள், கிறித்தவ அருட்தந்தைகள் என எவரும் விட்டுவைக்கப்பட வில்லை.

கருத்தை வெளியிடுவதும் கூட்டம் கூடுவதும் அமைப்பாதலும் அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 19 வழங்கியுள்ள அடிப்படை உரிமை இதுவாகும். இதைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் சஎதச(ஊபா) சட்டம் அமைந்துள்ளது. மேலும் சஎதச(ஊபா) சட்டத்தில் உள்ள பிரிவுகள் 35, 36 ஆகியவை அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது ஆகும். உறுப்பு 19 மட்டுமின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என முன்வைக்கும் உறுப்பு 14,வாழ்வுரிமையையும் ஆள்வகை சுதந்திரத்தையும் உறுதிசெய்யும் உறுப்பு 21 ஆகியவற்றிற்கும் எதிரானதாகும்.

அரசவன்முறையின்(பாசிசத்தின்) வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)
2008இல் இச்சட்டம் காங்கிரசால் கொண்டுவரப்பட்டது. எல்லைகடந்த பயங்கரவாதம் என்கிற கருத்தாக்கத்தின் பின்னணியில் எல்லா நாடுகளைப் போல நாமும் ஒன்றை உருவாக்குகிறோம் என்று காங்கிரசு வாதாடியது

தேசப் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஆட்சிப்புல ஓர்மைக்கும் ஊறுசெய்யக் கூடிய குற்றங்களைப் புலனாய்வு செய்யவும் தண்டிக்கவும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.). நிறுவப்பட்டது. அஃதாவது, மாநில அரசின் ஆட்சிப்புலத்திற்குள் நடக்கும் குற்றங்களைப் புலனாய்வு செய்வதற்கு ஒன்றியக் ’காவல்துறை’க்கு மாற்றி விட வழிவகுக்கும் சட்டம் இது

சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் பட்டியலில் இருக்கிறது. காவல்துறை என்பதும் மாநில அரசின்கீழ் வருகிறது. ஒன்றிய அரசு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) என்றொரு புலனாய்வு நிறுவனத்தை ஏற்படுத்தியது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சட்டத்தில் பட்டியலிடப்பட்ட சட்டப் பிரிவுகளில் சஎதச(ஊபா) சட்டப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று 2021ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சி செய்யும் சத்தீசுகர் மாநிலம் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

2019இல் பாசக ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஆட்கடத்தல்கள் (human trafficking) பற்றிய குற்றச்சாட்டுகள், வெடிமருந்துப் பொருள் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் (offences under the Explosives Act), மேலும் சில ஆயுதச் சட்டங்கள் (Arms Act) முதலியன இப்போது இந்தத் திருத்தப்பட்ட தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சட்டத்தின் ஊடாக ஒன்றிய அரசின் அதிகாரத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் கீழ் இவை கொண்டு வரப்பட்டால்தான் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு எந்தத் தெளிவான காரணமும் சொல்லப்படவில்லை. இவற்றை விசாரிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரமும் நிறுவனங்களும் இருக்கும்போது அந்த மாநில உரிமைக்குள் மூக்கை நுழைத்து அவ்வழக்கை தே.பு.மு.(என்.ஐ.ஏ.) எடுத்துக் கொள்வதற்கு வழிசெய்யவே இந்தத் திருத்தம்.

தே.பு.மு.(என்.ஐ.ஏ.) தொடங்கப்பட்டு வெறும் 15 ஆண்டுகளே ஆகியிருக்கும் நிலையில் இதன் இந்துத்துவ அரசியல் சார்பு அம்பலப்பட்டு நிற்கிறது.

இந்துத்துவப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் புலனாய்வில் குற்றவாளிகளிடம் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்குமாறு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வால் தமக்கு அறிவுறுத்தப்பட்டதென அவ்வழக்கை நடத்திய அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் (உ)ரோகிணி சலைன் 2015 சூன் 25 அன்று தெரிவித்தார்.

சம்சுதா விரைவுவண்டி குண்டுவெடிப்பு வழக்கிலும் ஐதராபாத்து, மெக்கா மசுசித்து குண்டுவெடிப்பு வழக்கிலும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வின் புலனாய்வு நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது.

சஎதச(ஊபா) சட்டம் காலவரையறையின்றிச் சிறையில் வைக்க வழிவகுத்தது. தே.பு.மு.(என்.ஐ.ஏ.). ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் புலனாய்வைக் கொண்டு போய்விட்டது.

மாநில அதிகாரத்தைப் பறிப்பதும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதும் செயல்திறனும் நேர்மையும் இல்லாததும் ஆன தே.பு.மு.(என்.ஐ.ஏ.) நிறுவனம் கலைக்கப்பட வேண்டும், அந்த சட்டம் கிழித்தெறியப்பட வேண்டும்.

திமுக, 2008ஆம் ஆண்டு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சட்டம் இயற்றப்படும் போதும் ஆதரித்தது. அதில் 2019ஆம் ஆண்டு தே.பு.மு.(என்.ஐ.ஏ.)வை மேலும் அதிகாரப்படுத்தும் வகையில் மோடி அரசு கொண்டுவந்த திருத்தத்தையும் ஆதரித்தது. அதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதுகூட தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை, மாறாக இச்சட்டத்தை நியாயப்படுத்தி அறிக்கை கொடுத்தது.

