thalaippu_thamizh_aariyathirkum_thaaye

இந்திய மொழிகளின் தாயாம் தமிழ்

ஆரியத்திற்கும் தாயே!

            இவ்வாறு தமிழுக்கே உரிய இடைச்சொல் உரிச்சொல்களை ஆராய்கின்ற முறைமை வடமொழி நூலாராம் யாசுகருடைய நிருத்தத்தில் காணப்படுகின்றதாம். ஆகவே யாசுகரைப் பின்பற்றித் தொல்காப்பியர் கூறியிருப்பர் என அறிஞர் சுப்பிரமணிய சாத்திரியார் கருதுகிறார். (History of grammatical theories in Tamil : pages 198, 301) யாசுகருடைய காலம் தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்டமையின், அவ்வாறு கருதுதல் பொருந்தாது. யாசுகர் தொல்காப்பியரைப் பின்பற்றி நூல் செய்திருத்தல் கூடும் என்று கூறினால் மிக மிகப் பொருந்துவதாகும். ஆனால் சாத்திரியார் அவர்கள் வடமொழிப் பற்றின் காரணமாக இவ்வுண்மையை உணர்ந்திலர் போலும், வடமொழியாளர் பிறரால் பின்பற்றப்பட வேண்டியவர்களே யன்றிப் பிறரைப் பின்பற்ற மாட்டார்கள் என்ற துணிபு பல நூல்களையும் கற்றறிந்த சாத்திரியாரையும் விட்டிலை போலும். சாத்திரியார் நினைப்பது போல் ஆசிரியர் தொல்காப்பியர் அவ்வாறு வட மொழிப் பிராதி சாக்கியங்களையும், யாசுகருடைய நிருத்தத்தையும் பாணினியினுடைய இலக்கணத்தையும் பின்பற்றித் தம் நூலை அமைத்திருப்பின் வெளிப்படையாகக் குறிப்பிட்டுக் கூறியிருப்பர். அவ்வாறு கூறாததனால் சாத்திரியார் கருத்து ஆய்வு முறைக்குப் பொருத்தமற்றது என அறிதலே ஏற்புடைத்து, இந்திய மொழிகளின் தாயாம் தமிழ், ஆரியத்திற்கும் தாயாம் என்ற உண்மை அறிபப்படும் காலம் சேய்மையில் இன்று.

            ” சதுர்மறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின்

            முதுமொழி நீ அனாதியென மொழிவதும் வியப்பாமே

என்ற பேராசியர் சுந்தரனார் கூற்றை உன்னுக.

– பேரா.சி.இலக்குவனார் :

தொல்காப்பிய ஆராய்ச்சி : பக்கம் : 114