sparrows80(வைகாசி 3, 2015 / மே 17, 2015 தொடர்ச்சி)

காட்சி – 25

அங்கம்    :    ஆண் சிட்டு, பெண் சிட்டு
இடம்        :    மரக்கிளை
நிலைமை    :    (காட்சியைக் கண்டு சிட்டுகளோ! நகை

                    ஆட்சியைக் கண்டு வியக்கின்றது)

பெண்  :    பெண்களுக்கென்ன நகையின்மேல்
இத்தனை ஆசை உள்ளது சொல்?
ஆண்  :    கண்ணே! பெண்ணுக்கு நகைதானே!
என்ன அதில்தான் உள்ளதுவோ?
பெண்  :    மேலைநாட்டுப் பெண்களுக்கு
இத்தனை விருப்பம் இதில் உண்டோ?
ஆண்  :    வேலை செய்யவே பொழுதில்லை!
நினைக்கவும் நேரம் அங்கேது!
பெண்  :    நமது நாட்டுமகளிரைத்
தவறாய் எண்ணமாட்டாரோ?
ஆண்  :    உமது எண்ணம் உயர்வென்று
எண்ணிடும் அறிவும் இங்கில்லையே!
பெண்  :    இதெல்லாம் உனக்குத் தெரிகிறதே!
எவரும் இதனை உரைத்தாரா?
ஆண்  :    இதென்ன? இன்னும் கேட்டுவிடு?
எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்!
பெண்  :    நகைகளைப் பெண்கள் விரும்புவதால்
எவருக்கு என்ன பேரிழப்பு?
பெண்  :    வகையாய்க் கேட்டாய்! ஓர் கேள்வி!
நீயும் பேடே அதனாலே!

அசடே! கொஞ்சம் கேட்டு விடு!
அழகாய் உனக்குச் சொல்கின்றேன்!
கசடே அல்ல நகையின் மேல்
பெண்கள் விருப்பம் வைப்பதிலே!
ஆசைக்கு அளவு உண்டல்லவா!
அதுவோ வெறியாய் வரலாமா?
தேவைக்கு மேலே பூட்டுவதால்
தேடிடும் நலன்தான் அதிலென்ன?
இருப்போர் சிலரோ பூட்டுவதால்
இல்லார் பலரோ குமுறுகிறார்!
வரும்போர் குடும்பத்தில் பெரும்பாலும்
எனக்கென்ன மாட்டினாய் என்பதுவே!
எத்தனை குடும்பம் பிரிகிறது?

          எத்தனை சிக்கல் விளைகிறது?
இத்தனை தொல்லை எதனாலே?
எல்லாம் இந்த நகையாலே!
பெண்  :    இருப்போர் பூட்டி மகிழ்கின்றார்!
இல்லார் வருந்தல் ஏன் என்றேன்?
ஆண்  :    வருதல் ஆசை இயற்கையே
அறிவும் கொஞ்சம் குறைவன்றோ?
பேடே! கொஞ்சம் கேட்டுவிடு!
தங்கத்தைச் செங்கல் கட்டிகளாய்
நாட்டில் பலரோ! கொள்ளையிட்டு
மறைத்தே வைக்கிறார் கழிவறையில்
நாடே இதனால் அழிகிறது!
பொருளாதாரம் குலைகிறது!
பேடே! இப்போது புரிகிறதா?
பிறர்வழி கேட்டதே இதுவெல்லாம்!

(காட்சி முடிவு)
– பாடும்

aa.ve.mullainilavazhagan