வான்மிதந்து  சென்றடையும்  கதிரவனைத்
தான்தழுவி  ஒளிஉமிழும்   தண்நிலவில்
கண்நிறைந்த  காட்சிகாண  கடல்வெளியில்
மண்மீது  படுத்தேன்என்  கண்முன்னே

iyarkai falls05தொங்கிச்  சுழலும்இப்   பூமிப்பந்தில்
தங்கிவாழும்  மக்கள்குலம்   தழைக்க
பொங்கிவழியும்   அழகுடன்நம்  பூமித்தாய்
இங்கிருக்கும்  மக்களுக்கே  படைத்தாள்
குறிஞ்சிமுல்லை  குறையாத  மருதத்துடன்நாம்
அறிந்த  நெய்தல்பாலை  எனப் படைத்தாளே !

ஐவகைநிலத்தை   அழகுடன்    பார்த்தேன்
மூவகைத்   தமிழுடன்   முத்திரைபதித்து
பாவகையுடன்  பைந்தமிழ்ப்  புலவர்கள்
பாடக்கேட்டேன்  இயற்கை  எழில்பற்றி !

எங்கு   பார்க்கினும்   மக்களெல்லாம்
பொங்கும்  மகிழ்ச்சியால்  பூரித்ததையும் iyarkai natural tunnel ugrain002
வறுமையைப்  புறந்தள்ளி   வாழும்
வளமையும்  கண்டேன்  நாட்டில் !

இயற்கை    அன்னை  ஈந்தளித்த
எழில்  நலத்தை   எம்மக்கள்
செயற்கையால்  அழிக்காமல்   சிறப்போடு
செம்மைவாழ்வு  வாழும்நிலை  கண்டேன் !

” செந்தமிழ்  நாடெனும்   போதினிலே
இன்பத்தேன்   வந்துபாயுது   காதினிலே “
என்னை   அறியாமல்  எட்டயபுரத்து
எழிற்கவிஞன் பாடியதை  என்வாய்

பாடக்கேட்டு   மணலில்  படுத்தவன்
பதறிஎழுந்தேன்  பக்கமெல்லாம் பாழ்வெளி
கண்ட  இயற்கை  எழில்எல்லாம்
கனவுதான்  என்றே  கருதிக்கொண்டேன்!

அன்புடன்
  இளையவன் – செயா, மதுரை  
பெரியார்  ஆண்டு 135   தொ. ஆ. 2878  தி.ஆ.  2044
சிலை  ( மார்கழி )   24         08–01–2014