மழையின் விளைவு: mazhai

புறப்படு புறப்படு பேய்மழையே!

வா வா மழையே என்றழைத்தோம்
வந்து கொட்டித் தீர்க்கின்றாய்
சாவா வாழ்வா நிலை எமக்கு
சற்றே பொறுக்க மாட்டாயா?

போய்வா என்றே சொல்கின்றோம்
புறப்படு புறப்படு பேய்மழையே!
தாய்பிள்ளை முதியவர் தவிக்கின்றார்
தாமதம் இனியும் ஏன் மழையே

ஊடகம் முழுதும் உன்னாட்சி
உயிருக்கு போராடும் நிலையாச்சு
நாடகம் ஏனோ பேய்மழையே
நலங்கெட பெய்தல் முறையாமோ?

எங்கே பேரிடர் என்றாலும்
எங்கள் மக்கள் உதவிடுவார்
இங்கே வெள்ளம் சூழ்கையிலே
எங்கே போவார் எம்மக்கள்?

இயற்கையே சீற்றம் குறைத்துவிடு
இனியும் வேண்டாம் விளையாட்டு
செயல்பட முடியல வழியைவிடு
சினத்தை குறைத்து வாழவிடு

நல்மனம் படைத்த நண்பரெலாம்
நன்றாய் உதவிகள் செய்கின்றார்
வல்லமை உண்டு மீண்டுவர
வருணா கருணை காட்டிவிடு

 மு.பாலசுப்பிரமணியன்

மு.பாலசுப்பிரமணியன் : puthuvai_bala.02