செம்மொழிப் போர்மறவர் சி.இலக்குவனார்

தமிழ்வாழ்த்து

(கலித்துறை)

அகர முதலா னவளே அமிழ்தே அருள்வாய்

இகர உகர உடல்நீ உயிர்நீ உணர்வாய்

பகர்கிறே னிப்பா வரங்கில் பரவசம் கொள்வாய்

பகர்வாய்  பகர்வதி ளங்குமர னல்லதமிழ் தானென்றே!

(நேரிசை வெண்பா)

தந்தைக்கு வாய்த்த தவப்புதல்வன் செந்தமிழ்ச்சீர்

சிந்தை நிறைதிரு வள்ளுவன் – தந்தைதந்த

செந்தமிழ்க் காப்புக் கழகமதை செவ்வனே

முந்தியே காப்பார் முனைந்து

(நேரிசை வெண்பா)

தனித்தமிழை மீட்டெடுத்த தன்மான வீரன்

கனித்தமிழ்ச் சொல்லன் கணியன் – இனித்ததமிழ்

கல்விமொழி யாவதற்குக் கண்ணுறக்கம் விட்டொழித்த

வல்லார் இலக்குவனார் வான்.

பூவில் மதுவிருக்கும் பொன்னில் ஒளியிருக்கும்

காவில் மணமிருக்கும் கண்டிருப்பீர் – நாவினில்

நற்றமிழ்ச் சுவைமணக்க நாளெல்லாம் தொண்டுசெய்த

பொற்றமிழர் லக்குவனார் காண்.

(எண்சீர் விருத்தம்)

துள்ளிவரும் சொல்லடுக்கி உணர்வை ஊட்டி

தூயதமிழ்ப் பேச்சாலே படையைக் கூட்டி

எள்ளிநகை யாடியதீப் பகையை ஓட்டி

இன்றுவரைத் தென்புலத்தில் நிலைக்கா வண்ணம்

கள்ளிருக்கும் மலர்க்கூட்டம் கமழு கின்ற

காடாக்கிக் காட்டியவர்; இந்தி என்னும்

கள்ளியினைத் தோலுரித்துத் தொங்க விட்ட

உள்ளொளியாம் இலக்குவரைப் போற்ற வாரீர்!

(அறுசீர் விருத்தம்)

வாழ்நா ளெல்லாம் தமிழுக்காய்

வளமும் நலமும் சேர்த்திட்டார்

வீழ்நா ளில்லாத் தமிழ்த்தொண்டால்

வெள்ளம் போல மாணவர்கள்

சூழ்ந்து நின்று இந்திதனை

சூரை கொள்ளத் துணிந்திட்டார்

சூழ்கொள் மாணவர் போர்வாளாய்

சுழன்றார் களத்தில் இலக்குவனார்!

பொங்கும் தமிழின் புகழோங்க

சங்கத் தமிழ்நூல் ஆய்ந்தளித்தார்

எங்கும் தமிழே நிறைந்திருக்க

இலக்காய் உரைகள் பலதந்தார்

மங்காத் தமிழின் பெருமையினை

மாநில மெங்கும் எடுத்துரைத்தார்

தங்கத். தமிழே தமிழ்நாட்டின்

ஆட்சி கல்வி மொழியெனறார்.

உலகத் தமிழின் குடிப்பெருமை

உலகோர் பலரும் உணர்ந்திடவே

உலகின் முதல்தாய் ஈன்றெடுத்த

ஒல்காப் புகழ்த்தொல் காப்பியத்தை

உலக மொழியாம் ஆங்கிலத்தில்

ஒப்பில் லாமல் மொழிபெயர்த்த

உலகத் தமிழர் இலக்குவனார்

ஒல்காப் புகழைப் போற்றுவமே!

புலவர் ச.ந.இளங்குமரன்

வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.