– நீதிநாயகம் கே.சந்துரு

 இராசீவு கொலைவழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தைத் திருத்தியதாக மத்தியப் புலனாய்வுப் பணியகத்தின்(சி.பி.ஐ.) அப்போதைய கண்காணிப்பாளர் தியாகராசன் தெரிவித்துள்ளார். இது குறித்து நீதிநாயகம் கே.சந்துரு அதிர்ச்சியைத் தெரிவித்து மூவரையும் விடுதலை செய்யுமாறு பின்வருமாறு கருத்து தெரிவித்து வேண்டி உள்ளார்:

இராசீவு கொலை வழக்கு தொடக்கம் முதலே முறையாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்பட்டு வந்திருக்கிறது. அன்றிருந்த தடா (தீவிரவாத-சீர்குலைவுகள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின்படி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும்; பார்வையாளர்களுக்கு இசைவு கிடையாது. மாவட்டக் கண்காணிப்பாளர்  நிலையில் உள்ள ஒருவர் முன்னால் குற்றவாளி கொடுக்கும் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும்; தீர்ப்பின் மேல் உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும்.

chandru தடா சட்டத்தைத் திரும்பப்பெற இந்தியா முழுவதும் கோரிக்கை எழுப்பியதில் 2004 இல் அந்தச் சட்டம் நீக்கப்பட்டாலும், அந்தச் சட்டத்தின்கீழ் ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடரலாம் என்பதால், இன்னும் பலர் அந்தச் சட்டத்தின்கீழ் விசாரணையில் உள்ளனர் என்பது வேதனைக்குரிய செய்தி.

பேரறிவாளன்  முதலான 26 பேருக்கு மரணத் தண்டனை வழங்கிய சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட மேல்முறையீட்டை  உசாவிய நீதிபதி கே.டி.தாமசு அடங்கிய அமர்வு, 22 பேரின் மரணத் தண்டனையை நீக்கி செய்து நான்கு பேருக்கு அந்தத் தண்டனையை உறுதி செய்தது. அந்த வழக்கு தீவிரவாதக் குற்றத்தின் கீழ் வராது என்று தீர்ப்பளித்த பிறகும், வழக்கை இயல்பான குற்றவியல் நீதிமன்றத்தின் மறு உசாவலுக்கு அனுப்பவில்லை. ஆங்கில அடக்குமுறை ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்தியச் சான்றியல் சட்டத்தின்கீழ், காவல் துறையினரால் பெறப்படும் வாக்குமூலம் சான்றாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று கூறப்பட்டிருப்பது காவல்துறை மீது அவர்களே எத்தகைய நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதை உணர்த்தும். குற்றத்தை மெய்ப்பிக்கச் சித்திரவதைகள் மூலம் ஒப்புதல் வாக்குமூலங்கள் பெற வாய்ப்பு இருப்பதால், அந்த வாக்குமூலங்களுக்குச் சட்டத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடா சட்டத்திலோ மாவட்டப் பொறுப்பிலுள்ள காவல் அதிகாரிகளிடம் கொடுக்கப்படும் வாக்குமூலங்களைக் குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.

தடா சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட (கர்தார் சிங்-எதிர்- பஞ்சாப் மாநிலம், 1994) வழக்கில் இந்தச் சட்டப்பிரிவு செல்லும் என்று நான்கு நீதிபதிகள் கூறியபோதும் நீதிபதி கே. ராமசாமி அந்தப் பிரிவு செல்லாது என்று சிறுபான்மை தீர்ப்பு வழங்கினார். சாதாரணக் காவலர் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவது முறைகேடாகப் பயன்படுத்தப்படலாம் என்று சட்டம் இருப்பினும் மாவட்ட நிலையில் உள்ள காவல் பணியைச் சேர்ந்தவர்கள் (ஐ.பி.எஸ்.) தவறான செயலில் ஈடுபட மாட்டார்கள் என்று பெரும்பான்மையான நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

