பௌத்த மயமாகும் தமிழர் தாயகம்

  ஐ. நா. சிறப்பு நிகழ்வில் மறைக்கப்பட்ட உண்மைகளை மறுக்க முடியாத ஆதாரங்கள் மூலம் அனைவர் கவனத்தையும் ஈர்த்த பிரித்தானியத் தமிழர் பேரவை

  செனீவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமைக் கழகத்தின் 33 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள்,  பன்னாட்டு அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானியத் தமிழர் பேரவை  அளித்த ஆவணங்கள் சிறிலங்காவின் முன்னைய அரசு மற்றும் இன்றைய “நல்லாட்சி” அரசின் நிலப் பறிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது.

   நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழக (UNHRC) கூட்டத் தொடரில் இலங்கையில் தமிழர்  பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்  படைத்துறை மயமாக்கல்,  நிலப்பறிப்பு தொடர்பாக நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. பிரித்தானியத்தமிழர் பேரவை (BTF), பசுமைத் தாயகம், அமெரிக்காவினை தளமாகக் கொண்டியங்கும்  அமெரிக்கத்தமிழர் அரசியற் செயலவை(USTPAC) இணைந்து இந் நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தனர்.

   தமிழர்  பகுதிகளில் அமைக்கப்படும் பௌத்த விகாரைகள், சிறிலங்கா படையினர் நடாத்தும் தொழில் முயற்சிகள் தொடர்பான விரிவான தகவல்கள் அடங்கிய புத்தகப்படி கடந்த வாரம் நடைபெற்ற 33ஆவது மனித உரிமை மாநாட்டில் அனைத்து நாட்டுச் சார்பாளர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது.

  மேலும் நிலப்பறிப்பு தொடர்பில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து  ஒளிப்பட ஆதாரங்கள் மூலமாக  பன்னாட்டுச் சார்பாளர்களுக்கு மேற்படி இணை நிகழ்வில் (Parallel event)  விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. 8 மாதங்களாக நடாத்திய ஆய்வின் அடிப்படையில்  படைத்துறை கவர்விற்கு(ஆக்கிரமிப்புக்கு) உட்பட்ட தமிழர் தாயகத்தின் மூலை முடுக்கெல்லாம்  ஓசையில்லாமல் கட்டியெழுப்பட்டு வந்த சிறிய பெரிய பௌத்த கட்டுமானங்கள்,  படைத்துறையினர் நடாத்தும் பொருளாதார நிறுவனங்கள் குறித்த ஆதாரபூர்வமான  ஒளிப்படங்கள், தரவுகள் பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின.

   இந் நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக உலகளாவிய  நிலையில் நிலப்பறிப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஓக்லாண்டு நிறுவனத்தின் அனுராதா மித்தல் (Executive Director, The Oakland Institute, USA), வெசு திரீட்டிங்கு (Member of Parliament, Vice Chair of All Party Parliamentary Group for Tamils), போல்  இசுகல்லி (Member of Parliament, Vice Chair of All Party Parliamentary Group for Tamils) போன்றோர் இணைந்து இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்  படையினர் மயமாக்கல், நிலக் கவர்வு தொடர்பில் தமது கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர்.

   இலங்கையில் தமிழர் பகுதியில் மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலக்கவர்வு, படைத்துறை மயமாக்கலுக்கு எதிராகப் பல தொடர்ச்சியான  நிலையான செயற்பாடுகளைப் பிரித்தானியத் தமிழர் பேரவை கடந்த பல வருடங்களாக மேற்கொண்டு வருகின்றது. கடந்த 2014ஆம் ஆண்டு இலண்டனில் பல நாட்டுச் சார்பாளர்கள், ஊடகவியலாளர்கள், வெவ்வேறு நாட்டின் தலை சிறந்த அறிஞர்கள், ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள் எனப் பலரை உள்ளடக்கி, இலங்கையில் நடைபெறும் நிலக்கவர்வு-அது தொடர்பான இலங்கை அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை வெளிக்கொணரும் முகமாக  பன்னாட்டு மாநாடு ஒன்று ஒழுங்கு செய்திருந்தனர்.  இதன் காரணமாகக் கடந்த கால அரசாங்கம் பல முனைகளில் இருந்து பல அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது.

