வல்லமை மின்னிதழ், 7 ஆண்டுகளை நிறைவு செய்து, எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தப் பயணத்தில் உடன் நிற்கும் ஆசிரியர் பவளசங்கரி, மேகலா இராமமூர்த்தி, சாந்தி மாரியப்பன், முனைவர் காயத்திரி பூபதி, முனைவர் செல்வன்  முதலான ஆசிரியர் குழுவினர், வழங்கிச் செயற்பாட்டாளர் ஆமாச்சு, தளச் செயற்பாட்டாளர் சீனிவாசன்,  அறிவுரைஞர்கள்,  எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வறிஞர்கள், வாசகர்கள்  முதலான அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்

  8ஆம் ஆண்டில் நுழைந்துள்ளதை முன்னிட்டு, வாசகர்களுக்கு ஓர் இனிய பரிசாக, வல்லமையின் ஆண்டிராய்டு செயலியை வெளியிட்டுள்ளோம். கூகுள்காணாட்டப் பண்டகச்சாலையிலிருந்து பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள் – https://play.google.com/store/apps/details?id=com.vallamai.android இனி, ஆண்டிராய்டு திறன்பேசி வைத்திருப்போர், தங்கள் அலைபேசியிலேயே வல்லமையைப் படித்து மகிழலாம். இதனைக் குறுகிய காலத்தில் உருவாக்கிய கலீல் சாகீருக்கு நன்றி.

  சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வாரந்தோறும் வல்லமையாளர் விருதுகளை வழங்கி வருகிறோம். முனைவர் செ.இரா.செல்வக்குமாரைத் தொடர்ந்து, முனைவர் செல்வனின் ஒத்துழைப்புடன் 222ஆவது வாரமாக வல்லமையாளர் விருதினை வழங்கியுள்ளோம். வாசகர்களின் பேராதரவுடன் படக் கவிதைப் போட்டி, 112ஆவது வாரத்தை எட்டியுள்ளது. கடினமான இப்பணியை மேகலா இராமமூர்த்தி செம்மையாக ஆற்றி வருகிறார்.

  கிரேசி மோகனின் புதுமையான கோணத்தில் ‘கேசவு வண்ணம் – கிரேசி எண்ணம்’ இரட்டை விருந்தாக, ஓவியமும் கவிதையுமாக நாள்தோறும் வெளியாகி வருகிறது. முனைவர் சுபாசிணியின் அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம், 87 வாரங்களை எட்டியுள்ளது. இன்னம்பூரானின் நாளொரு பக்கம், இசைக்கவி இரமணனின் சித்தத்தில் சில சித்திரக் குமிழிகள், அண்ணாமலை சுகுமாரனின் வரலாறுகளின் வேர், க. பாலசுப்பிரமணியனின் கற்றல் ஓர் ஆற்றல், திருமந்திரத்தில் தேன் துளிகள், நிர்மலா இராகவனின் நலம் .. நலமறிய ஆவல், மீனாட்சி பாலகணேசின் இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் என வண்ணக் கோலமாகப் படைப்புகள் அணி வகுக்கின்றன.

  சி. செயபாரதனின் அறிவியல் கட்டுரைகள், எழிலரசி கிளியோபாத்திரா,  உமர் கயாம் ஈரடிப் பாக்கள் என ஒவ்வொன்றும் தனித்துவமும் முதன்மைத்துவமும் வாய்ந்தவை. எளிய தமிழில் இவ்வளவு விரிவான விண்ணியல் / அறிவியல் ஆக்கங்கள், அச்சிதழ்களில் வெளிவருவதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. மலர்சபாவின் நான் அறிந்த சிலம்பு, சக்தி சக்திதாசனின் இங்கிலாந்திலிருந்து ஒரு மடல், செண்பக செகதீசனின் குறளின் கதிர்களாய், என அடுக்கடுக்கான படைப்புகள், வாசகர் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