நீதிபதி கே.ராமசாமி மட்டும் தனது தனித் தீர்ப்பில் மாவட்டக் காவல் துறை நிலையில் உள்ள அதிகாரிகளும் தங்களது மாவட்டத்தில் உள்ள குற்ற வழக்குகளை விரைவாக முடிக்க ஒப்புதல் வாக்குமூலத்தை முறைகேடாகப் பெற்றுத் தண்டனையை வாங்கித்தரவே விழைவார்கள் என்பதால், இந்தச் சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படும் என்று அன்றே எதிர்நோக்குப்பார்வையுடன் குறிப்பிட்டிருந்தார்.

death-3thookku-santham

பேரறிவாளனிடமிருந்து பெற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைத் தானே திருத்தியதாக 22 ஆண்டுகளுக்குப் பின்  வழக்கு அதிகாரி கூறியிருப்பது இக்கூற்றையே  மெய்ப்பிக்கிறது. ‘தடா’  திருமபப் பெறப்பட்டாலும், பின்னால்  வன்முறைத் தடுப்புச்சட்டமும் (‘பொடா’) பின்னர், அதுவும் நீக்கப்பட்ட பிறகு,  சட்டஎதிர்  செயல் தடுப்புச்சட்டமும்(‘உபா’) சட்டமும் அதே போன்ற பிரிவுகளுடன்  உலா வருவது அனைவரையும் அச்சப்பட வைக்கிறது.

நால்வரது மரணத் தண்டனையையும்  நீக்கக் கோரிய கருணை  முறையீடுகளை அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி தள்ளுபடி செய்ததை எதிர்த்து பேரறிவாளனும் பிற மூன்று மரணத் தண்டனைக் கைதிகளும் கொடுத்த மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அவர்களது  முறையீட்டைச் சட்டப்படி ஆயுமாறு அன்றைய முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவைக்கு உத்தரவிட்டது. நளினிக்கு மட்டும் மரணத் தண்டனையை  நீக்கிவிட்டு, மற்றவர்களது முறையீட்டைத் தள்ளுபடி செய்ய அமைச்சரவை ஆளுநருக்குப் பரிந்துரைத்ததில் நளினியின் தலை மட்டும் தப்பியது. மற்ற மூவரின் கருணை  முறையீடுகள் குடியரசுத் தலைவரின்  ஆய்வில் 19 ஆண்டுகள் கழிந்த பிறகு தள்ளுபடி செய்யப்பட்டன. இதுபற்றி மத்திய அரசின் பரிந்துரையைத் தெரிந்துகொள்ள தகவல் அறியும் சட்டத்தின் கீழ் முயன்ற பேரறிவாளனின் முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. ‘குடியரசுத் தலைவர் கருணை முறையீடுகளைத் தீர்வு செய்வதில்  காலத்தாழ்ச்சி ஏற்பட்டால், மரணத் தண்டனைக் கைதிகளின் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்ற அதுவும் ஒரு காரணியாகக் கருதப்படலாமா?’ என்று போடப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்டமைப்பு அமர்வின் தீர்ப்புக்குக் காத்திருக்கின்றன.

நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்த நீதிபதி கே.டி.தாமசு, தான் அந்தத் தீர்ப்பில் கைதிகளுக்கு மரண தண்டனை விதித்தது தவறு என்று கருதுவதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த வழக்கின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் டி.ஆர். கார்த்திகேயனும் அந்தக் குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை என்பது அதிகஅளவுத் தண்டனை என்று வேறொரு பேட்டியில் கூறியுள்ளார்.  ஒப்புதல் வாக்குமூலம் பதிவுசெய்த (சி.பி.ஐ.) அதிகாரி தியாகராசன், குற்றஉணர்வின் உந்துதலால் பேரறிவாளனின் வாக்குமூலத்தைத் திருத்தியது தவறு என்று தற்போது  வெளிப்படைடியான பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்வார்கள். இத்தனை கேலிக்கூத்துக்குப் பிறகுமாவது மூன்று கைதிகளுக்கும் மத்திய அரசு கருணை அளித்து மரணக் கொட்டடியிலிருந்து அவர்களை விடுவிக்க முன்வருமா?

இவ்வாறு வினா எழுப்பி முறையற்ற நடவடிக்கைகளால் தூக்கு மரத்தைத் தழுவ உள்ள மூவருக்கும் விடு தலை வழங்க வேண்டும் என்ற தம் கருததை நீதிநாயகம் கே.சந்துரு தெரிவித்துள்ளார்.