   பன்னாட்டு அழுத்தம் காரணமாக இலங்கை அரசு, தான்  பறித்திருந்த சொற்ப அளவான நிலப் பகுதியினை விடுவித்துப்  பன்னாட்டு நாடுகளை ஏமாற்றும் செயற்படுகளை மேற்கொண்டது. எனினும் பிரித்தானியத் தமிழர் பேரவை  இவ் வருட மார்ச்சு மாதத்தில்  வன்முறையில் கவர்ந்த, விடுவிக்கப்பட்ட நிலம் தொடர்பில் தான் திரட்டிய விரிவான புள்ளி விவரங்கள் கொண்ட அறிக்கை ஒன்றினை உருவாக்கி அனைத்து நாடுகளிடம்  அளித்திருந்தது. குறிப்பாக வட மாகாணத்தில்  பறித்திருந்த 70,000  காணி(ஏக்கர்) நிலப்பரப்பில்  ஏறத்தாழ 2500  காணி(ஏக்கர்) நிலப்பகுதி மட்டுமே விடுக்கப்பட்டிருந்ததமை அம்பலப்படுத்தப்பட்டது.

   மேலும் இந் நிகழ்வில் பங்கு பற்றிய  பன்னாட்டு வல்லுநர் அனுராதா மித்தல் இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த பொழுது, உள் நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது இடங்களில் மீளக் குடியேறும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். எனினும் அங்கு மேற்கொள்ளப்படும்  படைத்துறை மயமாக்கல் இதற்குப் பெரும் தடையாக உள்ளது. ஏற்கெனவே சில இடங்களில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் அங்கு வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் அற்ற நிலைமையில் பெரும்  அறைகூவல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

   மக்கள் மீளக்குடியேற்றப்படட சம்பூர் பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள  படை முகாம், அவர்களினால் மேற்கொள்ளப்படும் தடைகள்  காரணமாக  அப்பகுதி மக்கள் மீன்பிடித்தல், வேளாண்மைபோன்ற தொழில்களை மேற்கொள்வதில்  பெரும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அத்துடன் இலங்கைப்படையினரால் இந்து ஆலயங்கள் பௌத்த ஆலயங்களாக மாற்றப்படுகின்றன. (இனப்படுகொலைப்)போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் முடிவடைந்த பொழுதும் இலங்கையின்  வடக்கு கிழக்கு பகுதியில்  பெரும் அளவில்  படைத்துறை மயமாக்கல் மேற்கொள்ளப்படுகின்றது.

 ஆறு பொது மக்களுக்கு ஒரு  படைஞன் என்னும் வகையில் தமிழர்  பகுதிகளில் பேரளவிலான படைத்துறைமயமாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் கிழக்குப் பகுதியில்  பேரளவில் மேற்கொள்ளப்படட சிங்கள மயமாக்கல் காரணமாகத் தமிழர்கள் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுள்ளனர். தற்போழுது இவ்வாறான நடவடிக்கைகளை வடக்கிலும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டுவருவதுடன் மைத்திரியின் புதிய அரசு, ஆட்சி அமைத்து ஒன்றரை வருடங்கள் கழிந்தும் கைதிகள் விடுதலை,  மீள நிலங்களை ஒப்படைத்தல் போன்ற விவரங்களில் நிலையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை, பொது மக்களின் இயல்பு வாழ்வில்   படைத்துறையினர் தலையீடு என்பன குறித்த தகவல்களை இவ் விணை நிகழ்வில் அனுராதா அவர்கள் வெளிப்படுத்தியிருந்தார்.

 காணொளிகள்:

  அனுராதா மித்தல் உரை :

 https://youtu.be/h0hZU-WmVM0

  நா.உ. உரை:

https://youtu.be/lxuhl4bYYxo

  பால் இசுகல்தி உரை:

 https://youtu.be/drwuWkJk6Zo

 பி.த.பே.பொதுச்செயலர் இரவி உரை:

 https://youtu.be/sa03MwzKNEg

 

 சங்கீத்து

ஒருங்கிணைப்பாளர்

பிரித்தானியத் தமிழர் பேரவை

 +44 (0) 7412 435 697