இல்லையென்ற கவலைகளை ஓட்ட வேண்டும்!

அரசென்றால்.. அது அப்படித் தான் இருக்க வேண்டும்!

அடுப்படி விறகும் கூட எல்லார்க்கும் பங்கு வேண்டும்!

உழைப்போர் பார்த்து உதவும் கரம் நீட்ட வேண்டும்!

உதவாதார் கைகள் கட்டி திருத்தும் வழி கூறல் வேண்டும்!

அகம்புறமும் ஒன்றாகப் பணியாற்றி நடக்க வேண்டும்!

அடிபட்டோர் வாழ உதவிக்கரம் நீட்டிடல் வேண்டும்!

தனக்கெனவே அலைவோரை தொலைவிலே நிறுத்த வேண்டும்!

தக்கவரைப் பார்த்துத் தேடி முன்கொணர்ந்து நிறுத்த வேண்டும்!

மண்மணமும் மாண்புகளும் தாளாது நடத்த வேண்டும்!

மக்களெண்ணம் மகிழ்வதற்கே கேடுகளைக் கொய்ய வேண்டும்!

உரிமையென வந்துவிட்டால்.. சொந்த பந்தம் மறக்க வேண்டும்!

ஊர் பார்த்து உளவு பார்த்து நிலமைகளை அறிய வேண்டும்!

இல்லார்க்கு இல்லையென்ற கவலைகளை ஓட்ட வேண்டும்!

இயலாதார் இயங்கி வாழத் தடைகளை நீக்க வேண்டும்!

போட்டியென்று வைத்து.. வைத்து வடிகட்டல் நிறுத்த வேண்டும்!

பொய் சொல்வார் தற் புகழ்ச்சிகளைத் தள்ள வேண்டும்!

வறுமை நிலை அற்றார்க்கு துணை செய்தல் விட வேண்டும்!

வாழ்க! யென்ற வாழ்த்துரையை கேளாது ஒதுங்க வேண்டும்!

படிப்பொன்றே உயர்வுயென்றே தாழ்வுரையை மறக்க வேண்டும்!

உழைப்பாளர் சிந்தனைகள் தொழிலாக உதவ வேண்டும்!

நோயென்று படுத்தவர்க்கு மருந்து தர முயல வேண்டும்!

முயற்சியென்ற செயல் படிக்க பள்ளிகளை நடத்த வேண்டும்!

தானும் கூட செய்த பின்னால் பதவி விட்டு விலகல் வேண்டும்!

சாப்பிட்டவர் கைக்கழுவி மீண்டும் உண்ணல் தவிர்க்க வேண்டும்!

மீண்டும் மீண்டும் என்ற சொல்லை யாவருமே மறக்க வேண்டும்!

மெய்ஞானம் பேசுவோரை நெஞ்சார மதிக்க வேண்டும்!

பாவலர் மு இராமச்சந்திரன்

 தலைவர், தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.