  தொடர்கள் மட்டுமல்லாது தனிப் படைப்புகளும் தங்கள் தனி முத்திரையைப் பதித்து வருகின்றன. இவ்வகையில் வையவன், விப்பிரநாராயணன், பழமைபேசி, ஒரு அரிசோனன், எசு.வி.வேணுகோபாலன், மீ.விசுவநாதன், மு. இளங்கோவன், எம். இரிசான் செரீப், தமிழ்த்தேனீ, கவிஞர் சவகர்லால், செயராமசர்மா, முல்லை அமுதன், மணிமுத்து, வேதா. இலங்காதிலகம், இராசகவி இராகில், நா. பார்த்தசாரதி, கருமலைத்தமிழாழன், பெருவை பார்த்தசாரதி, கவியோகி வேதம், சுபாசிணி திருமலை, சரசுவதி இராசேந்திரன், உமாசிரீ, பொன். இராம், நாகினி, பா. இராசசேகர் முதலான பலரின் பங்களிப்புகளும் வல்லமைக்கு வலிவும் பொலிவும் சேர்த்து வருகின்றன.

  வல்லமை வாசகர்களின் கேள்விகளுக்குப் பேராசிரியர் இ.அண்ணாமலை அளித்த விடைகளின் தொகுப்பு, அடையாளம் பதிப்பகத்தின் சார்பில் விரைவில் நூல்வடிவம் பெறுகிறது. வல்லமையாளர்களின் தொகுப்பும் விரைவில் மின்னூலாக வெளிவர உள்ளது.

  வல்லமையில் இன்று வரை 12,363 இடுகைகளை வெளியிட்டுள்ளோம். 12 ஆயிரம் பின்னூட்டங்களைப் பெற்றுள்ளோம். பல்லாயிரம் வாசகர்கள், உலகெங்கும் இருந்து வல்லமையைத் தொடர்ந்து வாசித்து வருகிறார்கள். வல்லமையின் கூகுள், பிளிக்கர், முகநூல், பகிர்பேசி குழுமங்கள், தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றங்களுக்குக் களம் அமைத்துள்ளன. சிந்தனை, செயல், முன்னேற்றம் என்ற இலக்குடன் திடமாக, ஆக்கப்பூர்வமாகச் செயலாற்றி வரும் வல்லமையை வாழ்த்துங்கள். தொடர்ந்து வாசியுங்கள். படைப்புகளை அனுப்புங்கள். ஆர்வமுள்ளோர், ஆசிரியர் குழுவுடன் இணைந்து செயல்படலாம். உங்கள் அறிவுரைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.

இன்னும் செய்வதற்கு நிறைய இருக்கிறது. உங்கள் ஆதரவுடன் அவற்றைச் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இணைந்திருங்கள், இன்னும் சாதிப்போம்.

அண்ணாகண்ணன்

வல்லமை எட்டுத்திக்கிலும் பறக்க வாழ்த்தும் பெருவை பார்த்தசாரதி

 
சிந்தனை செயல் முன்னேற்ற மெனும்
சீரிய நோக்கில் ஆண்டேழைக் கடந்து

எடுத்துக் கொண்ட மூன்றிலக்கை முற்றாக.
எட்டுமுன் நோக்கோடு பட்டுச் சிறகுவிரித்து

எட்டா மாண்டிற்குள் நுழைந்து மேலும்
எட்டு திக்கிலும்நீ பறக்க வேண்டும்!

மின்னி தழோடு நில்லாமல் தழைத்துமேலும்
மின்னு மிதழாக நானிலத்தில்நீ வரவேண்டும்!

எட்டாதிருக்கும் இனியபல கனியை இனி
எட்டிப் பறித்திட இணைந்து முயல்வோம்!

மற்றை ஒவ்வொன்றாக எட்டும் முன்னே
ஒற்றை எட்டில் அடுத்ததை எட்டுவோம்!

வலிய தமிழாலே உறவெமக்கு உண்டென்றாலது
வல்லமைக்கு ஈடாக வேறேதும் இல்லையன்றோ!

தேன்தமிழை தேசம்விட்டுத் தேசம் சென்று
மின்இதழால் வாசம் பரப்பும் வலையன்பருக்கும்

வல்லமைக்கும் வாழ்த்து சொல்லி தமிழால்
வலு சேர்க்கும் வண்ணம்நாம் ஒன்றிணைவோம்!

வல்லமையெனும் தமிழ்த்தேர் உலகெலாம் வலம்வர
வளமிக்க தமிழுடன் வடம்பிடிக்க வாரீர்வலிமையுடன்!

அன்புடன்
பெருவை பார்த்தசாரதி

http://www.vallamai.com/?p=76963