வல்லரசியத்தின் [ஏகாதிபத்தியத்தின்] பயங்கரவாத எதிர்ப்புக் கோட்பாடு இந்தியாவில் பெற்றெடுத்த பிள்ளைதான் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! மாநிலத் தன்னாட்சி என்று வாயளந்து கொண்டே தே.பு.மு.(என்.ஐ.ஏ.)விடம் திமுக மண்டியிட்டது. காரணம், திமுகவின் வல்லரசியச் சார்பும் புதிய தாராளவாதப் பொருளியல் கொள்கையும் மாநிலத் தன்னாட்சி முணுமுணுப்புகளைப் பின்னுக்கு தள்ளிவிட்டது; அதிமுகவும் இவ்விசயத்தில் விதிவிலக்கல்ல, கடந்த 2019இல் மட்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு 270 வழக்குகளில் சஎதச(ஊபா)பிரிவுகளைப் பயன்படுத்தி 308 பேரை சிறைப்படுத்தியுள்ளது. அதில் பெரும்பாலோருக்கு அதே ஆண்டில் பிணை கிடைத்துள்ளது.

கடந்த அட்டோபரில் நடைபெற்ற கோவை எரிவாயு உருளை வெடிப்புக்காகப் போடப்பட்ட வழக்கை ’மிகவும் அம்பலப்பட்டுப்போன’ தே.பு.மு.(என்.ஐ.ஏ.)வுக்கு அவசர அவசரமாக மாற்றி வேட்டை நாய்க்கு வெற்றிலைப் பாக்கு வைக்கும் வேலையைத் திமுக அரசு செய்துள்ளது. இவ்வண்ணம், தே.பு.மு.(என்.ஐ.ஏ.) தன் விருப்பம் போல் தமிழ்நாட்டில் செயல்பட திமுக அரசு அனுமதித்துக் கொண்டிருக்கிறது. சென்னையில் புரசைவாக்கத்தில் அலுவலகம் வைத்துக் கொண்டு விசாரணை, கைது என்ற பெயரில் இசுலாமியர்களை அச்சுறுத்தும் வேலையை தே.பு.மு.(என்.ஐ.ஏ.) தொடர்ந்து வருகிறது.

செயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அலுவலகத்திற்குத் தமிழ்நாட்டில் இடம் கொடுக்கவில்லை. தே.பு.மு.(என்.ஐ.ஏ.)வை மாநிலஉரிமை மீதான அத்துமீறல் என்ற காரணத்தைச் சொல்லி அவர் எதிர்த்தார்.

திமுக அரசோ சஎதச(ஊபா), தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அடக்குமுறைச் சட்டங்களையும் அதில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களையும் ஆதரித்தது; தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அலுவலகம் தமிழ்நாட்டில் இயங்க அனுமதித்தது; தாமே முன்வந்து வழக்குகளை தே.பு.மு.(என்.ஐ.ஏ.)வுக்கு மாற்றியது; மக்கள் முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) தடையைக் கண்டிக்கவில்லை; மாறாக அத்தடையைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தியது; தடைக்கு முன்னும் பின்னும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) செய்து வரும் கைது நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளவில்லை; கடந்த மே 9 அன்று வழக்கறிஞர்கள் மீதே பொய் வழக்குப் போட்டு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) கைது செய்திருக்கும் நிலையில், அதைக் கண்டிக்கக் கூட மறுக்கிறது. இதன் மூலம், இசுலாமியர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு நிகழ்த்தி வரும் அரசவன்முறை(பாசிச) ஒடுக்குமுறைகளுக்குத் திமுக அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

அரசவன்முறையின்(பாசிசத்தின்) பயங்கர நிறுவனமாக தே.பு.மு.(என்.ஐ.ஏ.) பயன்படுகிறது. சஎதச(ஊபா) சட்டப் பிரிவுகளின் கீழ்ப் பொய் வழக்கு போடப்படுகிறது. எனவே, அரசவன்முறை(பாசிச) எதிர்ப்பில் அக்கறை கொண்டோர் சஎதச(ஊபா), தே.பு.மு.(என்.ஐ.ஏ.)வை எதிர்த்துப் போராடாமல் இருக்க முடியாது. நாம் எழுப்ப வேண்டிய உடனடி மற்றும் நீண்ட காலக் கோரிக்கைகள்:

அரசவன்முறைய(பாசிச) பாசக அரசே!

  • மக்கள் முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) வழக்கு, பீமா கோரேகான் வழக்கு. தில்லி கலவர வழக்கு , முதலான சஎதச(ஊபா) வழக்குகளிலும் உடனடியாகப் பிணை வழங்கு!
  • சஎதச(ஊபா) பிரிவுகளின் கீழ்ப் போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறு!
  • சஎதச(ஊபா) சட்டத்தைத் திரும்பப் பெறு! தே.பு.மு.(என்.ஐ.ஏ.). வைக் கலைத்திடு!

திமுக அரசே!

  • சஎதச(ஊபா), தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமெனக் கொள்கை முடிவெடுத்திடு! அம்முடிவைச் செயல்படுத்த உழைத்திடு!
  • தே.பு.மு.(என்.ஐ.ஏ.)வைத் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்று! தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அலுவலகத்தை இழுத்து மூடு!
  • அரசவன்முறைய(பாசிச) எதிர்ப்பு மக்கள் முன்னணி

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 223