கடலோனியா நா.உ. : catolaniaM.P.

இலங்கைத் தீவில் தமிழர் தேசத்திற்கான ஏற்பும், தன்னாட்சி உரிமையும் வழங்கப்பட வேண்டும்! – கடலோனியா  நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கைத் தீவில் தமிழர் தேசத்திற்கான ஏற்பும், தன்னாட்சி உரிமையும் வழங்கப்பட வேண்டுமென  இசுபெயின் நாட்டில் பிரிந்து செல்லும் உரிமை கோரிப் போராடும் கடலோனியா (Cataloniya) மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அல்போன்சு  உலோபெசு   தேனா தெரிவித்துள்ளார்.

கடந்த  பங்குனி 10, 2047 / மார்ச்சு 23, 2016  அன்று பிரித்தானியாவின் பாராளுமன்றத்தில் பிரித்தானியத் தமிழர் பேரவையினரால் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஒன்று கூடல் நடத்தப்பட்டது. பிரித்தானியத்தலைமையாளரின் வாழ்த்துச் செய்தியுடன் நடைபெற்ற இவ் ஒன்றுகூடலில் பிரித்தானியாவின் பல தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை தொடர்பான செயற்ப்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இங்கு கருத்துரைத்த  இசுபெயின் நாட்டில் பிரிந்து செல்லும் உரிமை கோரிப் போராடும் கடலோனியா (Cataloniya) மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவரும் கடலோனிய  விடுதலைக்கான ஒருமைப்பாட்டு அமைப்பினை (Catalan Solidarity for independence) உருவாக்கியவருமான அல்போன்சு உலோபெசு  தேனா, “பிரித்தானியத் தமிழர் பேரவையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவினருடனான ஒன்று கூடலுக்கு அழைப்பு கிடைத்தமைக்குப் பெருமை அடைகின்றேன். ஒரு கடலன் (Catalan) என்கின்ற முறையிலும்  இசுபெயின் நாட்டின் முன்னாள் நீதித்துறையின் உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் என்கின்ற வகைகளிலும் இலங்கைத் தீவில் உள்ள தமிழர் தேசத்தின் நிலைமை,  ஏற்பிற்கான போராட்டம், அதன் இருப்பு, மனித உரிமைகள், நீதி, விடுதலை என்பவற்றைப் புரிந்து கொள்வதுடன் அவற்றினை ஏற்றுக் கொண்டுள்ளேன்.

நீதி விசாரணையும் தண்டனையளித்தலும், போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் இடம் பெறாது தடுத்தல் என்பவற்றினூடாக  மதிப்பும் நீதியும் கூடிய இறுதியான  அமைதியை ஏற்படுத்த வேண்டும். இலங்கைத் தீவில் தமிழர் தேசத்திற்கான  ஏற்பினை வழங்குதல், தமிழர்களுக்கான ஆட்சி அதிகாரங்களை உறுதிப்படுத்தல், இலங்கையில் உள்ள இரு தேசிய இனங்களுக்கும் அதிகாரங்களைப் பகிர்தல், எதுவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி தமிழர்களின்  தன்னாட்சி உரிமை வழங்கப்படல் போன்ற இன முரண்பாட்டு அடிப்படைக் காரணிகளின் தீர்வு கொடுக்கப்பட வேண்டும். இவ் இலக்கை அடைவதற்கு தொடர்ந்து உங்கள் எல்லோருடனும் சேர்ந்து பணியாற்ற விரும்புகின்றேன்” என்றார்.