(பூங்கொடி 23 : காமங் கடந்தவள் – தொடர்ச்சி)

பூங்கொடி

கோமகன் கலக்கம்

     கோமகன் விழியிற் குலமகள் படுதலும்

காமங் கதுவிய கருத்தின னாகிப்

படிப்பகம் புகுதப் பார்த்தனன்; `அடஓ!

சித்தமும் விழியும் சேர்ந்து பதிந்திடப்

     புத்தகம் பயில்வோர் பொருந்திடன் அன்றோ!

புத்தகம் புரட்டும் புல்லென் ஓசையும்

உரவோர் உயிர்க்கும் ஓசையும் அன்றி

அரவம் சிறிதும் அறியா இடமாம்;

அறிவை வளர்க்கும் ஆய்வுரை நூல்பல    5

     நிறைதரும் அவ்வகம் தூய்மை நிலையம்;

கொள்கைச் சான்றோர் குழுமும் நூலகம்;

உள்ளிற் செல்லுதல் ஒவ்வா தன்றோ!

சீரியோர் பலரும் சீறுவர் இகழ்வர்

வேறிடங் கூடுவென்’ எனமனம் வெதும்பி   10

கோமகன் அல்லியை வினவல்

     அகல்வோன் அல்லி அணிமுகம் நோக்கி

`நகைமுக நங்காய்!என் நலிவினைக் காணுதி!

இளையள் என்னை ஏற்றருள் வாள்கொலோ?

உளையும் எனக்குயிர் உவந்தளிப் பாள்கொலோ?

எத்திறத் தாள்நின் இளங்கொடி? உரை’எனச் 15

     சித்தங் கலங்கிச் செப்புவள் அல்லி,   20

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி